ஷீனா போரா கழுத்தை இந்திராணி நெரித்துக் கொன்றதாக அப்ரூவராக மாறியுள்ள ஓட்டுனர் ஷியாம்வர் ராய் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி(43) தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
இந்திராணி முகர்ஜி மற்றும் சித்தார்த்தா தாஸ் உள்ளிட்டோருக்கு பிறந்ததாக கூறப்படும் ஷீனா போராவை அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, நிதி பிரச்சனை காரணமாக கொலை செய்துள்ளார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்திராணி முகர்ஜி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து அவரது இரண்டாவது கணவர் என்று கூறப்படும் சஞ்சீவ் கண்ணா, கார் ஓட்டுனர் ஷியாம்வர் ராய் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கார் ஓட்டுனர் ஷியாம்வர் ராய் அப்ரூவராக மாற நீதிமன்றம் அண்மையில் அனுமதி அளித்தது. இந்நிலையில், அப்ரூவராக மாறிய ராய் அளித்துள்ள வாக்குமுலத்தில், ‘இந்திராணி, காருக்குள் வைத்து ஷீனாவின் கழுத்தை நெரித்துக் கொன்றார்.
நான் ஷீனா சத்தம் போடாமல் இருக்கும் பொருட்டு அவரது வாயை பொத்திக் கொண்டேன். சஞ்சய் கண்ணா, ஷீனாவை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்’ என்று கூறியுள்ளார்.
ஆனால், பீட்டர் முகர்ஜி குறித்து ஷியாம்வர் ராய் எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கார் ஓட்டுனர் ஷியாம்வர் ராய் அளித்த 12 பக்க வாக்குமூலம் சிறையில் இருக்கும் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.