திருச்சியில் வாலிபர்களிடன் இருந்து காதலியை காப்பாற்றி பலியான கல்லூரி மாணவர் ஜீவித் பற்றிய உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி:
திருச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவாக்குடியில் என்.ஐ.டி. கல்லூரி மாணவி அதிகாலை 3 மணிக்கு காதலனுடன் பஸ் நிறுத்தத்தில் பேசிக்கொண்டிருந்தபோது 2 பேர் காதலனை அடித்து விரட்டி விட்டு மாணவியை காட்டு பகுதிக்குள் தூக்கி சென்று பலாத்காரம் செய்தனர்.
கடந்தாண்டு ஜனவரி மாதம் சமயபுரம் இருங்களூரில் காட்டுக்குள் தனிமையில் இருந்த காதல் ஜோடியை மிரட்டி இளம்பெண்ணை கற்பழித்த கும்பல், தடுத்த காதலனை கத்தியால் குத்தி கொலை செய்தது.
இந்த 2 சம்பவத்திலும் காரணமானவர்களை போலீசார் கைது செய்தனர். இதே போன்று தான் கொள்ளிடம் பழைய இரும்பு பாலத்தில் தனிமையில் இருந்த ஜீவித், இந்து ஜோடியை கோகுல், கலையரசன் ஆகியோர் மிரட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது வாலிபர்கள் 2 பேரும் போதையில் இருந்துள்ளனர். தனது காதலியிடம் அவர்கள் அத்துமீறுவதை பார்த்து ஆத்திரமடைந்த ஜீவித் முதலில் அவர்களிடம் கெஞ்சி உள்ளார்.
ஆனாலும் அவர்கள் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபடவே ஜீவித் 2 பேரையும் தடுத்து போராடி இந்துவை மீட்டுள்ளார். காதலியின் கற்பை காப்பாற்ற அவரை அங்கிருந்து ஓடிவிடு, இவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி, இந்துவை அவர்கள் நெருங்காதபடி தடுத்து போராடினார்.
உடனே இந்து அங்கிருந்து தப்பி பாலத்தின் வழியாக சமயபுரம் ரோட்டுகரைக்கு வந்துள்ளார். அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த மற்றும் சலவைத்தொழிலாளர்களிடம் நிலைமையை எடுத்துக்கூறி ஜீவித்தை மீட்க வந்துள்ளார்.
ஆனால் ஜீவித் அங்கு இல்லை. கோகுல் மற்றும் கலையரசனுக்கு தர்மஅடி கொடுத்து, கேட்டபோது அவர் ஆற்றில் குதித்து விட்டதாக கூறியுள்ளனர்.
ஆனால் தங்களுக்கு இந்துவை கிடைக்காமல் செய்ததால் காமம் மற்றும் போதை உச்சத்தில் இருந்த 2 பேரும் ஜீவித்தை அடித்து கொள்ளிடம் ஆற்றில் தூக்கி வீசியிருக்கலாம் அல்லது தள்ளி விட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.