சென்னை: சமூகவலைதளங்களில் வைரலாக பரவிய மொட்டை மாடியிலிருந்து தூக்கிவீசப்பட்ட நாய், அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளது.
அந்த நாய்க்கு பத்ரா எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாடியில் நின்றபடி இளைஞர் ஒருவர் நாய் ஒன்றைத் தூக்கி கீழே வீசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியது.
4வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட அந்த நாய், கீழே விழுந்து துடிக்கும் காட்சிகள் பார்ப்பவர்கள் மனதை பதைபதைக்கச் செய்தது.
இந்த வீடியோவிற்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நாயைத் தூக்கிப் போட்டு, அதனை வீடியோவாகப் பதிவு செய்தவர்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எனத் தெரிய வந்தது.
தற்போது தலைமறைவாக உள்ள அந்த மாணவர்களைக் கைது செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, போலீசாருடன் விலங்குகள் நல ஆர்வலர் ஷ்ரவன் கிருஷ்ணன் சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார்.
அப்போது அங்கு பலத்த காயங்களுடன் மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட நாய் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
உடனடியாக அந்த நாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது ஷ்ரவன் பராமரிப்பில் உள்ள அந்த நாய்க்கு பத்ரா எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது அந்த நாய் மெல்ல மெல்ல உடல் நலம் தேறி வருவதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக ஷ்ரவன் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அத்தகவலை ஷேர் செய்துள்ளனர். கமெண்ட் செய்துள்ளவர்கள் தங்களின் மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.