கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் வழக்கம் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் இருந்தது. இதுபோல் ஒரு வினோத பழக்கம் தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்தில் இருந்துள்ளது.
சோழர் காலத்தில் அரசர்கள் இறந்த பிறகு தமக்குப் பிடித்தமான நபர்களையும் தங்களது உடலுடன் சேர்த்து புதைக்கச் செய்துள்ளனர்.
இறந்த பின்பும் தன்னுடன் அவர்கள் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையில் அதைச் செய்து சோழர்கள் ஆட்சியில் கல்வெட்டிலும் பதிவு செய்து வைத்துள்ளனர். அப்படி சோழர்கள் ஆட்சியில் நடைபெற்ற ஒரு வினோத சம்பவம் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
குலோத்துங்க சோழன் அரசாட்சியில் திருவண்ணாமலை அருகே சிற்றரசன் பிரிதிகங்கன் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இந்த வினோதமான சம்பவம் பற்றித் தெரிந்துகொள்ள தாமரைப்பாக்கம் கிராமத்திற்குச் சென்றோம்.
இறந்த அரசருடன் உயிரோடு புதைக்கப்பட்ட 3 பெண்கள்
கோவிலின் உள்ளே நுழைவதற்கு முன்பாகவே கல்வெட்டு பதிவு குறித்து பிபிசி தமிழுடன் வந்திருந்த திருவண்ணாமலை வட்டாட்சியரும், மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலருமான பாலமுருகன் விவரித்தார்.
பாடகர்களான மூன்று பெண்கள் பிருதிகங்க மன்னன் இறந்தபோது அவரோடு சேர்த்து உயிருடன் புதைக்கப்பட்ட செய்தியைக் கூறும் மூன்று கல்வெட்டுகள் தாமரைப்பாக்கத்தில் அமைந்துள்ள அக்னீசுவரர் கோவிலில் உள்ளதாக அவர் கூறினார்.
அதில், “முதல் கல்வெட்டு தாமரைப்பாக்கம் அக்னீசுவரர் கோவில் முன்மண்டப கிழக்குச் சுவர் மற்றும் அரைத்தூணில் உள்ள 14 வரிக் கல்வெட்டாக உள்ளது.
‘ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவந சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 10வது சோமனான பிருதி
கங்கனேன் எங்களய்யர் கூத்தாடுந் தேவரான பிருதிகங்கர் உடன் பள்ளிகொண்ட பாடும் பெண்…’
எனத் தொடங்கும் கல்வெட்டைப் படித்துக் காண்பித்து விளக்கம் கூறினார் பாலமுருகன்.
இழப்பீடாக வழங்கப்பட்ட நிலம்
மூன்றாம் குலோத்துங்கனின் 10ஆம் ஆட்சி ஆண்டான கி.பி. 1188இல் அரசர் பிருதிகங்க சோமநாதன் இந்தக் கல்வெட்டை வெட்டியதாகக் கூறுகிறோர் பாலமுருகன்.
அதில், “தமது இறந்த தந்தை அரசன் கூத்தாடும் தேவ பிருதிகங்கனுடன் புதைகுழியில் உயிருடன் புதைக்கப்பட்ட பாடும் பெண்டிர் மூவர் குடும்பத்தாருக்கு இழப்பீடாக நிலம் வழங்கியதாக” கூறப்பட்டுள்ளது.
அவர்களுடைய இழவு வருத்தத்தை தீர்க்கவும் பிள்ளைகள் இல்லாமல் போனதற்கு இழப்பீடாகவும் 16 சாண் கோலால் அளந்துவிட்ட ஒரு வேலி நிலம் அந்தப் பெண்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டதாக விவரித்தார் பாலமுருகன்.
அந்த நிலம் அவர்களது வம்சம் உள்ளவரையில் அவர்களுக்கு உரிமையாக இருக்கும் என அந்தக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தன் வம்சத்தார் பிற்காலத்தில் யாரேனும் கொடையாகக் கொடுத்த நிலத்தில் வில்லங்கம் செய்தால், அவர்கள் ‘மதுராந்தக வேளான் குண்டி கழுவிய மல தண்ணீரைக் குடித்து எச்சில் கலத்தில் சோறு உண்டவராவார்’ என வசைமொழிந்திருப்பதையும் கல்வெட்டு ஆதாரம் காட்டுகிறது.
அதுமட்டுமின்றி, கங்கைக்கும் குமரிக்கும் இடையே வாழும் மக்கள் செய்த பாவங்களையும் வில்லங்கம் செய்பவர் கொள்வார் என்று அரசர் பிருதிகங்க சோமநாதன் கல்வெட்டில் சபித்துள்ளதாக பாலமுருகன் விளக்கினார்.
இதுகுறித்த கல்வெட்டு ஆதாரங்கள் ‘தாமரைப்பாக்கம் கல்வெட்டு’ என்ற பெயரில் தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை சார்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
புதைக்கப்பட்ட மூன்று பெண்கள் யார்?
கோவிலின் முன் மண்டப கிழக்குச் சுவரில் இருந்த 4 வரிக் கல்வெட்டைக் காட்டினார் வட்டாட்சியர் பாலமுருகன்.
அதில் இருந்த, “ஸ்வஸ்தி… பிருதிகங்க எங்களய்யர் கூத்தாடுந் தேவரான பிருதிகங்கருடன் பள்ளிகொண்ட ஆடும் ஆழ்வார்க்கும், சதுர நடைப்பெருமாள்க்கும், நிறைதவந் சேதாளுக்கும்” என்ற வரிகளைப் படித்துக் காட்டி விளக்கினார்.
அதன்படி, மூன்றாம் குலோத்துங்கனின் 10ஆம் ஆட்சி ஆண்டான கி.பி. 1188இல் சிற்றரசர் சோமநாத பிருதிகங்கன் “தமது இறந்த தந்தை அரசன் கூத்தாடும் தேவ பிருதிகங்கனோடு சவக்குழியில் உயிருடன் புதைக்கப்பட்டவர்கள் ஆடும் ஆழ்வார், சதுரநடைப் பெருமாள், நிறைத்தவஞ்சேதாள் ஆகிய மூன்று தேவரடியார் குலப் பெண்கள்” என்று விளக்கினார்.
மேலும், அந்தப் பெண்களுக்கு பிள்ளையின்றிப் போனதற்கு, அதாவது அவர்களுடைய வம்சம் அழிந்து போனதற்கு “இழப்பீடாக வழங்கப்பட்ட நிலம் பதினாறு சாண் அளவுகோலால் அளந்து தரப்பட்டது,” என்றும் கூறுவதாகத் தெரிவித்தார்.
இந்தக் கல்வெட்டில் உயிருடன் புதைக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவில் முன் மண்டப தென்புறச் சுவரில் 5 வரிக் கல்வெட்டு ஒன்றும் உள்ளது.
“ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 10வது ஆடும் ஆழ்வாரும்…” எனத் தொடங்கும் அந்த மூன்றாவது கல்வெட்டைப் படித்து விளக்கினார் பாலமுருகன்.
“சோழன் மூன்றாம் குலோத்துங்கனின் 10ஆவது ஆட்சி ஆண்டில் கி.பி 1188இல் ஆடும் ஆழ்வார், சதுரநடைப் பெருமாள், நிறைதவஞ்சேதாள் ஆகிய மூன்று பாடும் தேவரடியார் குலப் பெண்களின் வீட்டில் பிள்ளை இல்லாமல் போனதற்காக திருவங்கீசுவரமுடைய நாயனார் கோவில் தேவரடியார் ஐவருக்கு இத்துயர உடன்பாட்டிற்காக பதினாறு சாண் கோலால் அளந்து ஆயிரம் மேற்பட்ட குழி நிலத்தை பிருதிகங்க அரசன் சோமநாத தேவன் கொடுத்தான்.
இதை இல்லாமல் செய்பவன் கங்கைக்கும் குமரிக்கும் இடையே வாழும் மக்கள் செய்யும் பாவத்தைக் கொள்வான் என்று இழப்பீடு நிலம் யாருக்குக் கொடுக்கப்பட்டது என்பது தெளிவாக இந்தக் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.”
ஆனால், இங்கு அந்த மூன்று பெண்களின் பட்டப் பெயர்கள் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளன, அதேவேளையில் இங்கு இழப்பீடு நிலம் வாங்கிய ஐந்து தேவரடியார்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று கூறிய வட்டாட்சியர் பாலமுருகன் தாமரைப்பாக்கம் கோவில் கல்வெட்டுகள் மிக வித்தியாசமான வினோத சம்பவங்களைப் பதிவு செய்துள்ளதாகக் கூறினார்.
இந்தக் கல்வெட்டு ஆதாரங்களின் மூலம் அக்காலத்தில் பெண்களின் நிலைமை மற்றும் அவர்களின் சமூக நிலையை நாம் அறியலாம் என்கிறார் பாலமுருகன். அதோடு, எல்லாக் காலத்திலும் பெண்கள் துன்பத்திற்கு ஆளானார்கள் என்பதற்குச் சான்றாகவும் இது விளங்குவதாகக் கூறினார்.
ஆந்திரா, கர்நாடகாவிலும் இருந்த ‘உடன் புதைக்கும்’ பழக்கம்
இத்தகைய வினோத பழக்க, வழக்கங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்துப் பேசிய விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ், “வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான கல்வெட்டுகள் ஒரு சில இடங்களிலேயே காணக் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளிலும் இதுபோன்ற கல்வெட்டுகள் இருப்பதாக” கூறினார்.
மைசூர் மாவட்டம், தொட்ட ஹூண்டி கிராம குளத்தில் உள்ள 24 வரி கல்வெட்டு, இறந்த கணவனுடன் மனைவி பள்ளிகொண்டதைத் தெரிவிக்கிறது.
அதேபோல் பெல்லாரி மாவட்டம் கலுகோடு கிராமத்திற்குத் தெற்கே உள்ள பலகையில் வெட்டிய 25 வரி கன்னட கல்வெட்டு இறந்த மன்னருடன் படைவீரன் ஒருவரும் சேர்த்துப் புதைக்கப்பட்டதாகக் கூறினார் பேராசிரியர் ரமேஷ்.
மேலும் வெளிநாடுகளிலும் இதுபோன்ற கல்வெட்டுப் பதிவுகள் காண கிடைக்கின்றன. அக்கால மக்களின் அதீத நம்பிக்கை அல்லது அரசர்களின் வானளாவிய அதிகாரத்தின் ஒரு வெளிப்பாடு என்றுகூட இதைச் சொல்லலாம் என்கிறார் பேராசிரியர் ரமேஷ்.
மேலும், “அக்காலத்தில் மன்னர்கள் இறைவனுக்கு நிகராக மதிக்கப்பட்டனர். அவர்களுடைய வார்த்தை இறை வார்த்தைக்கு இணையாக மதிக்கப்பட்டதும் ஒரு காரணம்.
ஆகையால், இதை அறியாமையின் செயல் அல்லது அதிகாரத்தின் வெளிப்பாடு எனக் கருதலாம்,” என்றார் பேராசிரியர் ரமேஷ்.
அதிகார பண்பாட்டின் நீட்சி
இதுபோன்ற வினோத சம்பவங்கள் குறித்தும் இதுபோன்ற வினோத பழக்கங்களை அக்கால மக்கள் பின்பற்றியது குறித்துப் பேசிய மருத்துவர் உதயகுமார், “உடன்கட்டை ஏறுதல், பள்ளிக்கொள்ளல், தன்னைப் பலியாக்கிக் கொள்ளுதல் போன்ற நிகழ்வுகள் அனைத்தையும் மனப் பிறழ்வு எனக் கூற முடியும் என்னும் அவர், இதற்கு “அதிகாரத்தின் உச்ச வெளிப்பாடு என்பது சரியான சொல்” என்று கூறினார்.
இது மூட நம்பிக்கையின் உச்சம் என்று கூறும் உதயகுமார், “விலைமதிக்க முடியாத தனது உயிரையே துறத்தல் என்பது வேதனைக்குரியது,” என்றார்.
அக்காலத்தில் இறந்த பின்பும் வேறொரு உலகம் உள்ளதாகச் சொல்லும்போது தனக்குப் பிடித்தமானவர்களுடன் சென்று வாழ முடியும் என்ற நம்பிக்கை இருந்ததுகூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் அவர்.
“இறந்த உடலுடன் அவர்களுக்கு விருப்பமான பொருட்களைப் புதைத்து வந்ததைப் போல் அவர்களுக்கு விருப்பமான மனிதர்களையும் சேர்த்துப் புதைக்கும் பழக்கம் ஒரு காலத்தில் இருந்தது. இதை உயிர்த் தியாகம் என்று சொல்லப்பட்டாலும் மூடநம்பிக்கை என்று சொல்வதுதான் சரி,” என்கிறார் மனநல மருத்துவர் உதய்குமார்.
பிபிசி தமிழ்