மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி விநாயகர் கிராமத்தில் இளம் யுவதியொருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவமொன்று இன்று புதன்கிழமை பதிவாகியுள்ளது.
சித்தாண்டி விநாயகர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் யுவதியே இன்று அதிகாலை நான்கு மணியளவில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தவரின் சகோதரி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த யுவதியின் தாய் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் நோய் வாய்ப்பட்டு மரணமடைந்த நிலையில், தாயின் ஏழாவது ஆண்டு தின நினைவஞ்சலியும் இன்று புதன்கிழமை என்பதால் குடும்பத்தில் பெரும்சேகத்தை ஏற்படுத்தியுள்ளது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தாயின் ஏழாவது ஆண்டு நினைவு தின பூசைக்காக செவ்வாய்கிழமை பூசைப் பொருட்களையும் கொள்வனவு செய்து வைத்திருந்த நிலையில் இவ்வாறான சோக சம்பவம் பதிவாகியுள்ளது என தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக கிராமசேவகர் மற்றும் ஏறாவூர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.