தங்காலை, மெடில்லே வீதியில் உள்ள த நேச்சர் ரிசேவ் ஹோட்டலில் பிரித் தானிய பிரஜையான குராம் ஷேய்க் என்பவரை படுகொலை செய்துவிட்டு அவரது காதலியான ரஷ்யாவை சேர்ந்த விக்டோரியா அலெக்ஸ் சான்ரானோவை கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவமானது கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் தினத்தன்று பதிவாகியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சாட்சியங்களை திரட்டி விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் சந்தேக நபர்களை நிறுத்தி அவர் களில் குற்றவாளிகளாக காணப்பட்ட நால்வருக்கு கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 20 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றினால் தீர்ப்பும் வழங்கப்பட்டது.
குராம் ஷேய்க் பிரித்தானிய பிரஜை. இதனை விட அவருக்கு இன்னொரு அடையாளமும் உள் ளது. அதாவது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊழியர் என்ற அடையாளமே அது.
பல வருடங்களுக்கு முன்னர் வடகொரியா சென்ற குராம் ஷேய்க் அங்கு யுத்ததின் பின்னரான நடவடிக்கைகளில் செஞ்சிலுவைச் சங்கத்தின் சமூகப் பணிகளை முன்னெடுத்திருந்தார்.
இந் நிலையில் தான் ரஷ்யாவை சேர்ந்த விக் டோரியா அலெக்ஸ்சான்ரானோ வடகொரியாவுக்கு வருகின்றார். கொரிய – ரஷ்ய நட்புறவு சங்கத் துடன் விக்டோரியாவின் குடும்பத்தினர் நெருங் கிய தொடர்புள்ளவர்களாக இருந்ததன் விளைவே விக்டோரியா வடகொரியாவுக்கு வரக் காரணமாக இருந்தது.
மொழிகள் தொடர்பான கற்கைகளை வடகொரியாவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் மேற்கொள்ளவே விக்டோரியா அங்கு செல்ல நேர்ந்தது. எனினும் விதி, அங்கு வைத்து விக்டோரியாவுக்கு அவரது வாழ்க்கை துணையையும் தேடிக்கொடுத்தது.
இந் நிலையில் பிரித்தானிய – ரஷ்ய காதலர்கள் வடகொரியா மண்ணில் தமது காதலை தொடர்ந்தனர். இந் நிலையில் தான் பலஸ்தீனின் காஸா பிராந்தியத்துக்கு குராம் ஷேய்க் செல்ல வேண்டி ஏற்படுகின்றது.
அங்கு செஞ்சிலுவை சங்கத்தின் பணிகளை முன்னெடுக்க குராம் சென்ற போதும் குராம் – விக்டோரியா காதல் தொடர்ந் தது. நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் வளர்ந்த காதலில் ஒருவரை ஒருவர் நேரடியாக சந்தித்துக்கொள்ள ஆர்வம் மேலிட்டது. அதன் பிர திபலனாக இருவரும் சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
இதன்படி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டு இலங்கையில் இருவரும் சந்தித்துக் கொள்வது என அவர்கள் தீர்மானித்தனர். இலங் கையின் இயற்கை அழகுடன் தமது காதலை சங்கமிக்கச் செய்வது அவர்களின் எதிர்ப்பார்ப்பாக இருந்திருக்கலாம்.
இதனிடையே குராம் – விக்டோரியா காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்திருந்த நிலையில் விக்டோரியா ஏற்கனவே இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தார். இதன் காரணமாக அவர்கள் தமது காதல் மொழி பேச ஏற்ற சூழலாக இலங்கையை கருதி தெரிவு செய்திருக்க வேண்டும்.
இந் நிலையில் தான் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி இரு வேறு நாடுகளிலிருந்து இரு வேறு விமானங்களில் குராமும் விக்டோரியாவும் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்துள் ளனர்.
இணையம் ஊடாக ஏற்கனவே இலங்கையில் தங்குமிடங்களை தயார் செய்திருந்த இவ்விரு வரும் அதன் பிரகாரமே தங்காலை த நேச்சர் ஹோட்டலுக்கு செல்கின்றனர்.
இந் நிலையில் வாடகை வாகனம் ஒன்றின் மூலம் தங்காலை நேச்சர் ஹோட்டலை அடைந்த விக் டோரியா – குராம் ஜோடி அங்கு சுமார் 9 நாட்கள் வரை தங்கியிருந்து தமது எதிர்கால திட்டமிடல்களை மேற்கொள்ளலாயினர். அவ்வளவு நட்களாக இருந்ததாலோ என்னவோ அந்த ஹோட்டலி லேயே உள்ளவர்கள் போன்று இந்த ஜோடி மாறிவிட்டது.
இந் நிலையில் தான் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி காலை குராம் விக்டோரியா தங்கிருந்த அறை பகுதிக்கு சென்ற நேச்சர் ஹோட்டலின் முகாமையாளர் ‘ இன்று மாலை எமது ஹோட்டலில் ஒரு நிகழ்வு உள்ளது.
கண்டிப்பாக நீங்கள் இருவரும் அதில் கலந்து கொள்ள வேண்டும்’ எனக் கூறி அழைப்பிதழை வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து நிகழ்வுக் காக ஹோட்டல் ஊழியர்கள் ஹோட்டலை அழகு படுத்திக்கொண்டிருந்த போது குராமும் விக்டோ ரியாவும் இணைந்து அந்த பணிகளுக்கு ஒத்துழைப்பும் வழங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தமது அறைக்குச் சென்று ஓய்வெடுத்துக்கொண்ட இந்த ஜோடியினர் மீண்டும் மாலை நிகழ்வில் கலந்துகொள்ள தயாராகி சந்தோஷமாக ஹோட்டல் நிகழ்வுப் பகுதிக்கு வருகை தந்தனர். ஹோட்டலில் உணவு ஏற்பாடுகள் பூர்த்தியாகியிருந்த நிலையில் கிறிஸ்மஸ் மரமும் நெருப்பு குண்டம் ஒன்றும் நிகழ்வை அலங்கரித்திருந்தனர்
உணவு விடுதியருகே மதுபானங்கள் விருந்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த மதுபான நிலையத்தை நடத்தி வந்தவருடன் குராம் கதை வளர்த்துள்ளார். அதாவது மதுபான நிலையம் ஒன்றை எப்படி நடத்துவது என்பது தொடர்பிலேயே அந்த கலந்துரையாடல் அமைந் துள்ளது.
இந்த கலந்துரையாடலானது விக்டோரி யாவுக்கு தொடர்பில்லை என்பதால் அவர் நெருப்பு மூட்டப்பட்டிருந்த பகுதிக்கு சென்று சிறிது நேரம் இருந்த பின்னர் ஹோட்டலுக்கு பின் பக்கமாக இருந்த கடற்கரைக்கு சென்று அலைகளை ரசித் துள்ளார்.
பின்னர் மீண்டும் குராம் பேசிக்கொண்டிருந்த இடத்துக்கு வந்த போது ‘ எங்கு சென்றீர்? ஏன் என்னிடம் சொல்லாமல் சென்றாய்?’ என குராம் பாசம் கலந்த கோபத்தில் கேட்க விக்டோரியாவின் மனது சற்று வலித்துள்ளது. இந் நிலையில் கண்கள் கலங்க விக்டோரியா மீண்டும் கடற்க ரைக்கு சென்று அலைகளுடனேயே உறவாட ஆரம்பித்துள்ளார்.
இதனிடையே வேறு ஒரு உணவகம் ஒன்றின் உரிமையாளரான ரயன் அகலங்க என்பவரும் அந்த நிகழ்வுக்கு வந்துள்ளார். இந் நிலையில் ரயன் அந்த நிகழ்வை கொண்டாடிக்கொண்டி ருந்த போது ஒரு குழு அவரிடம் சென்று அவரை வம்புக்கு இழுத்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
செஞ்சிலுவை சங்க ஊழியரான குராம் மனித நேயம் மிக்கவர். இதனாலோ என்னவோ ரயனை காப்பாற்றும் நோக்கோடு அல்லது சண்டையை விலக்க சண்டை இடம்பெற்ற இடத்தை நோக்கி குராம் சென்றுள்ளார். எனினும் ஹோட்டல் முகா மையாளர் தில்ருக்க்ஷி, குராமை அங்கு செல்வதை தடுத்த போதும் அவர் அதனை உதாசீனம் செய்து விட்டு அந்த இடத்துக்கு சென்றுள்ளார்.
இந் நிலையில் தான் ரயனை தாக்கிய கும்பல் குராமை தாக்க தொடங்கியுள்ளனர். இதனிடையே கடற்கரையில் தனிமையில் குராமை நினைத்து அழுது கொண்டிருந்த விக்டோரியாவிடம் வந்த குழு ‘ ஏன் அழுகின்றீர்கள்? ஏதேனும் உதவி தேவையா?’ என கேட்டுள்ளனர்.
‘ இது எனது பிரச்சினை. நீங்கள் தலையிட வேண்டாம்’ என அவர்களுக்கு பதிலளித்துள்ள விக்டோரியா திடீரென ஏற்பட்ட அச்சம் காரண மாக தனது இரு பாதணிகளையும் கையிலெடுத்த வண்ணம் ஹோட்டலை நோக்கி ஓடியுள்ளார்.
எனினும் அப்போது ஹோட்டலின் உணவு விடு தியருகே பெரும் குழப்பகரமான நிலைமை இருந்துள்ளது. இந் நிலையில் திடீரென தாக்குத லுக்கு விக்டோரியாவும் உள்ளாகியுள்ளார்.
அது ஹோட்டலின் அருகே உள்ள நீச்சல் தடாகத்தில் வைத்தகும். இதனால் தடுமாறி நீச்சல் தடாகத்தில் விழுந்த விக்டோரியா அதில் இருந்து வெளியே வர முடியாத வண்ணம் தாக்கப்பட்டுள்ளார். இதனை விட போத்தல்களால் வெட்டப்பட்டுமுள்ளார். தன்னை தாக்கிய சந்தேக நபர்களை விக்டோரியா வழக்கு விசாரணையின் போது அடையாளமும் காட்டினார்.
ஒருவாறு நீச்சல் தடாகத்திலிருந்து மீண்டுள்ள விக்டோரியா குராம் குராம் என அழைத்தவாறு தனது காதலனை ஹோட்டல் முழுதும் தேட ஆரம்பித்துள்ளார்.
நீச்சல் தடாகத்தை அண்மித்த பகுதியொன்றில் குராம் விழுந்து கிடப்பதை கண்ட விக்டோரியாவின் கண்களை அவராலேயே நம்ப முடியாது போயுள்ளது. குராம் இரத்த வெள்ளத்தில் மிதக்க குராமை ஓடிச்சென்று கட்டியணைத்த விக்டோரியா ‘ மை லைப்…மை லைப்..’ என கதற ஆரம்பித்துள்ளார்.
இந் நிலையில் இரத்ததில் தனது காதலனை கண்ட விக்டோரியாவுக்கும் சுய நினைவு அற்றுப்போனது. அவரும் குராமின் இடத்திலேயே தரையில் சாய்ந்தார்.
இதன் பின்னர் விக்டோரியாவின் உள்ளாடைகள் உள்ளிட்டவை கலையப்பட்டுள்ளன. அத்துடன் அவரது மர்ம பிரதேசங்களில் மனித பற்களின் பதிவுகளும் காணப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஹோட்டல் ஊழியர்கள் அவ்விருவரையும் உடனடியாக மாத்தறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு விக்டோரியாவுக்கு தலையில் பரிய காயம், இருந்த நிலையில் விஷேட சத்திர சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் குராமின் கழுத்துப்பகுதியில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்த நிலையில் அவரது மூளைக்கான இரத்த ஓட்டம் துண்டிக்கப்பட்டதால் குராம் உயிர் பிழைப்பது சாத்தியமற்றதாகிப் போனது.
இதன் பின்னணியிலேயே பொலிஸார் விசா ரணைகளை ஆரம்பிக்களாயினர். தங்காலை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை உடனடியாகவே குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கைமாற்றப்பட்டது. புலனாய்வுப் பிரிவினர் சாட்சியங்களைத் தேடினர்.
பலரை விசாரணை செய்தனர். விக்டோரியா, ஹோட்டல் முகாமையாளர், ஊழியர்கள் என பல் வேறு நபர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து சந்தேக நபர்களை அடை யாளம் கண்ட பொலிஸார் அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தங்காலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு அடை யாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டனர். மஜிஸ்திரேட் விசாரணைகளும் நிறைவடைய கைது செய்யப்பட்டிருந்த 8 சந்தேக நபர்களில் இருவர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். எட்டு பேரில் எச்.ரீ. நுவான், எதிரிசூரிய பட்டபெதிகே நதீர சாமன் ஆகிய இருவரும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் சட்ட மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ தனக்குள்ள விஷேட அதிகாரத்தை பயன்படுத்தி தங்காலை மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மற்றி ட்ரயல் அட்பார் முறை மூலமான விசாரணை ஒன்றை கோரினார். அது தொடர்பில் ஆறு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா திபர் சார்பில் சிரேஷ்ட சட்டவாதி துஷித்த முதலிகே குற்றப் பத்திரிகையினை தாக்கல் செய்தார்.
சட்ட மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ வினால் கொழும்பு மேல் நீதிமன்றுக்கு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் பிரதிவாதிக ளாக குறிப்பிடப்பட்டிருந்த லஹிரு கெலும்,சமன் தேசப்பிரிய,முன்னாள் தங்காலை பிரதேச சபை தலைவர் சம்பத் சந்திர புஷ்ப விதான பத்திரண, பிரகீத் சத்துரங்க, எம்.சரத் அலியஸ்சான் மற்றும் டப்ளியூ. சத்துரங்க ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கு எதிராக 17 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. அத்துடன் சுமர் 83 சாட்சியங்கள் பிரதிவாதிகளுக்கு எதிராக உள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் மன்றுக்கு தெரிவிக்கப்பட்டே விசாரணைகள் ஆரம்பமாகின.
கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி முதல் ட்ரயல் அட் பார் முறை மூலம் கொழும்பு மேல் நீதிமன்றினால் விசாரணைக்கு இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அது சுமார் 33 தடைவைகள் இந்த வழக்கானது தவணை விசாரணைகளை சந்தித்திருந்த நிலையிலேயே சுமார் மூன்றரை மாதங்களில் இந்த தீர்ப்பு நீதிவான் ரோஹினி வல்கமவினால் அறிவிக்கப்பட்டது.
எனினும் சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரித் தானிய பிரஜை குராம் ஷேக்கை கொலை செய்தமை, அவரது காதலியான விக்டோரியாவை கொலை செய்ய முயற்சித்தமை, அவரை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை, சட்டவிரோத குழுவொன்றின் உறுப்பினராக இருந்தமை….,
தங்காலை த நேச்சர் ஹோட்டலுக்கு ஒரு இலட்சத்து 60 ஆகியம் ரூபாவுக்கு சேதம் விளைவித்தமை, அந்த ஹோட்டலில் இருந்த 41 ஆயிரம் ரூபா பெறுமதியான மதுபான போத்தல் களை கொள்ளையிட்டு சென்றமை, அனுமதிப் பத்திரம் இன்றி தன்னியக்க துப்பாக்கி ஒன்றை உடன் வைத்திருந்தமை உள்ளிட்ட 17 குற்றச்சாட் டுக்களிலும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த லஹிரு கெலும்,சமன் தேசப்பிரிய,முன்னாள் தங்காலை பிரதேச சபை தலைவர் சம்பத் சந்திர புஷ்ப விதான பத்திரண, பிரகீத் சத்துரங்க ஆகியோரை குற்றவாளிகளாக கண்ட நீதிவான் அவர்களுக்குரிய தண்டணையை அறிவித்தார்.
ஏனைய இரு பிரதிவாதிகளான 5 ஆவது பிரதிவாதியான எம்.சரத் அலியஸ் சான் மற்றும் 6 ஆவது பிரதிவாதியான டப்ளியூ சத்துரங்க ஆகியோருக்கு எதிரான சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்படாததால் அதனை கருத்தில் கொண்டே நீதிவான் அவ்விருவரையும் விடுதலை செய்தார்.
இது தொடர்பான தீர்ப்பானது கடந்த வெள்ளியன்று நீதிவான் ரோஹினி வல்கமவினால் வழங்கப்பட்டது. தீர்ப்பினை அறிவிக்க முன்னர் திறந்த நீதிமன்றில் நீதிவான் ரோஹினி வல்கம விஷேட கருத்துக்கள் சில வற்றை தெரிவித்தார்.
அதில் இந்த வழக்கில் வழமையை விட தான் அதிக சவால்களை எதிர்கொண்டதாக குரிப்பிட்டார். அத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வழக்கை சிறப்பு வழக்காக தான் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதாக சுட்டிக்காட்டிய நீதிவான் ரோஹினி வல்கம, மூன்றரை மாதங்களாக தனியாக இந்த வழக்கை விசாரணை செய்ததாக குறிப்பிட்டார். ஏனைய வழக்குகளைப் போலல்லாது சிறப்பு இடம் வழங்கப்பட்டு தனியாக ட்ரயல் அட்பார் மூலம் இந்த விசாரணைகளை நிறைவு செய்யத்தான் தன்னை அர்ப்பணம் செய்த தாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன் முறைப்பாட்டாளர்கள் மற்றும் பிரதிவாதிகள் சார்ப்பில் ஆஜரான சட்டத்தரணி களுக்கும் நீதிவான் நன்றி தெரிவித்தார். அதற்கு மேலதிகமாக சாட்சிப் பட்டியலை தயாரித்தவர்கள் மற்றும் வழக்கை விசாரணை செய்து முடிக்க உத வியவர்கள் என அனைவருக்கும் நீதிவான் நன்றி தெரிவித்தார்.
இந்த வழக்கினை தனது கடமை என்பதை விட கடவுள் அளித்த பொறுப்பு என எண்ணியே முன்னெடுத்ததாக நீதிவான் ரோஹினி வல்கம சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ஊடகங்கள் வாயிலா கவும் மேலும் பல வகைகளிலும் இந்த வழக்கு தொடர்பில் பல்வேறு விதமான செய்திகள் பரப்பப் பட்டு வந்த நிலையில் அது எதனையும் கருத்தில் கொள்ளாது பாரபட்சம் இன்றி தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதில் தான் கவனமாக இருந் ததாகவும் தனது தீர்ப்பினை கேள்விக்கு உட்ப டுத்தி மேன் முறையீடு செய்வதாயின் அவ்வாறு செய்வோர் தமது மனசாட்சியை தட்டிக் கேட்கும் படியும் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து தீர்ப்பிணை அறிவித்த நீதிவான் பின்வருமாறு தண்டனையை அறி வித்தார்.
1- முதலாவது குற்றச்சாட்டான ரயன் அகலங்கவை தாக்கியமை மற்றும் சட்டவிரோத கூட்டம் தொடர்பில் தண்டனை சட்டக்கோவையின் 140 ஆவது அத்தியாயத்துக்கு அமைய குற்றவாளியாக காணப்பட்ட பிரதிவாதிகளுக்கு 6 மாத கடூழிய சிறை.
2- குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் முதல் குற்றச் சாட்டில் குறிப்பிட்ட சட்ட விரோத குழுவில் அங்கத்தவரக இருந்த தெனகம விதாரண ரயன் அகலங்கரவுக்கு பொல்லுகள், உடைந்த போத்தல்கள்,கதிரை, சீமெந்து கட்டைகள், ரீ 56 துப்பாக்கி மற்றும் கை, கால்களால் கடுமையான தாக்குதல் நடத்தியமை மற்றும் பொது இடத்தில் சட்ட விரோத கூட்டம் சேர்த்து இவ்வாறான குற்றச் செயல்களை செய்தமை தொடர்பில் குற்றவாளிகளான பிரதிவாதிகளுக்கு தண்டனை சட்டக் கோவையின் 146 ஆவது அத்தியாயத்தின் 317 ஆவது விதப்புரைக்கு அமைய 2 வருட கடூழிய சிறை
3- குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் குராம் சமான் ஷேய்க்கை கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளிகளான பிரதிவாதிகளுக்கு தண்டனை சட்டக் கோவையின் 146 ஆவது அத்தியாயத்தின் 296 ஆவது விதப்புரைக்கு அமைய 20 வருட கடூழிய சிறை
4- குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் விக்டோரியா அலெக்ஸ்சான்ரானோவை கதிரை, பொல்லுகளாலும் தீ பந்தத்தினாலும் மரணத்தை ஏற்படுத்தும் படியான தாக்குதலை மேற்கொண்டமை தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட பிரதிவாதிகளுக்கு தண்டனை சட்டக்கோவையின் 146 ஆவது அத்தியாயத்தின் 300 ஆவது விதப்புரைக்கு அமைய 10 வருட கடூழிய சிறை.
5- ரயன் அகலங்கவுக்கு தாக்குதல் நடத்தியமை தொடர்பில் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் செய்த குற்றச் செயல் தண்டனை சட்டக்கோவையின் 32 ஆவது அத்தியாயத்தின் 317 ஆவது விதப்புரைக்கு அமைய குற்றச் செயலாகும். அது தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட பிரதிவாதிகளுக்கு தலா 2 வருட கடூழிய சிறை.
6- குராம் ஷேய்க்கை கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட பிரதிவாதிகள் தண்டனை சட்டக் கோவையின் 32 ஆவது அத்தியாயத்தின் 296 ஆவது விதப்புரையின் கீழும் குற்றமிழைத்தவர்களாவர். எனவே அதன் கீழ் 20 வருட கடூழிய சிறை தண்டனை.
7- அத்துடன் விக்டோரியாவை மரணத்தை ஏற்படுத்த வல்ல முறையில் தாக்கியமை தொடர்பில் தண்டனை சட்டக் கோவையின் 32 ஆவது அத்தியாயத்தின் 300 ஆவது விதப்புரையின் கீழ் குற்றவாளிகளான சந்தேக நபர்களுக்கு தலா ஒரு வருட சிறை
8- முதலாவது பிரதிவாதி விக்டோரியாவை தாக்கியமை உறுதியாகிய நிலையில் அவருடன் இணைந்து 2,3,4 ஆவது பிரதிவாதிகள் கூட்டாக சேர்ந்து விக்டோரியாவை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளமையானது தண்டனை கோவை சட்டத்தின் 364 (2) (உ) அத்தியாயத்தின் கீழ் தண்டணைக்குரிய குற்றமாகும். இதனால் அந்த குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு தலா 20 வருட கடூழிய சிறை மற்றும் 20 ஆயிரம் ரூபா அபராதம். அத்துடன் தலா 2 இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்க வேண்டும்.
(இது தொடர்பில் பிரதிவாதிகளுக்கு தனித்தனியாக தண்டனை அறிவிக்கப்பட்டது.)
9- தங்காலை த நேச்சர் ஹோட்டலுக்கு 160255 ரூபா சொத்து சேதத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் தண்டனை சட்டக்கோவையின் 32 ஆவது அத்தியாயத்தின் 410 ஆவது விதந்துரைக்கு அமைய குற்றவாளிகளாக காணப்பட்ட பிரதிவாதிகளுக்கு தலா ஒரு வருடம் கடூழிய சிறை.
10- குறித்த நேரத்தில் த நேச்சர் ஹோட்டலுக்கு சொந்தமான 41526.80 ரூபா பெறுமதியான மது போத்தல்களை கொள்ளையிட்டமை தொடர்பில் தண்டனை சட்டக் கோவையின் 32 ஆவது அத்தியாயத்தின் 383 ஆவது விதப்புரையின் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்ட பிரதிவாதிகளுக்கு தலா 5 வருட கடூழிய சிறை.
11- தன்னியக்க துப்பாக்கியொன்றை அனுமதியின்றி வைத்திருந்த குற்றத்திற்காக 1996 ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க திருத்தப்பட்ட துப்பாக்கிச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்ட பிரதிவாதிகளுக்கு தலா 10 வருட கடூழிய சிறை.
இவ்வாறு தீர்ப்பை அறிவித்த நீதிவான் குற்றவாளிகளான பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்ட 107 வருடங்களும் 6 மாதங்களுமான கடூழிய சிறை தண்டனையை 20 வருடங்களில் அனுபவிக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பும் பிரித்தானியாவும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள நிலையில் தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்யப் போவதாக பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் குறிப்பிடுகின்றனர்.
இந் நிலையில் உலகமே எதிர்ப்பார்த்து காத்திருந்த ஒரு வழக்கின் தீர்ப்பு வெளியிடப்பட்டு தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளும் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
– எம்.எப்.எம்.பஸீர்–