யாழில் பட்டதாரி இளைஞர் ஒருவர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். புறநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய குறித்த இளைஞர் வேலை வாய்ப்பு கிடைக்காத காரணத்தாலேயே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து 2½ பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டமை மற்றும் அண்மையில் பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணத்துக்கு சென்ற பஸ்ஸில் கல்வியங்காட்டு பகுதியில் வைத்து 2 பவுண் தங்கச்சங்கிலி அறுத்தமை ஆகிய சம்பவங்களில் சந்தேகநபருக்கு தொடர்பு உள்ளமை தெரியவந்துள்ளதாக யாழ் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த சந்தேகநபரை கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்ட போது, அவர் விஞ்ஞானமானி பட்டதாரி எனவும் இதுவரை உரிய வேலை வாய்ப்பு கிடைக்காமையாலேயே திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடதாகவும் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
யாழ்.: கிணற்றில் இருந்து எட்டு வயது சிறுவனின் சடலம் மீட்பு
14-12-2014
யாழ். நுணாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து எட்டு வயது சிறுவன் ஒருவனின் சடலம் மீ்ட்கப்பட்டுள்ளது.
நுணாவில் மத்தியை சேர்ந்த இராஜகோபால் ஆகாஷ் (வயது 8) எனும் சிறுவனே இன்று இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பெற்றோர்கள் வீட்டில் சிறுவனை தனியே விட்டு விட்டு நேற்று சனிக்கிழமை கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அவர்கள் வேலை முடிந்து வீடு வந்த போது சிறுவனை வீட்டில் காணவில்லை.
பல இடங்களில் நேற்று தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை இந்நிலையில் இன்று காலை கிணற்றடிக்கு பெற்றோர் சென்று இருந்த போது சிறுவன் சடலமாக கிணற்றுக்குள் மிதந்ததை பார்த்துள்ளனர்.
அதனை அடுத்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.