• ஈரோடு சிட்டிங் எம்.பி கணேசமூர்த்தி, தற்கொலைக்கு முயன்ற நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை கணேசமூர்த்தி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு தொகுதியின் சிட்டிங் எம்.பி.யாக உள்ளவர் கணேசமூர்த்தி. மூத்த அரசியல்வாதியான இவர், திமுக-வில் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்தார்.
1993-இல் தி.மு.க.-இல் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது அவருக்கு ஆதரவு தெரிவித்து கணேசமூர்த்தியும் தி.மு.க.-வில் இருந்து வெளியேறினார்.
ம.தி.மு.க.தொடங்கப்பட்டதில் இருந்து ஈரோடு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த கணேசமூர்த்தி, ம.தி.மு.க.-வின் பொருளாளராகவும் இருந்துள்ளார். இதுவரை மூன்று முறை எம்.பி. மற்றும் ஒருமுறை எம்எல்ஏ-வாக பதவி வகித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும், கணேசமூர்த்திக்கும் கருத்து முரண்பாட்டால் பேசிக் கொள்ளாமல் இருந்துள்ளனர் என்றெல்லாம் தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த முறை ஈரோடு தொகுதியில் மீண்டும் போட்டியிட மதிமுக தலைமையிடம் கணேசமூர்த்தி கோரிக்கை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதற்காக பல முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வந்துள்ளார். ஆனால், ஈரோடு தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. மதிமுக-வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட திருச்சி தொகுதியிலும் துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தான் கணேசமூர்த்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை, தென்னை மரத்தில் வண்டுகள் வராமல் இருக்க பயன்படுத்தக்கூடிய மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவருக்கு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கணேசமூர்த்தியை, வைகோவும், அவரது மகன் துரை வைகோவும் நேரில் சென்று பார்த்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை கணேசமூர்த்தியின் உயிர் பிரிந்தது.