யுத்தத்தில் நான்கில் மூன்று பகுதியை தனது காலத்திலேயே முடித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பெருமிதம் அடைகின்றார். புலிகளின் குண்டுத்தாக்குதலுக் இலக்காகி மூளை பாதிக்கப்பட்டமையினாலே அவர் புலம்புகின்றார்.
அவரது ஆட்சிக் காலத்திலேயே இராணுவத்தினர் புலிகளிடத்தில் மூன்று முறை தோல்வியடைந்தனர் என தூய்மையான ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
பாகொடை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில்,
யுத்த வெற்றிக்கு எனது ஆட்சி காலத்தில் நான்கில் மூன்று வீதம் பங்களிப்பு கிடைத்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சிய யுத்த வெற்றிக்கு தனது பங்களிப்பினை ஓரளவு செய்தது.
மஹிந்த நான்கில் ஒரு வீத்தினாலேயே யுத்த வெற்றிக்கு பங்களிப்பு செய்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.
அதன் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்காவும் மஹிந்தவும் நான்கில் மூன்று நான்கில் ஒன்று என்ற வீதத்தில் யுத்த வெற்றிக்கு பங்களிப்புச் செய்துள்ளனர்.
அவ்வாறாயின் ஐக்கிய தேசிய கட்சியின் பங்களிப்பு யுத்த வெற்றிக்கு எப்பபோது கிடைத்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அதேபோல் இந்த விடயத்தை தெளிவுபடுத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க யுத்த வெற்றிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பங்களிப்பு எவ்வாறானாதாக இருந்தது.
என்றும் இதுவரை காலம் யுத்த வெற்றிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பங்களிப்பும் உள்ளதென அக்கட்சியினர் கூறுவது உண்மைக்கு புறம்பானது என்பது குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிகாலத்திலேயே யுத்த களத்திள் இராணுவத்தினர் படுதோல்விகள் மூன்றை சந்தித்தனர். 1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவப் படைத்தளம் முற்றாக அழிக்கப்பட்டது.
1990 ஆம் ஆண்டில் வன்னியிலிருந்த ஒட்டுமொத்த இராணுவப்படைத்தளங்களும் முற்றாக அழிக்கப்பட்டன. அதன் பின்னர் ஆணையிரவு படைத்தளம் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டது.இம்மூன்று சம்பவங்களும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்திலேயே இடம்பெற்றன.
எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க புலிகளின் குண்டுதாக்குதலுக்கு இலக்காகியிருந்தார். அதனால் அவருக்கு ஏற்பட்ட மூளை பாதிப்பினாலேயே அவர் இவ்வாறு புலம்பிக்கொண்டிருக்கிறார் என்றார்.
ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்படுவதில் தவறில்லை
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் நான்கில் மூன்று பங்கினை தானே நிறைவு செய்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எஞ்சியிருந்த இறுதி ஒரு பங்கினை மட்டுமே நிறைவு செய்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த அரசாங்கத்தினால் சிதைந்த இலங்கையை கட்டியெழுப்ப வும் புத்தெழுச்சி பெற செய்வதற்கும் ஐக் கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் எவ்விதமான தவறும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மீரிகம பகுதியில் இடம்பெற்ற மக்கள சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியிலேயே யுத்தத்தின் மூன்று பங்கு நிறைவடைந்து விட்டது. மிகுதியிருந்த சொட்ப பகுதியினையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறைவு செய்திருந்தார்.
அவ்வாறிருக்கையில் சிலர் யுத்தத்தை கடந்த அரசாங்கம் நிறைவு செய்தமையினாலேயே மீண்டும் ஆட்சி செய்வதற்கான அதிகாரத்தை மக்கள் வழங்கினர் என்றும் யுத்தத்தின் நாயகனாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சித்திரிக்கவும் முனைந்தனர்.
உண்மையாக விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் வெற்றிக்கு ஐக்கிய தேசிய கட்சியும் ஒரு பங்கு வழங்கியிருந்தது. நான் ஆட்சிக்கு வரும் முன்னரும் அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் நான்கில் மூன்று பங்கு யுத்தம் நிறைவுபெற்று விட்டது என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
நாம் மேற்கொண்ட முயற்சிகளின் பின்னரே யுத்தத்தை நிறைவு செய்ய அவரால் முடிந்ததே தவிர தனித்து அவரால் யுத்தத்தை ஒருபோதும் வெற்றிக்கொண்டிருக்க முடியாது. அத்தோடு யுத்தத்திற்கான ஆயுதங்களை எமது அரசாங்கமே கொள்வனவு செய்திருந்தது.
எனவே நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் யார் வேண்டுமானாலும் இணைந்து செயற்பட தயாராக உள்ளேன். நாட்டின் நன்மைக்காக என்னை அர்ப்பணித்து செயற்பட தயாராகவுள்ளேன் என்றார்.