சென்னை: நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று அழைப்பவர்கள், அடுத்து படுக்கைக்கு அழைக்கும் போக்கு சினிமாவில் தொடர்கிறது என்று நடிகை சுர்வீன் சாவ்லா கூறியுள்ளார்.இந்தி, தெலுங்கில் பிரபலமானவர் சுர்வீன் சாவ்லா. எக்குத்தப்பாக கவர்ச்சி காட்டி சன்னி லியோன் போன்றவர்களையே ஓரங்கட்டுகிறாராம்.
தமிழில் அவர் முதலில் நடித்த படம் மூன்றுபேர் மூன்று காதல். அடுத்து ஜெய்ஹிந்த் 2. இரு படங்களிலுமே அவர் நடிகர் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தார்.
தனது திரையுலக அனுபவங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பட வாய்ப்பு தருவதாகக் கூறி, அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறு சிலர் கேட்பதையும், அதை அவர் சமாளிப்பதையும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நடிக்க வந்து நான் இங்கு நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். சில அனுபவங்கள் இன்றும் ஆறாமல் இருக்கின்றன.
சினிமா வாய்ப்புக்காக வேறு மாதிரி ‘அட்ஜஸ்ட்’ செய்துகொள்ளச் சொன்னவர்களை நான் எதிர்கொண்டிருக்கிறேன். குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் அதிகம். ஆனால் இப்போது நான், அநாகரிக விண்ணப்பங்களை என் போக்கில் எப்படிக் கையாளுவது என்று கற்றுக்கொண்டிருக்கிறேன்.