சீன ஆய்வு கப்பல்களினால் சிக்கல்களை எதிர்கொண்ட இலங்கைக்கு, இப்போது ஜேர்மனியின் ஆய்வுக் கப்பல் சிக்கலைத் தோற்றுவித்திருக்கிறது.
ஜேர்மனின் ஆய்வு கப்பல் ஒன்று, கொழும்பு துறைமுகத்தில் தரித்துச் செல்வதற்கு, இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியதற்கு, சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த சிக்கல் தோன்றியிருக்கிறது.
கடந்த வாரம் சீன தூதரகம் இது தொடர்பாக அரசாங்கத்துக்கு கடுமையான அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் செய்தி ஒன்றை அனுப்பி இருந்தது.
ஜேர்மன் ஆய்வுக் கப்பலையோ, அதன் நடவடிக்கைகளையோ சீனா ஆட்சேபிக்கவில்லை. கடந்த பெப்ரவரியில், சீன ஆய்வுக் கப்பலை இலங்கை கடற்பரப்பில் நுழைவதற்கு அரசாங்கம் தடை விதித்திருந்த நிலையில், ஜேர்மன் கப்பலுக்கு மாத்திரம் எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது என்பது தான், சீனாவின் கேள்வியாக இருந்தது.
சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு அடிக்கடி வந்து செல்வதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பை வெளியிட்டு வந்தது.
யுவான் வாங் -5’
கடந்த 2022 ஓகஸ்ட் மாதம், சீனாவின் ‘யுவான் வாங் -5’ என்ற ஆய்வுக் கப்பல், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்துச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது.
அதன் பின்னர், ‘ஷி யான்- 6’ என்ற ஆய்வுக் கப்பலும் இந்தியாவின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், கொழும்பு துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்பட்டது.
இந்தக் கப்பல்கள் இந்தியாவை உளவு பார்ப்பதாகவும், இவற்றினால் தமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுவதாகவும் இந்தியா கவலை தெரிவித்தது.
அதற்குப் பின்னர், ‘ஷியாங் யாங் ஹோங் -3’ என்ற ஆய்வுக் கப்பல் கடந்த பெப்ரவரி மாத தொடக்கத்தில் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அனுமதி கோரியது.
இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், இலங்கை அரசாங்கம் வேறுவழியின்றி, வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் நுழைவதற்கு ஒரு வருட தடையை விதிப்பதாக அறிவித்தது.
அதனடிப்படையில் சீன ஆய்வுக் கப்பல் மாலைதீவுக்குச் சென்று ஆய்வுகளில் ஈடுபட்டது. சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்ட மை பீஜிங்கிற்குப் பெரும் அடி என்று இந்திய ஊடகங்கள் கருத்து வெளியிட்டிருந்த அதேவேளை, இந்த தடைக்கு இந்தியாவின் அழுத்தங்களே காரணம் என்று சீன ஊடகங்கள் குற்றம்சாட்டியிருந்தன.
இந்த விவகாரம் சற்று ஓய்வுக்கு வந்த நிலையில் தான், ஜேர்மனி ஆய்வுக் கப்பலினால் புதிய சர்ச்சை தோன்றியிருக்கிறது.
ஜேர்மனியின் ஆய்வுக் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சென்றது யாருக்குமே தெரியாது. அது கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முந்திய கதை.
சீனா எதிர்ப்பை வெளிப்படுத்திய பின்னர், வெளிவிவகார அமைச்சு அதனை நியாயப்படுத்திய போதும், கொழும்பு வந்த ஜேர்மனியின் ஆய்வுக் கப்பல் எது என்ற தகவல் யாருக்கும் தெரியாது.
பிரத்தியேகமாக திரட்டப்பட்ட தகவல்களுக்கு அமைய, ஜேர்மனியின், ஆர்வி சோனே (RV SONNE) என்ற ஆய்வுக்கப்பலே கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சென்றிருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.
அந்தக் கப்பல், கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி இரவு 7.14 மணியளவில் கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றது.
சீனாவின் எதிர்ப்பு குறித்த தகவல்கள் வெளியான போது, அதாவது கடந்த வார நடுப்பகுதியில், அந்தக் கப்பல், வங்காள விரிகுடாவில், கொல்கத்தாவுக்கு அண்மையில் காணப்பட்டது.
பசுபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஆய்வுகளில் ஈடுபடுவதற்காக, 2014இல் கட்டப்பட்ட இந்தக் கப்பல், ஜேர்மன் அரசாங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வு அமைச்சுக்குச் சொந்தமானது.
ஓல்டன்பேர்க் (Oldenburg ) பல்கலைக்கழகத்தின், கடல் இரசாயன மற்றும் உயிரியல் நிறுவனத்தினால் இந்தக் கப்பல் நிர்வகிக்கப்படுகிறது.
118.42 மீற்றர் நீளமான இந்தக் கப்பல், 7500 கடல் மைல்கள் வரை சென்று, தொடர்ச்சியாக 50 நாட்கள் ஆய்வுகளில் ஈடுபடக் கூடியது.
இந்தக் கப்பலில், 40 விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களும், 35 மாலுமிகளும் பணியாற்றுகின்றனர்.
இந்தக் கப்பலில், 521 சதுர மீற்றர் பரப்பளவுள்ள பல்வேறு அடுக்குகளில், 17 ஆய்வகங்கள் உள்ளன. அவற்றில் நான்கு உலர் ஆய்வகங்களும், 2 ஈரலிப்பு ஆய்வகங்களும், 2 காலநிலை ஆய்வகங்களும் உள்ளடங்கியிருக்கின்றன.
கடல் புவியியல், புவி பௌதிகவியல், உயிரியல், உயிர் புவி இரசாயனவியல் மற்றும் காலநிலை ஆராய்ச்சி போன்ற பல்வேறு துறைகளின் ஆய்வுத் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய இந்த கப்பல், கடலில் இடைநிலை ஆராய்ச்சியை மேற்கொள்ளக் கூடியது.
இந்தக் கப்பல் இலங்கை வந்து சென்றதோ, இந்தியப் பெருங்கடலில் ஆய்வில் ஈடுபடுவதோ சீனாவுக்குப் பிரச்சினையல்ல.
தமது ஆய்வுக் கப்பலுக்கு தடைவிதித்து விட்டு, ஜேர்மன்ஆய்வுக் கப்பலை அனுமதித்தமை தான் அதற்குச் சிக்கல்.
சீனாவினால் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில், வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நிலுகா கதிருகமுவ, அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட தடை, ஆய்வுகளை மேற்கொள்வதற்கே தவிர, கப்பலுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்கு அல்ல என்று பதிலளித்திருக்கிறார்.
“ஜேர்மனின் ஆய்வுக் கப்பல் அண்மையில், விநியோகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அனுமதி கோரியது, அதற்கு அனுமதி வழங்கப்பட்டது” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இது சீனாவைத் திருப்திப்படுத்தக் கூடிய பதில் எனக் கொள்ள முடியாது.
இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கு தடைவிதித்த போது, துறைமுகங்களில் விநியோக தேவைகளை பெற்றுக் கொள்வதற்கும், மாலுமிகள் மாறிச் செல்வதற்கும் தடைவிதிக்கப்படுகிறதா என்று தெளிவாக குறிப்பிடவில்லை.
அதனால் தான், இந்தக் குழப்பம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், சீனாவின் ஆய்வுக் கப்பல், அம்பாந்தோட்டைக்கும் பின்னர் கொழும்புக்கும் வந்த போது, இந்தியா அதனைக் கடுமையாக எதிர்த்தது. அமெரிக்காவும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.
அந்தக் கப்பல்கள் பிரதானமாக விநியோகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே, இலங்கைத் துறைமுகங்களுக்கு வந்தன.
எனினும், அந்தக் கப்பல்கள் இலங்கையில் தரித்து நின்ற போதும், இலங்கை கடற்பரப்பில் பயணம் செய்த போதும், இந்திய பாதுகாப்பு நிலைகளை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
மூன்றாவது ஆய்வுக் கப்பல் தான், இலங்கை கடல் எல்லைக்குள் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி கோரியது. இவ்வாறான நிலையில், அரசாங்கத்தின் பதில் சீனாவைத் திருப்திப்படுத்தாது.
அதேவேளை, சீனா இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இலங்கை அரசாங்கத்தைச் சோதித்துப் பார்க்கவும் தயங்காது.
ஜேர்மன் ஆய்வுக் கப்பல் தரித்துச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது போல, தமது ஆய்வுக் கப்பலை, கொழும்பு அல்லது அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்துச் செல்வதற்கு அனுமதிக்குமாறு, கோரக் கூடும் என்று, இராஜதந்திரிகள் மட்டத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், அரசாங்கம் மேலும் சங்கடமான நிலை ஒன்றுக்குள் தள்ளப்படக் கூடும்.
அதாவது சீன ஆய்வுக் கப்பலை இலங்கைக்குள் அனுமதித்தால், இந்தியா கடுமையான குடைச்சலைக் கொடுக்கும். அமெரிக்காவும் தன் பங்கிற்கு, அழுத்தங்களைக் கொடுக்க வாய்ப்புகள் உள்ளன.
அதுவும் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ள சூழலில், சீனா தனது ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி கோரினால், பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகப்படுத்தும். அது இந்திய தேர்தல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதேவேளை, இலங்கையிலும் சில மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில், பூகோள அரசியல் போட்டிக்குள் கொழும்பு சிக்கிக் கொள்வது, உள்நாட்டு அரசியலின் உறுதிப்பாட்டை பாதிக்கும்.
ஆக மொத்தத்தில், இரகசியமாக ஜேர்மன் ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி அளிக்கப் போய், அரசாங்கம் அவஸ்தைக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
– ஹரிகரன்-