• ஒரு சந்தை (பொருளாதார மத்திய நிலையம்) எங்கு அமைய வேண்டும் என்பது குறித்து ஒரு முடிவிற்கு வரமுடியாத தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து எவ்வாறு விவாதித்து முடிவிற்குக் கொண்டுவரப்போகிறார்கள்??
• இப்பிரச்சனையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இது தொடர்பில் முடிவுகள் எதனையும் எடுக்காது இழுத்தடித்து வருவதன் மர்மம் என்ன?
•இவ் விடயத்தைச் சாட்டாக வைத்து வடமாகாண முதலமைச்சருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த சிலர் திரைமறைவில் இயங்கி வருவதாகவும் அவர்கள் ஏனைய உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு தாண்டிக்குளத்திற்கு ஆதரவு அளிக்குமாறு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அறிய முடிகிறது.
தொடர்ந்து….
கடந்த சில வாரங்களாக தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் வடக்கைச் சேர்ந்த பொதுமக்களிடையே அதிகம் பேசப்படும் பேசுபொருளாக வடக்கின் பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைய வேண்டும் என்கின்ற விவாதம் காணப்படுகின்றது.
குறிப்பாக கூட்டமைப்பினரது பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இது தொடர்பாக இரு அணிகளாகப் பிரிந்து நின்று தம்முள் முரண்பட்டு வருகின்றனர்.
இவ் விடயம் தொடர்பில் ஒரு முடிவினை எட்டும் நோக்குடன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டப்பட்ட கூட்டத்தில் இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படாததுடன் வடக்கைச் சேர்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் கருத்
துக்களைக் கடிதம் மூலமாக கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தவிர
கடந்த வியாழக்கிழமை இவ்விடயம் தொடர் பில் கலந்துரையாடி ஓர் முடிவினை எட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கூட்ட மும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
நேற்றும் இவ்விடயம் குறித்து பாராளுமன்றக் கட்டத் தொகுதியில் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கூடி ஆராய்ந்துள்ளனர்.
ஆக இப்பந்தி எழுதப்படும்வரை வடக்கின் பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைய வேண்டும் என்பது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஓர் உறுதியான முடிவிற்கு வரமுடியாதவர்களாகக் காணப்படுகின்றனர்.
இங்கு எழக்கூடிய பிரச்சினை என்னவென்றால் ஒரு சந்தை (பொருளாதார மத்திய நிலையம்) எங்கு அமைய வேண்டும் என்பது குறித்தான சாதக மற்றும் பாதக நிலைமைகளை ஆராய்ந்து அது தொடர்பில் ஓர் உறுதியான முடிவிற்கு வரமுடியாத தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் அவர்களின் தலைமையும் மிகப்பெரிய சவால்மிக்கதான தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து எவ்வாறு விவாதித்து முடிவிற்குக் கொண்டுவரப்போகிறார்கள் என்கின்ற ஐயத்தை தோற்றுவித்துள்ளது.
ஒரு விடயத்தை ஆராய்ந்து முடிவெடுப்பது தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடத்தில் காணப்படுகின்ற இயலாமையும், திறமையின்மையும் காரணமாக இவ்விடயம் மேலும் மேலும் விவாதிக்கப்பட்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையே விரிசல்களையும் ஒற்றுமையின்மையினையும் ஏனைய பிரச்சினைகளையும் உருவாக்கும் ஒன்றாக மாறியுள்ளது எனலாம். இது ஒட்டுமொத்த தமிழர்களின் அரசியல் பயணத்திற்கே வேட்டு வைக்குமொன்றாக கூட மாறிவிடக் கூடிய அபாயம் உள்ளது.
பொருளாதார ரீதியாக ஆராய்ந்து பார்க்குமிடத்து வடக்கின் பொருளாதார மத்திய நிலையம் வடமாகாணத்தின் மையப்பகுதியான மாங்குளத்தில் தான் அமைக்கப்பட வேண்டும் என கருதப்படுகின்றது.
ஆனால் சில காரணங்களால் இது வவுனியா மாவட்டத்தில் அமைப்பதென்பதாகத் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் வவுனியா நகருக்கு அண்மையில் உள்ள தாண்டிக்குளம் பிரதேசத்திலா அல்லது வவுனியா நகரிலிருந்து ஏறத்தாழ 10 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ஓமந்தைப் பிரதேசத்திலா இப்பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப்பது என்பது தொடர்பிலேயே தற்போது கூட்டமைப்பினரிடையே இழுபறி நிலைமை காணப்படுகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கூட் டத்திற்கு வருகைதந்த கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர்களான சரவணபவன், சிவமோகன், சாந்தினி ஸ்ரீஸ்கந்தராஜா போன்றோரும், சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் போன்ற வடமாகாண அமைச்சர்களும் வடக் கின் பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்திலேயே அமைய வேண்டும் என தமது ஆதரவினைத் தெரிவித்திருந்தனர்.
இவர்கள் இரண்டு வாதங்களை பிரதானமாக முன்வைத்திருந்தனர்.
ஒன்று ஓமந்தையில் இப்பொருளாதார மத்திய நிலையத்தினை அமைக்கக் கூடிய காணி இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை. ஆகவே ஏற்கனவே இனங்காணப்பட்ட தாண்டிக்குளத்திலுள்ள விவசாயப் பண்ணை அமைந்துள்ள காணியில் சந்தையை அமைக்க வேண்டும் என்பது.
இரண்டாவது காரணம், மத்திய அமைச்சர் ஒருவர் இப்பொருளாதார மத்திய நிலையத்தை மதவாச்சிக்குக் கொண்டு செல்வதற்கு முயற்சிக்கிறார் ஆகவே இதனை தடுத்துநிறுத்தும் முகமாக வடக்கில் எங்கையாவது சரி உடனடியாக சந்தை அமைக்கும் பணியினை ஆரம்பித்து விடவேண்டும் என்பதாகும்.
இவ்விடயம் தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து பார்த்ததில் இவர்களது இவ்விரண்டு வாதமும் பொருத்தமற்றது எனத் தெரியவந்துள்ளது.
ஓமந்தையில் காணி உறுதி செய்யப்படவில்லை என்பது தொடர்பிலான விடயங்களை விளக்கி கடிதம் அனுப்பியுள்ள வடமாகாண காணி ஆணையாளர் ஓமந்தைப் பிரதேசத்தில் இரண்டு காணிகளை அடையாளப்படுத்தி அவை சந்தை கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தக்கூடியது எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதில் ஒரு காணி உடனடியாகப் பயன்படுத்தும் வகையில் உள்ளதாகவும் மற்றையது சில நடைமுறைகளைப் பின்பற்றுவதனூடாக மிகக் குறுகிய காலத்தில் பயன்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆக ஓமந்தையில் காணி கிடைக்கவில்லை எனவே தாண்டிக்குளத்தில் சந்தையை அமையுங்கள் என்கின்ற இவர்களது வாதம் அடிபட்டுப்போகிறது.
இவர்களது இரண்டாவது வாதமான மத்திய அமைச்சர் ஒருவர் இவ் அபிவிருத்தித் திட்டத்தினை வடக்கிற்கு வெளியே மதவாச்சிக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார் என்பது உண்மையாக இருந்தாலும் கூட அதனை சமாளித்து வடக்கிற்குள்ளேயே அவ் அபிவிருத்தித் திட்டத்தினை வைத்திருக்கக் கூடிய வல்லமை கூட்டமைப்பினரிடம் இல்லையா என்கின்ற கேள்வி எழுகின்றது.
பதின்நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களையும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினையும் தன்னகத்தே கொண்டுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர், தாம் தான் ஜனாதிபதியைப் பதவிக்குக்கொண்டு வந்தோம் என மார்பு தாட்டிக்கொண்டிருக்கும் கூட்டமைப்பினர் வெறும் சந்தைக் கட்டுமானத்தை வடக்கிற்கு உள்ளேயே வைத்திருக்கக் கூடிய அளவிற்கு கையாலாகாதவர்களா?
என்கின்ற கேள்வி எழுகின்றது. அது தவிர முன்னர் குறிப்பிட்டதைப் போல இச்சிறிய விடயத்தைச் சாதிக்கக் கூடிய சக்தியில்லாதவர்கள் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவார்கள் என்று எப்படி நம்புவது?
ஆனால் இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அனுப்பிய கடிதத்தில், இப்பொருளாதார மத்திய நிலையம் வவுனியா மாவட்டத்திலேயே அமைக்கப்படும் என ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியளித்துள்ளனர்.
எனவே இது வடக்கிற்கு வெளியே கொண்டுசெல்லப்படமாட்டாது எனக் குறிப்பிட்டிருந்தார். ஆக, மத்திய அமைச்சரின் தலையீட்டில் இவ் அபிவிருத்தித் திட்டம் வடக்கிற்கு வெளியே சென்று விடும் என்றவாதமும் அடிபட்டுப் போகிறது.
இதன் மூலம் தாண்டிக்குளத்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட இரண்டு வாதங்களும் பொருத்தமற்றது அல்லது அடிப்படையற்றது என்பது தெளிவாகிறது.
இதில் புரிந்துகொள்ள முடியாத விடயம் என்னவென்றால்,
யாழ்.மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் சரவணபவனும் பொதுவாக வன்னித் தேர்தல் மாவட்டம் என்று குறிப்பிடப்பட்டாலும் கூட, அதில் முல்லைத்தீவு மக்களினை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டிருக்கும் சிவமோகன் மற்றும் சாந்தினி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு ஒப்பீட்டளவில் நன்மை பயக்கக்கூடிய ஓமந்தைப் பிரதேசத்தை விடுத்து அதிக தூரத்தில் அமைந்துள்ள தாண்டிக்குளப் பிரதேசத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைவதற்கு ஏன் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பதே ஆகும்.
இது தவிர இவ்விடயத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பல்வேறு அரசியல்வாதிகள் திரைமறைவில் காய் நகர்த்தி வருவதாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது.
இவ் விடயத்தைச் சாட்டாக வைத்து வடமாகாண முதலமைச்சருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த சிலர் திரைமறைவில் இயங்கி வருவதாகவும் அவர்கள் ஏனைய உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு தாண்டிக்குளத்திற்கு ஆதரவு அளிக்குமாறு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அறிய முடிகிறது.
இத்தரப்பினரது நோக்கம் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு ஓர் குட்டுப்போடுவது மற்றும் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியிலுள்ள ஒரு சிலரது மேலாதிக்கத்தை வெளிக்காட்டுவது என்பதேயாகும்.
தமிழரசுக்கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியும் இப்பிரச்சினையின் பின்னணியில் செல்வாக்குச் செலுத்துவதாக அவதானிகள் கருத்துரைக்கின்றனர்.
வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரன், சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன் ஆகியோர் குறிப்பிட்டவாறு தாண்டிக்குளத்துடன் ஒப்பிடுமிடத்து ஓமந்தைப் பிரதேசம் வடக்கைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் புவியியல் ரீதியில் நன்மையளிப்பதாக காணப்படுகின்றது.
அது தவிர அபிவிருத்தியில் பின்தங்கிய ஓமந்தைப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கும் இத்திட்டம் உதவியளிப்பதாக அமையும். எதிர்காலத்தில் குறித்த பொருளாதார மையத்தைச் சுற்றி ஒரு நகரக் கட்டுமானத்தை விஸ்தரிக்கக் கூடிய காணிகளும் அங்கு காணப்படுவதால், எதிர்கால நகர விஸ்தரிப்பிற்கும் ஓமந்தை பொருத்தமானதாக அமையும்.
மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டவாறு 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு பொருத்தமான இடமாக ஓமந்தையே தெரிவு செய்யப்பட்டது என்பதுவும் இங்கு சுட்டிக்காட்டப்படத்தக்கது.
மறுபுறத்தில் தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டும் என்பதற்கு வலுவான காரணங்கள் எதனையும் அதனை ஆதரிப்பவர்களால் முன்வைக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதே பொருத்தமானது எனக் கூறுவதற்குச் சாதகமாக இத்தகைய காரணிகள் இருந்தும் கூட தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு அணியினர் தாண்டிக்குளத்திற்கு அழுத்தம் கொடுப்பது ஏன் என்கின்ற சந்தேகத்தினை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.
இங்கு எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், கடந்த இரு வாரங்களாக பத்திரிகைகளும், ஏனைய ஊடகங்களும், வல்லுநர்களும் பெரும்பாலான விவசாய அமைப்புக்களும் வடக்கின் பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைவதே பொருத்தமானது என பல்வேறு விளக்கங்களுடன் எடுத்துக்காட்டியும் கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இது தொடர்பில் முடிவுகள் எதனையும் எடுக்காது இழுத்தடித்து வருவதன் மர்மம் என்ன?
இவ்விடயம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி வருகிறது எனத் தெரிந்தும் கூட ஏன் சம்பந்தர் முடிவெடுக்கத் தயங்குகிறார்?
சம்பந்தரிடத்தில் காணப்படுகின்ற முடிவெடுக்க தயங்கும் இத்தகைய போக்கு, மத்திய பொருளாதார நிலைய திட்டத்தை மட்டுமல்ல தமிழ் மக்களது அரசியல் தீர்வையும் பாதிக்கும் என்பது வெளிப்படை.
எனவே அரசியல் காரணங்களைக் கருத்தில் கொள்ளாது, அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கக் கூடிய இடமான ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப் பதற்கான முடிவினை எடுக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் அதன் தலைமையும் முன்வர வேண்டும் என்பதே மக்களது விருப்பமாகும்.
-அருணகிரிநாதன்-