மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நீலண்டமடு பகுதியில், 18 வயது இளைஞரொருவர் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளாரென, கொக்கட்டிச்சேலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அரசடித்தீவு கிராமத்தைச் சேர்ந்த அழகுதுரை அதீஸ்காந்தன் எனபவரே, இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வீடொன்றில் ஏற்பட்ட தகராறின் போது, அயலிலிருந்து அவதானித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள், அதைத் தடுக்க முற்பட்டுள்ளனர்.
இவ்வேளையில், தகராற்றில் ஈடுபட்ட நபர், அவரது கையிலிருந்து சீவல் தொழிலுக்குப் பயன்படுத்தும் கத்தியால் இளைஞன் ஒருவனின் வயிற்றை வெட்டியுள்ளார். மேலும், மற்றைய இளைஞனுக்கும் சிறு காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதில் வயிற்றுப் பகுதியில் வெட்டுப்பட்ட மேற்படி இளைஞன் ஸ்தலத்திலே பலியாகியுள்ளாரென, கொக்கட்டிச்சேலை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.