பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பிரித்தானியாவில் இனி எந்த காலத்திலும் கால்வைக்க முடியாது. அவருக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் சர்வதேச பிடியாணை விதிக்க உத்தரவிட்டாலும் ஆச்சரியப்படத்தக்க ஒன்றாக இருக்காது
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவைக் காப்பாற்றும் முனைப்பில் மாத்திரம் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதைக் கொண்டு, குற்றமிழைத்த படையினருக்கு புகலிடம் அளித்து – பாதுகாப்பதில் அதற்குள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருக்கிறது
இலங்கையின் இராணுவ அதிகாரி ஒருவர் முதல் முறையாக வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டு, அவரைக் கைது செய்வதற்கும் பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் – சைகை மூலம் எச்சரிக்கை விடுத்தார் என்ற குற்றச்சாட்டிலேயே வசமாக சிக்கி இருக்கிறார் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை நோக்கி, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கழுத்தை அறுத்து விடுவேன் போன்று எச்சரிக்கை செய்த காட்சி அடங்கிய வீடியோ பதிவுகள் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்தச் சம்பவத்தை அடுத்து கடுமையான விமர்சனங்கள் தோன்றியிருந்த நிலையில், அப்போது பதவியிலிருந்த கூட்டு அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சு, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை பாதுகாப்பு ஆலோசகர் பணியிலிருந்து இடைநிறுத்தியது. அவரை உடனடியாக கொழும்புக்கு திருப்பி அழைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விவகாரத்தில் தலையீடு செய்து தொடர்ந்து அவரை பாதுகாப்பு ஆலோசகராக உத்தரவிட்டிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கை அப்போது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் , பிரித்தானியாவில் அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
உடனடியாக பிரிகேடியர் பிரியங்கவை, கொழும்புக்கு திருப்பி அழைக்குமாறு, பிரித்தானியா இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக கூறியது. ஆனால் மீண்டும் அவரை பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டதையடுத்து, பிரித்தானிய தனது இன்னொரு பக்கத்தைக் காண்பித்தது.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு உள்ள இராஜதந்திர பாதுகாப்பு உரிமையை விலக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும் என்று எச்சரித்தது. அப்போது லண்டனில் பொலிஸ் விசாரணைகளும் தொடங்கப்பட்டிருந்ததால், இராஜதந்திர விலக்குரிமை நீக்கப்பட்டால், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கைது செய்யப்படும் நிலை ஏற்படும் என்பதால், அவசர அவசரமாக அவர் கொழும்புக்கு திருப்பி அழைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பின்னர் இப்போது மீண்டும் பிரிகேடியர் பிரியங்க விவகாரம் தலையெடுத்திருக்கிறது. அவருக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பே இந்தப் பரபரப்புக்குக் காரணம்.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக , தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவர் மீது மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. அதில், பொது ஒழுங்குகள் சட்டத்தின் இரண்டு பிரிவுகளை பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீறியுள்ளார் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த நிலையில் தான் அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(11ஆம் பக்கம் பார்க்க)
இராணுவ நடவடிக்கைக்கு….(தொடர்ச்சி)
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக, வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாகவோ, நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாகவோ, வெளிவிவகார அமைச்சிடம் இருந்து எந்த தகவலும் தமக்கு தெரிவிக்கப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறியிருக்கிறார்.
பிரித்தானிய நீதிமன்றத்தின் உத்தரவு அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ஏனென்றால், இராஜதந்திரிகளுக்கு வெளிநாடுகளில் பாதுகாப்பு அளிக்கும் வியன்னா பிரகடனத்தின் மூலம், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை, காப்பாற்றிக் கொள்ளலாம் என்றே அரசாங்கம் நினைத்திருந்தது.
நீதிமன்றத்தில் இந்த விவகாரம் வந்தபோது, லண்டனில் உள்ள இலங்கை தூதரகம், அவருக்கு இராஜதந்திர பாதுகாப்பு உள்ளது என்றும், நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலக்குப் பெறும் உரிமை உள்ளது என்றும் பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்துக்கு அறிவித்திருந்தது.
ஆனால், தமது நாட்டின் நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் தலையீடு செய்ய முனையவில்லை. அவ்வாறு தலையீடு செய்திருந்தால், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவைக் கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்காது.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்தை விட்டுப் பிடிக்கும் திட்டத்துடன் இருப்பதாகவே தோன்றுகிறது.
பிரித்தானியா உள்ளிட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் அளித்திருந்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்றுவதாக இலங்கை அரசாங்கம் கூறிய போதும், காலத்தை இழுத்தடிப்பதில் கவனம் செலுத்தியதே தவிர வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அக்கறை காண்பிக்கவில்லை.
அடுத்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை பிரித்தானியாவே முன்மொழியும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழு கடந்த வாரம் கொழும்பு வந்திருக்கிறது.
இந்த குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும், வடக்கு – கிழக்கில் உள்ள அரச மற்றும் சிவில் பிரதிநிதிகளையும் சந்தித்து கருத்துக்களை அறிந்து வருகின்றது.
இந்தச் சூழலில்தான், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விவகாரம் தீவிரமடைந்திருக்கிறது.
வியன்னா உடன்பாட்டுக்கு அமைய, இராஜதந்திர தூதரகங்களில் பணியாற்றுவோருக்கு இராஜதந்திர விலக்குரிமை உள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கும், அதே விலக்குரிமை இருந்தது. குறித்த காலப்பகுதியில் அவர் இராஜதந்திர கடவுச்சீட்டை கொண்டிருந்தார். பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் என்ற உயர்நிலை பதவியையும் வகித்திருந்தார்.
இந்த விவகாரத்தை, இரண்டு விதமாகப் பார்க்க வேண்டும்.
முதலாவது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றம் செய்தாரா இல்லையா ? என்பது.
இரண்டாவது அவருக்கு தண்டனை வழங்க முடியுமா ? என்பது.
பிரித்தானியாவில் பொது ஒழுங்குகள் சட்டத்தின் இரண்டு பிரிவுகளை பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ மீறியிருக்கிறார் என, வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இங்கு கவனிக்கத்தக்க விடயம் என்னவெனில், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தவறு செய்யவில்லை என்றோ, அவர் நிரபராதி என்றோ இலங்கை அரசாங்கம் வாதாடவில்லை.
கடந்த ஆண்டு, சம்பவம் நடந்த அடுத்தடுத்த நாட்களிலேயே, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து வெளிவிவகார அமைச்சு இடைநிறுத்தியது. எனவே, அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று ஒருபோதும் வாதிட முடியாது.
நடந்த சம்பவம் பற்றிய தெளிவான வீடியோ ஆதாரங்களும் இருக்கின்றன. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எந்த குற்றமும் செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் வாதாட முற்பட்டிருந்தால், அது இன்னும் அவமானமாக முடிந்திருக்கும்.
அதனால்தான் லண்டனில் உள்ள இலங்கை தூதரகம், இந்த வழக்கில் தொடர்பு டாமலேயே இருந்தது. பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் ஊடாகவே இதனை கையாளலாம் என்று நம்பியது
ஆனால் பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் நீதிமன்ற விவகாரத்தில் தலையீடு செய்யாமல் ஒதுங்கி இருந்து கொண்டதால் இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பிரித்தானியாவில் இனி எந்த காலத்திலும் கால்வைக்க முடியாது. அவருக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் சர்வதேச பிடியாணை விதிக்க உத்தரவிட்டாலும் ஆச்சரியப்படத்தக்க ஒன்றாக இருக்காது.
அதேவேளை, இந்தப் பிரச்சனையிலிருந்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை காப்பாற்றுவதற்கு, அரசாங்கத்துக்கு உள்ள ஒரே வழி வியன்னா உடன்படிக்கை மாத்திரம் தான் .
இந்தப் பிரகடனத்தின் மூலம் இராஜதந்திரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பைப் பயன்படுத்தி, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை காப்பாற்றும் முனைப்பில் தான் இலங்கை அரசாங்கம் இறங்கியிருக்கிறது.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு இராஜதந்திர பாதுகாப்பு இருப்பதாகவும், அதனால் பிரித்தானிய நீதிமன்ற நடவடிக்கையிலிருந்து அவரை விடுவிக்குமாறும் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இந்தக் கட்டத்தில் விமல் வீரவன்ச போன்றவர்கள் வியன்னா உடன்பாட்டுக்கு அமைய அளிக்கப்பட்டுள்ள இராஜதந்திர பாதுகாப்பு விலக்குரிமையை மீறி, பிரித்தானிய நீதிமன்றம் எவ்வாறு பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு பிடியாணை பிடிக்கலாம் என்று கூச்சல் எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.
வியன்னா உடன்படிக்கை இராஜதந்திரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்பதற்காக, அவர்கள் இன்னொரு நாட்டின் சட்டங்களை மீறி செயற்படலாம் என்றோ, குற்றம் இழைத்து விட்டு தப்பி வந்து விடலாம் என்றோ அர்த்தம் இல்லை.
பணிக்குச் செல்லும் நாட்டின் சட்டம் ஒழுங்கை மதித்து செயற்பட வேண்டியது தான் இராஜதந்திரிகளின் முதலாவது கடப்பாடு.
அந்தக் கடப்பாட்டை, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மதித்து செயற்படவில்லை. அதனால்தான் அவர் வில்லங்கத்தில் சிக்க வேண்டிய நிலை வந்தது.
இலங்கையில் பணியாற்றும் இராஜதந்திரி ஒருவர், இதேபோன்ற நடத்தையை வெளிப்படுத்தியிருந்தால், இலங்கை அரசாங்கம் அவரைச் சும்மா விட்டிருக்குமா? விமல் வீரவன்ச போன்றவர்கள் தான், அதற்கு அனுமதிப்பார்களா?
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சட்டத்தை மீறியிருக்கிறார். ஆனால் அவரை தண்டிக்க முடியுமா இல்லையா ? என்பதே இப்போதுள்ள முக்கியமான சிக்கல்.
பிரிகேடியர் பிரியங்கவை கைது செய்து, தண்டனை விதிக்கும் வகையில், வியன்னா உடன்பாட்டுக்கு எதிராக பிரித்தானியா செயற்படும் என்று எதிர்பார்க்க முடியாது. அவ்வாறு செய்ய முனைந்தால், அது இலங்கையுடனான உறவுகளை சீர்குலைக்கும்.
இந்தநிலையில், பொறுப்புள்ள ஒரு அரசாங்கமாக இருந்திருந்தால், கடந்த ஆண்டு லண்டனில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டவுடன், இலங்கை அரசாங்கம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். அவருக்கு எதிராக விசாரணை நடத்தி இருக்க வேண்டும். அரசாங்கம் அவ்வாறான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவைக் காப்பாற்றும் முனைப்பில் மாத்திரம் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதைக் கொண்டு, குற்றமிழைத்த படையினருக்கு புகலிடம் அளித்து – பாதுகாப்பதில் அதற்குள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.
குற்றமிழைத்த படையினர் பற்றிய ஆதாரங்களை புலம்பெயர் தமிழர்கள் சமர்ப்பித்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயார் என்று, பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ கூறியிருந்தார்.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசாங்கம், இப்படிக் கூறியிருப்பது ஆச்சரியம் தான்.