திருவள்ளுர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், திருவள்ளுவர் காவி உடை அணிந்திருக்கும் வகையில் புகைப்படங்களைப் பகிர்ந்து, அவரை நினைவுகூர்ந்து ஆளுநர் ஆர்.என் ரவி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது சர்ச்சையாகி உள்ளது.
திருவள்ளுவர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆன்.என் ரவி, தனது எக்ஸ் பக்கத்தில், திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தைப் பதிவிட்டார்.
அதில், ஆன்மிக பூமியான தமிழ்நாட்டில் பிறந்த, மதிப்பிற்குரிய கவிஞரும், சிறந்த தத்துவ ஞானியும், சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு தனது பணிவான மரியாதையைத் தெரிவித்துக் கொள்வதாகவும், முழு மனித குலத்திற்கும் வழிகாட்டுதலாகவும் உத்வேகமாகவும் திருக்குறள் இருப்பதாகவும் அவர் பதிவிட்டார்.
அதைத் தொடர்ந்து, ஆன்மிகப் பயணமாக ராமநாதபுரம் சென்றிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில், காவி உடையில், நெற்றியில் விபூதி, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருந்த திருவள்ளுவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூக நீதிக் கோட்பாட்டையும், முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும்- அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.
133 அடியில் சிலையும்-தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது,” எனப் பதிவிட்டார்.
இதற்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் திருவள்ளுவரை சனாதன துறவி என ஆளுநர் குறிப்பிட்டுள்ளதற்குக் கண்டனம் தெரிவித்தார்.
இதுதொடர்பான தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சட்ட அமைச்சர் ரகுபதி, பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு வந்த பணிகளைச் செய்யாமல், கையில் கிடைக்கும் அனைத்துக்கும் காவி சாயம் பூசிக் கொண்டு இருப்பதாக விமர்சித்தார்.
திருவள்ளுவர் உருவம் பெற்றது எப்படி?
திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சனாதன துறவி என்று கூறியது முற்றிலும் வரலாற்று உண்மைக்குப் புறம்பானது எனக் கூறினார் வரலாற்று ஆய்வாளர் செந்தலை ந. கவுதமன்.
திருவள்ளுவரின் தற்போதைய வடிவம் உருவான வரலாறு குறித்து பிபிசியிடம் விரிவாகக் பேசினார் கவுதமன். அப்போது அவர், “அஞ்சல்தலை வெளியிடுவதற்காக 1959இல் தான், வள்ளுவருக்கு புகைப்பட வடிவில் உருவம் கொடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அதை ஓவியர் வேணுகோபால் சர்மா வரைய, பாரதிதாசன் மேற்பார்வையிட்டார்.
கடந்த 1960 இல் அந்தப் படம் வரைந்து முடிக்கப்பட்ட பின், தஞ்சை ராமநாத மன்றத்தில் 49 தமிழ் புலவர்களைக் கொண்டு மாநாடு நடத்தப்பட்டு, அவர்கள் அனைவரும் தற்போதைய சாதி, மத, சமய அடையாளங்கள் இல்லாத வள்ளுவரின் புகைப்படத்தை ஏற்றுக்கொண்ட பின்னரே, அது அப்போதைய அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அஞ்சல் தலையாக வெளியிடப்பட்டது,” என்றார் கவுதமன்.
பின்னர், 1967ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், அப்போதைய முதல்வர் அண்ணாதுரை, ஓவியர் வேணுகோபால் சர்மாவுக்கு ஓவியப் பெருந்தகை என்ற பட்டத்தை அளித்தார்.
அந்த சாதி, மத, சமய சார்பில்லாத திருவள்ளுவரின் புகைப்படம் அரசுடமையாக்கப்பட்டு, அது பள்ளிகள், கல்லூரிகள், பேருந்துகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், தமிழக அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் நிறுவப்பட்டது. இதற்காக தமிழ்நாடு அரசு அப்போதே அரசாணையும் வெளியிட்டது.
“அரசுடமையாக இருந்த சாதி, மத, சமய சார்பற்ற திருவள்ளுவரின் புகைப்படம், 1991இல், நாட்டுடமையாக்கப்பட்டது. அதன் பிறகு, அந்தப் புகைப்படத்தை நாட்டில் உள்ள அனைவரும் அச்சிட்டு பயன்படுத்தலாம்,” என்றார் கவுதமன்.
ஆனால், அந்தப் புகைப்படத்தில் மாற்றம் செய்து, அரசு ஏற்றுக்கொண்டதற்கு மாறாகச் செய்வது சட்டத்திற்குப் புறம்பானது என்றார் கவுதமன்.
“அரசு அங்கீகரித்த புகைப்படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து அவர் புகைப்படத்தை வெளியிடுவது சட்டத்திற்குப் புறம்பானது. சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே இப்படிச் செய்வது வருத்தத்திற்குரியது.”
திருவள்ளுவர் ஆன்மிகத்தை வலியுறுத்தினாரா?
ஆனால், சிலர் திருக்குறளில் அவர் ஆன்மிகத்தை வலியுறுத்தியிருந்ததாகவும் நம்புகின்றனர்.
இறை வழிபாடு குறித்து திருக்குறளில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கோயம்புத்தூர் பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கூறினார்.
“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி”
என்ற குறளைக் குறிப்பிட்டு பேசிய மருதாச்சல அடிகளார், “இந்தக் குறளில் இந்திரனை குறிப்பிட்டுள்ளதைப் போல, பல இடங்களில், சிவனையும் மற்ற தெய்வங்களையும் குறிப்பிட்டுள்ளதாகக் கூறினார்.
ஆனால், திருவள்ளுவர் எழுதிய குறள்கள் அனைத்தும் இந்து தர்மத்தில் இருந்து, வேதத்தில் இருந்து வந்தன என்று வாதங்களை அவர் ஏற்கவில்லை.
“திருக்குறளில் உள்ள அனைத்தும் வேதங்கள் சொல்லும் நீதி என்றும், பகவத் கீதையில் இருந்து வந்தன என்றும் சொல்கிறார்கள். ஆனால், திருக்குறள் வேத காலத்திற்கு முன்பே எழுதப்பட்டது. அப்படி பகவத் கீதையில் இருந்த வந்திருந்தால், சாதியைப் பற்றி திருவள்ளுவர் எழுதியிருப்பாரே, ஆனால், அவர் அதை எழுதவில்லை.
தொல்காப்பியத்தில் உள்ள பல நீதிகள் திருக்குறளில் உள்ளதே தவிர, வேத காலத்திற்கும் திருவள்ளுவர் காலத்திற்கும் தொடர்பே இல்லை,” என்றார்.
திருவள்ளுவர் இறைவழிபாட்டையும், ஒழுக்கத்தையும், நேர்மையையும், அன்பைப் பற்றியும் அதிகம் பேசியிருக்கிறார் என்றார், சாந்தலிங்க மருதாச்சல அடிகளார்.
தெய்வம் என்ற சொல்லை திருவள்ளுவர் எவ்வாறு பயன்படுத்தினார்?
இதில் முரண்படுகிறார் மாற்றுக்களம் நாடகக் குழுவின் நிறுவனரும், ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியருமான திலீப் குமார்.
“திருக்குறளை உன்னிப்பாகப் படித்தால் தெரியும், அவர் தெய்வம் என்றுதான் பயன்படுத்தியிருப்பாரே தவிர, எங்கேயும் கடவுள் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்க மாட்டார்.
அவரது குறள்களிலேயே, இயற்கையையும், முன்னோரையும் வழிபடச் சொல்லியிருப்பாரே தவிர, உருவ வழிபாடாக எந்தக் கடவுளையும் குறிப்பிட்டிருக்க மாட்டார். வள்ளுவர் தெய்வம் எனக் குறிப்பிடுவது அனைத்தும் குல தெய்வ வழிபாடுகள்தான்,” என்றார் திலீப் குமார்.
மேலும், வள்ளுவர் எழுதிய குறள்களை அந்தக் காலத்திற்கான இலங்கியங்கள் என்றும், அவற்றில் தற்காலத்திற்கு பொருத்தமானவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளலாம், எனவும் கூறினார்.
“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
என்ற குறளைக் குறிப்பிட்டுப் பேசிய திலீப் குமார், “தற்காலத்தில் இப்படி பெண்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. அந்தக் காலத்தில் இருந்த சமூகச் சூழலில், அத்தகைய நீதிகள் தேவைப்பட்டுள்ளதால் அப்படி எழுதியிருக்கலாம்,” என்றார்.
திருவள்ளுவர் என்பவர் ஒருவர் தானா என்ற சந்தேகமும் இருப்பதாகக் கூறிய திலீப், “திருக்குறள் அடங்கிய ஓலைச்சுவடிகளைக் கொடுத்த சமையல்காரர், சில ஓலைச்சுவடிகளை எரித்திருக்கவும் கூடும். அதை ஒரு நபர் தான் எழுதினாரா, அவர் எழுதியது மொத்தமே 1,330 குறள்கள் தானா என்பதும் நமக்குத் தெரியாது,” என்றார் திலீப் குமார்.
இதை, தமிழ் துறையின் முன்னாள் தலைவரும், கற்பகம் பல்கலைக்கழகத்தின் முதன்மையருமான (மாணவர் நலன்), தமிழரசியும் ஆமோதித்தார்.
“நமக்கு திருக்குறள் கிடைத்தபோதுகூட, அறம், பொருள், இன்பம் என பிரித்து கிடைக்கவில்லை. அவற்றைப் படித்துப் பார்த்த பின்னர், நம் வசதிக்காக அவற்றை வகைப்படுத்தி வைத்திருக்கிறோம்,” என்றார்.
மேலும், வள்ளுவருக்கு காவி உடை அணிந்து மதச்சாயம் பூசுவது அறியாமையின் உச்சம் என்றார் தமிழரசி.
“வள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். இனி ஒரு நூறு வருடங்கள் கழித்தும், அவர் கூறிய நீதிகள் நிற்கும். எந்தக் காலத்திற்கும் அவை பொருந்தக்கூடியதாக இருக்கும். ஆனால், அவரை ஒரு மதத்திற்குள் அடைப்பது அறியாமையின் உச்சம்,” என்றார்.
“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்”,
என்ற திருக்குறளைக் குறிப்பிட்டுப் பேசிய தமிழரசி, “இந்த ஒரு குறளை வைத்துக்கொண்டு, வள்ளுவர் சமணர் என்றும் வாதிடுவார்கள். சிலர், அவர் ஹிந்து மதத்தை சேர்ந்தவர் என சில வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு வாதிடுவார்கள். ஆனால், அவர் கூறிய அறமோ, அவர் வலியுறுத்திய நீதியோ எந்த மதத்தையும் சார்ந்ததல்ல,” என்றார் தமிழரசி.
அரசி்யல் காரணங்களுக்காக இலக்கியத்தை மாற்ற முயற்சிப்பதாகக் கூறிய தமிழரசி, “திருக்குறள் உண்மையிலேயே ‘உலகப் பொதுமறை’. அந்தப் பெயர் திருக்குறளுக்கு மட்டும் தான் மிகச் சரியாகப் பொருந்தும்,”என்றார்.
பிபிசி தமிழ்