வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராஜகிரிய சில்வா ஒழுங்கைக்கு அருகில் இடம்பெற்ற இரு வாகன விபத்துகளில் கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவர் உயிரிழந்ததுடன் 9 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த கெப் வாகனத்தின் பின்னால் வந்த வேறொரு கார் ஒன்றும் விபத்துக்குள்ளான கெப்புடன்மோதுண்டதில் அதன் சாரதியும் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொரகஸ்முல்லவிலிருந்து ராஜகிரிய மாதின்னாகொட வீதியில் ராஜகிரிய நோக்கி பயணித்த கெப் ஒன்று நேற்று அதிகாலை 2 மணியளவில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ராஜகிரிய சில்வா ஒழுங்கைக்கு அருகில் வைத்து இடதுபுறமாக பாதையைவிட்டு விலகி அருகிலுள்ள வீடு ஒன்றின் மதிலில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, விபத்துக்குள்ளான கெப்பில் பயணித்த 10 பேர் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கல்கிஸை இசுறு உயன பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் அமன் கிவில் என்ற 18 வயதான இளைஞர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளவரென தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்ட 11 மாணவர்கள் டபிள் கெப் மற்றும் கார் ஒன்றில் ராஜகிரிய நாவல வீதியில் அமைந்துள்ள இரவு நேர உணவகம் ஒன்றில் உணவு பெற்றுள்ளனர்.
இந்த உணவகத்தில் விலை குறைவு என்பதால் தாம் அங்கு உணவு வாங்குவதற்கு சென்றதாக சம்பவத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் ஐ.டி.எச். பிரதேசத்தை நோக்கிச் சென்று தம்முடன் வந்த மாணவர் ஒருவரை அவரது வீட்டில் இறக்கிவிட்டு வாகனத்தை வேகமாக செலுத்தியவாறு மீண்டும் ராஜகிரிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்து போது முன்னால் பயணித்த டபள் கெப் வீதியை விட்டு விலகி கொங்கிறீட் மதிலொன்றை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதன்பின்னர் விபத்துக்குள்ளான கெப்பின் பின்னால் காரை செலுத்திச் சென்ற மாணவன், முன்னால் தனது நண்பர்கள் பயணித்த கெப் விபத்துக்குள்ளானதை கண்டு தனது வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளான கெப்பை மோதி விபத்துக்குள்ளானதாக சம்பவத்தில் காயமடைந்த மாணவரொருவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தாம் விபத்துக்குள்ளான கெப்பிலிருந்து வெளியேற முயற்சித்தபோது, கெப்பினால் மோதப்பட்ட கொங்கிறீட் மதில் தம்மீது இடிந்து வீழ்ந்து தாம் பலத்த காயமடைந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், காயமடைந்த மாணவர்கள் அனைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத் துவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.