சென்னை: நடிகர் பாண்டியராஜனின் மகனும், நடிகருமான பிரித்வி, விரைவில் கல்லூரி மாணவியை காதல் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
‘நாளைய பொழுதும் உன்னோடு’, ‘கைவந்த கலை’, ‘பதினெட்டாம் குடி’ ஆகிய படங்களில் நடித்திருப்பவர் நடிகர் பாண்டியராஜனின் மகன் நடிகர் பிரித்வி. இவருக்கும், கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த அக்ஷயா என்ற கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்தது.
கொச்சியை சேர்ந்த பிரேம்நாத்-ஷீலா தம்பதிகளின் மகளான அக்ஷயா, கொச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி-டெக் இறுதியாண்டு படித்து வருகிறார்.
இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வர, பிரித்வி-அக்ஷயா காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டு, திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள்.
அதன்படி, பிரித்வி-அக்ஷயா திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரின் உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.
கல்லூரி மாணவி அக்ஷயாவுடன் காதல் மலர்ந்தது எப்படி என்பது குறித்து நடிகர் பிரித்வி கூறும்போது, ”சென்னையில் நடந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியில் முதன் முதலாக நானும் அக்ஷயாவும் சந்தித்தோம்.
அப்போது, எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. அதன் பிறகு, ‘பதினெட்டாம் குடி’ படப்பிடிப்புக்காக நான் கொச்சி சென்றிருந்தேன். அப்போது, அக்ஷயாவை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அதன்பிறகு எங்களது நட்பு காதலாக மலர்ந்தது. இதை தொடர்ந்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் எங்களது திருமண நிச்சயதார்த்த தற்போது நடைபெற்றுள்ளது. விரைவில் எங்கள் திருமணம் நடக்க உள்ளது” என்று தெரிவித்து உள்ளார்.