குளியாப்பிட்டி, மடகும்புறுமுல்ல பிரதேசத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு தனது தென்னந்தோப்பில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட நபர் ஒருவரின் மரணம் தொடர்பில் போலி மந்திரவாதி ஒருவர், குளியாப்பிட்டிய பொலிஸ் குற்றப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெலிபென்னகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நபர் உயிரிழந்த நபரின் தென்னந்தோப்பின் பணியாளராகவும், உயிரிழந்த மேற்படி நபரின் விசுவாசியாகவும் இருந்துவந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றிய 45 வயதான ஒருவராவார்.
உயிரிழந்த நபர் அதிகளவில் மூடநம்பிக்கை கொண்டவர் எனவும், அதனால் அவருக்கான திருமண வாய்ப்புகளும் கைநழுவிச் சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஹொரதேபொல விஹாரையின் விஹாராதிபதி சில காலங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும், அவரது மரணத்தின் பின்னர் அவரின் ஆன்மா தனது உடலுக்குள் புகுந்துள்ளதாகவும் கூறி தனது எஜமானனை (உயிரிழந்த நபரை) குறித்த சந்தேகநபர் ஏமாற்றிவந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த விரிவுரையாளரின் தாயார், தனது மகன் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதாக கடந்த வாரம் குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட தீவிர விசாரணைகளையடுத்து, கடந்த 6 ஆம் திகதி குறித்த நபர் தென்னந்தோப்பில் புதைப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அதனையடுத்து குற்ற விசாரணைப்பிரிவு மற்றும் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் சந்தேக நபரை இன ங்கண்டு நேற்றுமுன்தினம் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி விரிவுரையாளருக்கு திருமணம் கைகூட பரிகாரப் பூஜை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி, நூறு ரூபாவை விட பெறுமதி குறைந்த சுரை ஒன்றை 40 ஆயிரம் ரூபா பெறுமதியானது எனத் தெரிவித்து, அவருக்கு அணிவித்துள்ளதாக சந்தேகநபர் வாக்குமூலமளித்துள்ளார்.
பூஜையை மேற்கொள்ள வேண்டுமென சந்தேக நபரான போலி மந்திரவாதி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உயிரிழந்த மேற்படி நபர் தனது தென்னந்தோப்பில் பாரியளவிலான மூன்று குழிகளை வெட்டி தயாராக வைத்துள்ளார்.
இந்நிலையில், வீட்டாருக்கு தெரியாமல் கொண்டு வந்த நகைகளை மணப் பெண்ணைப் போன்று அலங்கரிக்கப்பட்ட பொம்மைக்கு அணிவித்து, குழி ஒன்றுக்கு இறங்குமாறு விரிவுரையாளரை சந்தேக நபர் கட்டளையிட்டுள்ளார்.
அதன்பின்னர், மந்திரவாதியின் கட்டளைக்கு ஏற்ப குறித்த நபர் குழிக்குள் விளக்கொன்றை ஏற்றுவதற்கு முற்பட்டவேளையில், அவரை இரும்புக் குழாய் ஒன்றினால் தொடர்ச்சியாகத் தாக்கியதுடன், பின்னர் மண்ணினால் மூடிவிட்டு தங்க நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவானதாக சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
முச்சக்கரவண்டியொன்றை வாங்குவதற்காக தான் இந்தக் கொலை மற்றும் கொள்ளையை மேற்கொண்டுள்ளதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார். சந்தேகநபரால் எடுத்துச் செல்லப்பட்ட 6 பவுண் தங்க நகைகள், நீர்கொழும்பிலுள்ள வங்கி ஒன்றில் 4 இலட்சம் ரூபாவுக்கு அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
அவ்வாறே கொலைக்காக பயன்படுத்திய இரும்புக் குழாய் மண்வெட்டி ஆகியவற்றை பிபிலாதெனிய பிரதேசத்திலுள்ள பாலம் ஒன்றுக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேக நபரின் வாக்குமூலத்துக்கமைய பொலிஸார் மீட்டுள்ளனர். சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்நிலையில், வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முணசிங்க, குருணாகல் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் புத்திக சிறிவர்தன ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் குளியாப்பிட்டி வலயத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சமன் சிகேரா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன கமகே ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் குளியாப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சதுரங்க, குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரி சோதகர் தலைமையிலான குழுவி
னர் விசாரணைகளை முன் னெடுத்திருந்த நிலையில் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள் ளனர்.