காக்கிச் சட்டை தமிழ்த்திரைப்படங்களில் அடிக்கடி உச்சரிக்கிற வசனம் “ஸ்காட்லாந்து போலீஸுக்கு அடுத்து நாங்கதான்”. ஏனெனில் உலகின் நம்பர் ஒன் காவல்துறை ஸ்காட்லாந்து. ஆனால் அவர்களையே கதற வைத்திருக்கிறது ஒரு புலி, இல்லை பொம்மைப் புலி….
24 வயது புரூஸ் க்ரப் ஸ்காட்லாந்தின் அபர்டன்சயர் மாகாணத்தில் பீட்டர்ஹெட் என்கிற பகுதியில் மாட்டுப் பண்ணை நடத்தி வருகிறார்.
அங்குப் பல பசுக்கள் கர்ப்பமாக இருந்தன. அவற்றின் நடவடிக்கைகளைக் கவனிக்க கடந்த 6 தேதி இரவு பண்ணைக்கு வந்தவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. காரணம் பண்ணைக்குப் பக்கத்தில் பெரிய புலி ஒன்று படுத்திருந்தது.
புலியைப் பார்த்தவருக்குப் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. புலி பண்ணைக்குள் புகுந்துவிடுமோ என்கிற பயம் அதிகரிக்க ஸ்காட்லாந்தின் நார்த் ஈஸ்ட் காவல்துறைக்கு போன் செய்துவிட்டார்.
காவல்துறை புலி என்றதும் துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்குக் கிளம்பியது. வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. பீட்டர் ஹெட் பரபரப்பாகிறது.
துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு ஆறு கார்களில் சம்பவ இடத்திற்கு வருகிறார்கள் போலீஸார். சம்பவ இடத்தைத் துப்பாக்கி முனையில் சுற்றி வளைக்கிறார்கள். புலி படுத்திருப்பது உறுதிசெய்யப்படுகிறது.
புரூஸ் க்ரப்பிடம் விசாரணை நடக்கிறது. பக்கத்தில் இருக்கிற தேசியப் பூங்காவிலிருந்து ஏதேனும் விலங்கு தப்பித்துச் சென்றிருக்கிறதா என விசாரிக்கிறார்கள்.
சில துப்பாக்கிகள் புலியின் நடவடிக்கையைக் கவனித்துக்கொண்டிருக்கின்றன. சுமார் 45 நிமிடங்கள் புலியின் அசைவுக்காகக் காத்திருக்கிறார்கள்.
ஆனால் புலியிடமிருந்து எந்த அசைவும் இல்லாமல் இருக்கிறது. புலியின் நடவடிக்கையில் சந்தேகமான காவல்துறை புலியை நெருங்க ஆரம்பிக்கிறார்கள். பதற்றத்தோடு பக்கத்தில் போனவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் அங்கே படுத்திருந்தது புலி அல்ல, பொம்மைப் புலி. ஒட்டு மொத்தக் குழுவும் கொலைவெறியோடு புலி என்று போன் செய்த புரூஸ் க்ரப் பக்கம் திரும்புகிறார்கள்.
புரூஸ் க்ரப் சரக்கடித்திருக்கிறாரா எனச் சோதனை செய்கிறார்கள். ஆனால் அவர் “என் பண்ணையில் 200 பசுக்கள் கர்ப்பமாக இருக்கின்றன.
அவை எப்போது வேண்டுமானாலும் குட்டி போடலாம், ஒவ்வொரு நொடியும் காத்திருக்கிறேன், இப்படியான சூழ்நிலையில் எப்படிக் குடிக்க முடியும் எனச் சொல்கிறார்.
யார் பொம்மைப் புலியை இங்கே கொண்டு வந்து வைத்தது என்கிற கோணத்தில் விசாரித்தார்கள். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
ஸ்காட்லாந்த்து
இவ்வளவு காவல்துறை அதிகாரிகள் வந்தும் 45 நிமிடங்களுக்குப் பிறகே அது பொம்மை எனக் கண்டுபிடிக்க முடிந்தது. புரூஸ் க்ரப் என்ன செய்வார். அவர் செய்தது சரி எனச் சொல்லிவிட்டு காவல்துறை பொம்மைப் புலியைப் பறிமுதல் செய்து எடுத்துச் செல்கிறார்கள்.
அடுத்தநாள் நார்த் ஈஸ்ட் காவல்துறையின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கத்தில் “சம்பவம் நடந்தது உண்மைதான்.
நல்ல நோக்கத்திற்காகத்தான் அந்தத் தகவல் சொல்லப்பட்டது. கடினமான சூழ்நிலைகளில் மக்களைப் பாதுகாப்பதே எங்களின் பணி, இந்தமாதிரியான சூழ்நிலையையும் நாங்கள் கருத்தில்கொண்டு துரிதமாகச் செயல்படுவோம்” எனப் பதிவிடுகிறார்கள்.
புலியைப் பார்த்து பயப்படாமல் இருந்தால் அப்புறம் புலிக்கு என்ன மரியாதை?