•சட்டத்தரணி கடும் வாதம்
• சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்!
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக ஒரு ஆதாரம் இருந்தால் கூட என் வழக்கை வாபஸ் பெறுகிறேன் என்று சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் செய்துள்ளார்.
இவ்வழக்கில் கடந்த வாரம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து சிதம்பரத்தை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அவரின் காவல் நேற்றோடு முடிந்தது.இவரை இன்னொரு பக்கம் அமுலாக்கத்துறை கைது செய்ய துடித்துக் கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் அமலாக்கத்துறைக்கு எதிரான சிதம்பரத்தின் மனு மீது நேற்று விசாரணை நடந்தது.
அமுலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்ய அனுமதிக்கக் கூடாது, ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் முன்பிணையை நீடிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சி.பி.ஐக்கு எதிரான முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த மனு மீது விசாரணை நடந்தது.
இதில் சிதம்பரம் சார்பாக வாதம் செய்த கபில் சிபல், “அமுலாக்கத்துறை ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் ‘சீல்’ இட்டு சமர்ப்பித்துள்ளது.
சீலிட்ட ஆதாரத்திற்கு எதிரான நான் எப்படி வாதாட முடியும்?என்ன ஆதாரம் என்றே தெரியாமல் நான் எப்படி வாதாட முடியும்?
பிரமாண பத்திரத்தை அமுலாக்கத்துறை தரப்பு கசியவிட்டு இருக்கிறது. பிரமாணப் பத்திரம் ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
பிரமாணப் பத்திரத்தை தொலைக்காட்சிகளில் கசியவிட்டு விட்டனர்.உச்சநீதிமன்றத்தில் ‘கேஸ் டயரியை’ ஆதாரமாக அளித்து இருக்கிறார்கள்.
கேஸ் டயரியை ஆதாரமாக அளிக்க சட்டத்தில் இடமில்லை. உருப்படியான ஒரு ஆதாரத்தை கூட அவர்கள் மனுவில் தாக்கல் செய்யவில்லை.
என்ன ஆதாரத்தை வைத்து இந்த வழக்க நடக்கிறது?கடந்த 5 நாட்களாக சிதம்பரத்திடம் சி.பி.ஐ கேள்வியே கேட்கவில்லை.
அவரை காவலில் எடுத்துவிட்டு எதுவுமே விசாரிக்கவில்லை. சிதம்பரத்திற்கு எதிராக இந்த வழக்கில் ஒரு ஆதாரம் காட்டுங்கள்.
சிதம்பரத்திற்கு எதிராக ஒரு ஆதாரம் இருந்தால் கூட என் வழக்கை வாபஸ் பெறுகிறேன்.
சிதம்பரத்திடம் 17 வங்கி கணக்குகள் இருப்பதாக அமுலாக்கத்துறை சொல்கிறது.
ஆனால் சிதம்பரத்திடம் அது தொடர்பாக ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை.
சிதம்பரத்திடம் வங்கிக் கணக்குகள் குறித்து யாரும் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. அவரிடம் டிவிட்டர் கணக்கு இருக்கிறதா என்று மட்டும்தான் கேட்டுள்ளனர்.
இதுதான் சி.பி.ஐ விசாரணை நடத்திய இலட்சணம்” என்று கபில் சிபல் வாதம் செய்துள்ளார்.
தேசத்தின் அதிகார நாற்காலியில் உயர்ந்த பதவிகளை வகித்த தமிழரான முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் 5 நாள் சி.பி.ஐ. காவலுக்கு சென்றிருப்பது இந்தியாவின் தொடர் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 10 ஆண்டு காலம் (2004_ 2014) நிதி மற்றும் உள்துறை அமைச்சராகவும் அதிகாரமிக்க அமைச்சரவைக் குழுக்களில் இடம்பெற்றும் வலிமையாக இருந்தவர் சிதம்பரம்.
அவர் வகித்த துறைகளிலிருந்து அவருக்கு எதிராக வளையம் அமைத்தது பா.ஜ.க. அரசு. ஐ.என்.எக்ஸ்.
மீடியா வழக்கில் முன்பிணை கேட்டு கடந்த வருடம் ஜூலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, 10 முறை தன்னை கைது நடவடிக்கையிலிருந்து காத்துக் கொண்டவர் அவர்.
ஆனால் கடந்த 20-ந் திகதி தனது முன்பிணை மனு நீதிபதி கவூரால் தள்ளுபடியானதும் சிதம்பரம் அதிர்ச்சியடைந்தார்.
கைதுக்கு தடை கோரிய இடைக்கால உத்தரவும் நிராகரிக்கப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றத்தில் இருந்த சிதம்பரம் அதிர்ச்சியடைந்தார்.
காங்கிரஸ் கட்சியிலும் டெல்லியிலும் பரபரப்பும் பதற்றமும் கூடியது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் மேல்முறையீடு செய்ய சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் கபில் சிபல் உள்ளிட்டோர் முயற்சித்த போது, அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் ரஞ்சன் கோகோய் இருந்ததால் மனுவை தாக்கல் செய்ய முடியவில்லை.
தலைமை நீதிபதி அமர்வுக்கு அடுத்த நிலையில் இருந்த நீதிபதி ரமணாவிடம் முறையிட்டபோது, “மனுவில் பிழைகள், பட்டியலிடாத மனுவை விசாரிக்க முடியாது, தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்புகிறேன்’ என வெளிப்பட்ட பதிலால் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.
தலைமை நீதிபதியும், தான் விசாரித்த வழக்கு முடிந்ததும் புறப்பட்டு விட்டார். ‘வெள்ளிக்கிழமைதான் விசாரிக்க முடியும்’ என்றதுமே நிலவரம் புரிந்துவிட்டது சிரேஷ்ட சட்டத்தரணியான சிதம்பரத்துக்கு.
இரவோடு இரவாக சி.பி.ஐ.யின் தேடுதல் வேட்டை ஆரம்பமானது. டெல்லி ஜோர்பாக்கில் இருந்த சிதம்பரத்தின் வீட்டுக்கு அதிகாரிகள் செல்ல, அவர் இல்லாததால், ‘2 மணி நேரத்தில் சி.பி.ஐ.முன்பு ஆஜராக வேண்டும்’ என்கிற அறிவித்தலை ஒட்டிவிட்டு வந்தனர்.
சி.பி.ஐ. தன்னை கைது செய்யும் எனத் தெரிந்து, தன்னுடைய கார் சாரதியையும் உதவியாளரையும் வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு தானா காரை ஓட்டிச் திடீரென தலைமறைவானார் சிதம்பரம்.
சிதம்பரத்துக்கு நெருக்கமான நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் அவர் தங்கியிருப்பது சி.பி.ஐ.க்கும் அமுலாக்கத்துறைக்கும் டெல்லி பொலிசுக்கும் தெரியும். ஆனால், கைது செய்யாமல் தவிர்த்தனர்.
தலைமறைவு குற்றவாளியாகவும் தேடப்படும் குற்றவாளியாகவும் அவர் சித்தரிக்கப்பட்டு அவரும் காங்கிரசும் அசிங்கப்பட வேண்டும் என ஆட்சி மேலிடம் விரும்பியது.
இதனையடுத்து 21-ந்திகதி இரவு வெளியே வந்த சிதம்பரம், காங்கிரஸ் தலைமையகத்தில் 4 நிமிட நேரம் தன்னிலை விளக்கமளித்தார்.
அங்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் முற்றுகையிட்டனர். இரவு 9 மணிக்கு ஜோர்பாக்கிலுள்ள தனது வீட்டுக்கு விரைந்தார் சிதம்பரம்.
அவரை பின் தொடர்ந்து படையெடுத்தனர் அதிகாரிகள். கைது செய்யப்படலாம் என அறிந்து காங்கிரஸ் தொண் டர்கள் சிலரும் பத்திரிகையாளர்களும் ஜோர்பார்க் இல்லத்திற்கு குவிந்தனர்.
பிரதான கேட் உள்புறம் பூட்டப்பட்டிருந்ததால், வேக வேகமாக தட்டினார்கள் அதிகாரிகள். மேலிடத்திலிருந்து வந்த உத்தரவையடுத்து அதிகாரிகள் சிலர் மதில் மேல் ஏறி உள்ளே குதித்து கேற்றை திறந்து, மற்ற அதி காரிகளையும் நுழையச் செய்தனர்.
வழக்கறிஞர்களுடன் விவாதித்தபடி இருந்த சிதம்பரம், அதி காரிகளை எதிர்கொண்டு, “கைது செய்ய வந்திருக்கிறீர்களா? விசாரணைக்கு அழைத்துச் செல்கிறீர் களா?’ எனக் கேட்க, “கைது செய்ய வந்திருக்கிறோம்” எனச் சொல்ல, “நீங்கள் எடுத்து வந்துள்ள வழக்கில் என் மீது எஃப்.ஐ.ஆர். இல்லை, குற்றச்சாட்டு பதிவும் இல்லை.
எப்படி கைது செய்ய வந்தீர்கள்?”என கோபம் காட்ட, “உங்கள் எதிர்ப்பை சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வந்து தெரிவியுங்கள். அங்கு உங்களுக்கு பதில் கிடைக்கும்”எனச் சொல்ல, அதை மறுத்து பேசினார் சிதம்பரம்.
இதனிடையே, ‘சிதம்பரத்தை யார் கைது செய்வது’ என சி.பி.ஐ.யும் அமுலாக்கத்துறையும் மோதிக்கொண்டதும் நடந்தது. காரில் ஏறும்போது பதற்றத்தில் இருந்தார் சிதம்பரம்.
எந்த உள்துறையின் அமைச்சராக இருந்துகொண்டு சி.பி.ஐ.யை வைத்து தன்னை சிதம்பரம் கைது செய்தாரோ அதே சி.பி.ஐ.வைத்து சிதம்பரத்தை கைது செய்ய அவர் மீதான வழக்கை தூசு தட்டினார் அமித்ஷா. 9 வருட பகை தீர்க்கப்படும் வகையில், சிதம்பரத்தின் கைது படலம் அரங்கேறியது.
திகாருக்கு அனுப்பாமல் அவரை விடுவதில்லை என்பதில் அதிதீவிர கவனம் செலுத்தும் அமித்ஷா, காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற நோக்கத்தை சிதம்பரம் வதம் மூலம் தொடங்கி காங்கிரசை இல்லாமல் ஆக்குவதில் குறியாக இருக்கிறார்.