ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் வலம் வந்த நாயின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதில் இந்தியர்களை அடித்து கொள்ள ஆளே இல்லை என்ற அளவிற்கு நிலைமை மிக மோசமாக உள்ளது.
இதன் விளைவாக இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கின்றனர். சாலையில் வாகன ஓட்டிகள் செய்யும் தவறுகளே இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது.
செல்போனில் பேசிக்கொண்டும், குடிபோதையிலும் அசட்டுத்தனமாக வாகனங்களை ஓட்டுவது, பொது சாலையை ரேஸ் டிராக் என நினைத்து கொண்டு அதிவேகத்தில் பறப்பது, சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணம் செய்வது என நம்ம ஆட்கள் செய்யும் போக்குவரத்து விதிமுறை மீறல்களை அடுக்கி கொண்டே போகலாம்.
இதுதவிர இந்தியர்களிடம் காணப்படும் மற்றொரு பொதுவான கெட்ட பழக்கம் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதுதான்.
இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது.
ஆனால் ஹெல்மெட் அணிவதை ஏதோ நிலாவிற்கு செயற்கைகோளை அனுப்புவது போல் கடினமான காரியமாகவே பலர் பார்க்கின்றனர்.
அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் க்யூட்டான நாய் ஒன்று அருமையான புத்திமதியை சொல்லியுள்ளது. ஆம், நாங்கள் இங்கே பேசி கொண்டிருக்கும் நாய் ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளது.
அதுவும் மனிதர்களை போல அழகாக இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து அதன் உரிமையாளரின் தோளில் காலை போட்டு கொண்டு பயணித்துள்ளது.
இந்த சம்பவம் தமிழகத்தில்தான் நடைபெற்றுள்ளது. சென்னை விருகம்பாக்கம் காளியம்மன்
கோயில் தெருவில் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட நாயின் உரிமையாளர் அதற்கு ஹெல்மெட் அணிவித்து இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர வைத்து கூட்டி சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக சாலையில் பயணித்த மற்ற வாகன ஓட்டிகள் அதனை வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்பட சமூக வலை தளங்கள் அனைத்திலும் அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. மனதை கவரும் வகையில் உள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்
ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தும் வகையில் இந்த வீடியோ விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக நெட்டிசன்கள் ஒரு சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அல்லது போலீசுக்கு பயந்து கொண்டு நாயின் உரிமையாளர் இவ்வாறு செய்தாரா? என்பது தெரியவில்லை. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதுதான் விதி.
ஆனால் அந்த விதிமுறை தமிழகத்தில் முறையாக அமல்படுத்தப்படவில்லை. எனவே கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு, இது தொடர்பான வழக்கு ஒன்றில் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதன்பின் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக தமிழக போலீசார் சாட்டையை சுழற்றி வருகின்றனர்.
ஒரு வேளை விபத்து நிகழ்ந்தால், தன் வளர்ப்பு நாய்க்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்ற நோக்கத்தில் கூட அவர் அதற்கு ஹெல்மெட் அணிவித்து கூட்டி சென்றிருக்கலாம்.
எது எப்படியோ இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த பிறகாவது இனி ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் பேருக்காவது வந்தால் பரவாயில்லை.
இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு இருக்கும் முக்கியமான பாதுகாப்பே ஹெல்மெட்தான். ஆனால் முடி கொட்டுகிறது, வியர்க்கிறது என ஏதேதோ சாக்கு போக்குகளை சொல்லிக்கொண்டு ஹெல்மெட் அணிவதை பலர் தவிர்க்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் இந்த வீடியோ ஒரு பாடம் என்பதில் சந்தேகமில்லை.
இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் சாலை விபத்துக்களில் சிக்கினால் தலையில் பலத்த காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இப்படி தலையில் ஏற்படும் காயமே பெரும்பாலானோரின் உயிரிழப்பிற்கு காரணம்.
ஆனால் ஹெல்மெட் அணியும் பட்சத்தில், தலையில் காயம் ஏற்படுவதையும், உயிரிழப்பையும் தவிர்க்க முடியும்.