அபுஜா: நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை தனது சகோதரிகளாக கருதுவதாகவும், அவர்களை மீட்பதற்கான போராட்டத்தில் தானும் இணைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் சிறுமி மலாலா. நைஜீரியாவின் ஒரு பகுதியை இஸ்லாமிய நாடாக அறிவிக்கக் கோரி போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு போராடி வருகிறது.
இந்த போராட்டத்தில்ன் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப் பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சிபோக் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் புகுந்த தீவிரவாதிகள், அங்கிருந்த சுமார் 300க்கும் அதிகமான மாணவிகளைக் கடத்திச் சென்றனர். இவர்களில் சிலர் பின்னர் தப்பி வந்து விட்டனர். ஆனால் 200 மாணவிகளை இன்னமும் தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர்.
சிறையில் உள்ள தங்களது இயக்கத்தினரை விடுவிக்காவிட்டால் அம்மாணவிகளை பாலியல் அடிமைகளாக விற்று விடப் போவதாக தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர்.
சமீபத்தில் கடத்தப்பட்ட மாணவிகளின் இருப்பிடம் தெரிய வந்துள்ளதாக தெரிவித்தது நைஜீரிய ராணுவம். ஆனபோதும், இன்னமும் மாணவிகள் வீடு வந்து சேரவில்லை. இந்நிலையில், நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோரைச் சந்தித்துப் பேசினார் பாகிஸ்தான் சிறுமி மலாலா.
பெண் கல்வி…
பெண் கல்விக்காக போராடிய பாகிஸ்தான் சிறுமி மலாலா, தாலிபன் தீவிரவாதிகளால் கடுமையாக தாக்கப் பட்டார். துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்கு போராடிய மலாலா, உரிய சிகிச்சைக்குப் பின் தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
நான் மலாலா…
தாலிபன்களுக்கெதிரான தனது போராட்டம் குறித்து இவர் எழுதிய நான் மலாலா புத்தகம் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சந்திப்பு…
தொடர்ந்து பெண் கல்விக்காக போராடி வரும் மலாலா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியா வந்தார். அபுஜா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோரை அவர் சந்தித்துப் பேசினார்.
எனது சகோதரிகள்…
அப்போது அவர் பேசியதாவது, ‘கடத்தப்பட்ட மாணவிகளை எனது சகோதரிகளாக கருதுகிறேன். தீவிரவாதிகள் அவர்களை விடுவிக்காவிட்டால் அவர்களை சந்தித்து பேசுவேன்.
நானும் போராடுவேன்…
குழந்தைகளை மீட்கக்கோரி நீங்கள் நடத்தும் போராட்டத்தில் நானும் பங்கேற்பேன். அனைவரும் பத்திரமாக வீடு திரும்புவார்கள். அவர்களின் படிப்பு தொடரும்’ என நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஆறுதல்…
மலாலாவின் ஆறுதல் வார்த்தைகளைக் கேட்ட கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கதறி அழுதது நெஞ்சை உருக்கும் காட்சியாக அமைந்திருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.