இவர் வசந்தி வடிவேல். விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான வடிவேல் வசந்தி தற்போது இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பின் புதுமண்டபத்தடியில் வசித்து வருகிறார்.
1996இல் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோதே விடுதலை புலிகள் அமைப்பினர் தன்னைக் கடத்தியதாக அவர் கூறுகிறார்.
ஈழப்போரின்போது தனது முகம் சிதலமடைந்ததாகவும் இதனால் ஒரு கண்ணில் பார்வையை இழந்துவிட்டதாகவும் வடிவேல் வசந்தி கூறுகிறார்.
மகனுக்கு 2 மாதங்களாக இருக்கும்போது வடிவேல் வசந்தியை அவரது கணவர் விட்டுச் சென்றார். யுத்தத்தின் மூலம் தனக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த வடிவேல் வசந்தி தற்போது, எவ்வித உதவியும் இன்றி வாழ்வதாக ஆற்றாமையோடு கூறுகிறார்.
சொந்தமாக வீடு கட்டுவதற்கு அவருக்கு அரசின் உதவி கிடைத்தது. அதேநேரம், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை தற்போதுவரை கிடைக்கவில்லை என்றும் வடிவேல் வசந்தி கூறுகிறார்.