முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ஆம் ஆண்டும் மே 21-ஆம் தேதி சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனையும், நளினி உள்ள மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளித்தனர்.
இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் எனவும் தெரிவித்தது.
இதையடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி ஏற்கனவே ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயகுமார் உள்ளிட்ட 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துடன் பேரவையில் சிறப்பு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசின் முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது.
மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.
அதன் பிறகு இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்தது.
இதனிடையே தாங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் தன்னை தண்டனையில் இருந்து விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து அவர்களது கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால் அவர்களை விடுதலை செய்ய முடிவுசெய்து அதற்கு மத்திய அரதின் ஒப்புதல் கோரி 2016-ஆம் ஆண்டு இரண்டு கடிதங்களை அனுப்பி வைத்தது. அதற்கு மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதனிடையே தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறு ஆய்வு மனு மீதான விசாரணையில் 7 குற்றவாளிகளையும் விடுவிப்பது குறித்து மத்திய அரசின் கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி 23-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து தற்போது சிறையில் உள்ள 7 பேரின் உடல் ஆரோக்கியம், மனநிலை, பொருளாதார பின்னணி, சமூக பின்னணி, குடும்பச் சூழல், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விபரம் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.
மத்திய அரசின் கடிதத்துக்கு தமிழக அரசின் சார்பில் உரிய பதிலும் அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசு சட்டரீதியாக ஆலோசித்து வருவதாகவும், மத்திய அரசின் முடிவு விரைவில் உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்படும் என தகவல்கள் வெளியானது.
இதனால் சிறையில் உள்ள 7 பேரையும் விரைவில் விடுதலை செய்ய வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில், 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாகவும், மாநில அரசின் கோரிக்கையில் மத்திய அரசு ஒத்துப்போகவில்லை என்றும் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசின் வேண்டுகோள் மனுவை நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் கொலைக்குற்றவாளிகள் எந்த சூழலிலும் சுதந்திரமாக நடமாட முடியாது என உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக தகவல் வெளியானது.
குடியரசுத் தலைவரின் முடிவை ஆதரித்து டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, ராஜீவ் கொலையின் முக்கிய தலைமை கொலையாளி இத்தாலியில் உள்ளதாகவும், அவர் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதையடுத்து சுவாமியின் தகவல் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பான கேள்வி கணைகளை எழுப்பி வருகிறது. அதாவது, ராஜீவ் கொலையின் முக்கியக் கொலையாளி இத்தாலியில் இருப்பதாக சுப்பிரமணின் சுவாமி கூறுவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனையா? அல்லது புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், 2009-இல் நடந்த போரில் விடுதலைப் புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டதாகவும், பிரபாகரன் வாரிசு மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் யாருமே இல்லை என உறுதியாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பிரபாகரன் ஆதரவாளர்களான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சீமான் உள்ளிட்டோர், தேவைப்படும் சூழ்நிலையில் பிரபாகரன் வெளியே வருவார். அவர் மரணிக்கவில்லை எனக் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில்தான் இருக்கிறேன் என்பதை நினைவுபடுத்துவதற்காகவே அதிரடி அறிக்கை போர் நடத்தும் சுப்பிரமணியன் சுவாமி, முக்கிய சதிகாரர் இத்தாலியில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிடுவது பிரபாகரனையா? பொட்டு அம்மானையா? என்பதுதான் சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகிற பரபரப்பான கேள்வியாக உள்ளது.
இதற்கு சுப்பிரமணியன் சுவாமி தெளிவான விளக்கம் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் சமூக ஊடக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.