நாவற்குழிப் பகுதியில் 14 வயதுச் சிறுமியை பற்றைக்குள் கூட்டிச் சென்று துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், நேற்றுத் திங்கட்கிழமை (11) உத்தரவிட்டார்.
மேற்படி சிறுமியும் இளைஞனும் காதலித்துள்ளனர். இளைஞன், அழைத்ததையடுத்து, சிறுமி அவரைச் சந்திக்கச் சென்ற வேளை, சிறுமியை பற்றைக்குள் அழைத்துச் சென்ற இளைஞன் அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இது தொடர்பில் பொதுமக்கள் மூலம் தகவலறிந்த சிறுவர் நன்னடத்தை அதிகாரி, சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அதற்கிணங்க இளைஞனைக் கைதுசெய்த பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
இருவரும் காதலித்தமையால், தனது சம்மதத்துடன், இளைஞன் தன்னுடன் அவ்வாறு நடந்துகொண்டதாக சிறுமி வாக்குமூலமளித்தார். ஆனால், தான் அவ்வாறு எதனையும் செய்யவில்லை என இளைஞன் மறுத்துள்ளார்.
இதனையடுத்து, நீதிவான் இளைஞனை விளக்கமறியலில் வைக்கவும், சிறுமியை வைத்திய பரிசோதனைக்குட்படுத்தவும் உத்தரவிட்டார்.
மாணவன் துஷ்பிரயோகம்: அலுவலக உதவியாளர் கைது
7 வயதுடைய பாடசாலை மாணவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாடசாலை அலுவலக உதவியாளர் கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை நிறைவடைந்த பின்னர், மேலதிக வகுப்புக்கு செல்லும் போது, மாணவனை ஏமாற்றி பல்வேறு இடங்களுக்கு கூட்டிச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இதற்கு முன்னரும் பல சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பளை, மருதங்கேணி பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.