யாழ் மாவட்டத்தில் 489 குடும்பங்களை சேர்ந்த 950 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர் என மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேஸன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் குறித்து இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டம் அபாய நிலைக்கு செல்லாமல் இருப்பதற்கு வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்.மாவட்டத்திற்கு வருவோர் தயவு செய்து தாங்களாகவே சுயதனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் இதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்தலாம்.
யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாய நிலை ஏற்படவில்லை. ஆனாலும் மாவட்டத்தில் தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. எனவே வெளிமாவட்டங்களில் இருந்துவருவோர் தமது பாதுகாப்பையும், தாம் சார்ந்த சமூகத்தினது பாதுகாப்பையும் கருதி சுயதனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
தற்போது யாழ் மாவட்டத்தில் 489 குடும்பங்களை சேர்ந்த 950 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர். மேலும் கொவிட் -19 தடுப்பூசி சில வாரங்களில் கிடைக்கப்பெறும் என நம்புவதுடன் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
எனவே மாவட்டத்திலுள்ள மக்களும், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மக்களும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மிக இறுக்கமாக பின்பற்றி சுகாதார பிரிவுக்கும், சமூகத்திற்கும் ஒத்துழைக்கவேண்டும். என்றார்.