ஐரோப்பாவின் மிகவும் வயதான நபரான பிரான்ஸ் நாட்டு கன்னியாஸ்திரி தனது 117 ஆவது பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றிலிருந்து உயிர்பிழைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
1944 இல் ஆண்ட்ரே என்ற பெயரை பெற்றுக்கொண்டு கன்னியாஸ்திரியான லூசில் ராண்டனுக்கு, ஜனவரி 16 ஆம் திகதி அன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் எந்த அறிகுறிகளும் அவருக்கு தென்படவில்லையாம்.
தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை தான் உணரவில்லை என அவர் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த கன்னியாஸ்திரி, பிரான்சின் தென் பகுதியிலுள்ள டூலோனில் உள்ள தனது ஓய்வூதிய விடுதியில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டார், ஆனால் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார்.
பார்வையற்று மற்றும் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் கன்னியாஸ்திரி ஆண்ட்ரே, வியாழக்கிழமை தனது பிறந்தநாளை வழக்கத்திற்கு மாறாக சிறிய குழுவினருடன் கொண்டாடவுள்ளார்.
“அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி” என சைன்ட் கேத்தரின் லபோரே ஓய்வூதிய விடுதியின் செய்தித் தொடர்பாளர் டேவிட் தவெல்லா தெரிவித்துள்ளார்.
மேலும், “அவர் உடல்நிலை பற்றி என்னிடம் கேட்கவில்லை, ஆனால் அவருடைய பழக்கங்களைப் பற்றி, உதாரணமாக, உணவு, படுக்கை நேர அட்டவணை மாறுமா என்பதை அறிய விரும்பினார்.
அவர் நோய்க்கு எந்த பயமும் காட்டவில்லை. மறுபுறம், அவர் விடுதியிலுள்ள ஏனையவர்களை பற்றி மிகவும் அக்கறை கொண்டிருந்தார் என தெரிவித்துள்ளார்.
கன்னியாஸ்திரி ஆண்ட்ரே 1904 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதி பிறந்தார். ஐரோப்பாவின் மிகப் பழமையான நபராகவும், ஜெரொன்டாலஜி ரிசர்ச் குழுமத்தின் (ஜி.ஆர்.ஜி) “சூப்பர் சென்டினிரியன்ஸ்’ விருதுக்கான தரவரிசை பட்டியலில், உலகின் இரண்டாவது மிகவும் வயதான நபராகவும் உள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு அவர் பயப்படுகிறாரா என்று பிரெஞ்சு ஒளிபரப்பாளரான பி.எஃப்.எம் கேட்டபோது, “இல்லை, நான் பயப்படவில்லை, ஏனென்றால் நான் மரணிக்க பயப்படவில்லை என கன்னியாஸ்திரி ஆண்ட்ரே தெரிவித்துள்ளார்.