பிரேமதாச எடுத்திருந்த முடிவு ஜனாதிபதி ஜெயவர்த்தனேஜெயவர்தனேவுக்கு அவர் எதிர்பாராத வகையிலான எதிர்ப்பு ஒன்றைக் கொடுப்பது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அரசாங்கத்திலிருந்து தூக்கியெறியப்படுவார்கள் என்றும், ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் பத்திரிகையாளர் மாநாட்டில் ஜனாதிபதி ஜெயவர்த்தனேகூறியிருந்தார் அல்லவா.
உடனே இரண்டு வாரங்கள் அமைதியாக இருந்தார் பிரேமதாச.
அமைதியாக இருந்தார் என்றால் வெளியே வாய்திறக்கவில்லை. அவ்வளவுதான். ஆனால் உள்ளே ‘அலுவல்கள்’ நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இந்த இரண்டு வாரக் காலப்பகுதியில் பிரேமதாசா இரு வெளிநாடுகளுக்கும் போனார் ஒன்று தென்கிழக்காசிய நாடு. மற்றயது ஒரு அரபுநாடு.
இவ்விரு இடங்களிலும் சில சந்திப்புக்கள் நடைபெற்றன. சில திட்டங்கள் போடப்பட்டன. அந்த நாட்களில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லீம் வர்த்தகர் ஒருவர் அரபுநாடு ஒன்றில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார் (அவருக்கு இலங்கையிலும் பல நிறுவனங்கள் இருந்தன – இன்னமும் இருக்கின்றன) சில அரசியல் காரணங்களுக்காக அவர் கொழும்பிலிருந்து வெளியேறி அரபு நாடு ஒன்றில் வசித்துக் கொண்டிருந்தார்.
பிரேமதாசவும் அவருக்கு வேண்டியவர்களும் தென்கிழக்காசிய நாட்டில் போட்ட திட்டத்துக்கு, அரபு நாட்டில் வசித்த இந்த முஸ்லீம் வர்த்தகர் பொருளாதார ரீதியிலான உதவிகள் செய்யச் சம்மதித்தார்.
அதன் பின்னர்தான் பிரேமதாச நாடு திரும்பி, இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்கு எதிராக தனது முதலாவது வெளிப்படையான பொதுக்கூட்ட பேச்சை பேசினார்.
பிரேமதாசவின் பேச்சு உணர்ச்சிகரமான ஒன்றாக இருந்தது. “இலங்கை ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இவர்கள் இருவருக்கும் நெருக்கமான சிலருக்கும் மாத்திரமே இப்படி ஒரு ஒப்பந்தம் ஏற்படப்போகும் விஷயம் தெரிந்திருந்தது.
இவர்களைவிட மற்றய அனைவருக்கும் இந்த ஒப்பந்தம், ரகசியம்.
இந்த நாட்டின் பிரதமரான எனக்கே விஷயம் கூறப்படவில்லை. ஒப்பந்தம் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்ட போது நான் ஜப்பானில் இருந்தேன். அப்போதுகூட எனக்கு நேரடியாக விஷயம் கூறப்படவில்லை.
டோக்கியோவில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றை டிவியில் ஒளிபரப்புவதற்காக படம் பிடிக்கவந்த ஜப்பானியப் படப்பிடிப்பாளர் ஒருவர் கூறித்தான் எனது நாட்டுக்கும் – நான் பிரதமராக இருக்கும் எனது நாட்டுக்கும் – இந்தியாவுக்கும் இடையே ஒரு முக்கியமான ஒப்பந்தம் நடைபெறப்போவது பிரதமரான எனக்கே தெரியவந்தது” என்றார் பிரேமதாச.
(தொடரும்)
-ரிஷி-
இந்தியாவின் வியட்நாம் – இலங்கையில் இந்திய அமைதிப் படை – 06
இந்தியாவின் வியட்நாம் – இலங்கையில் இந்திய அமைதிப் படை – 05
இந்தியாவின் வியட்நாம் – இலங்கையில் இந்திய அமைதிப் படை – 04