எரிபொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்காத காரணத்தினால் தற்போது எரிபொருள் விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடலில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலுக்கு டொலர் செலுத்தும் வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும். எரிபொருள் விநியோகம் முழுமையாக பாதிக்கப்பட கூடாது என்ற காரணத்தினால் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
வலுசக்தி அமைச்சில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் எரிபொருள் விநியோகம்,மின்னுற்பத்தி ஆகிய இரு பிரதான துறைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.வெளிநாட்டு கையிருப்பு சடுதியாக குறைவடைந்துள்ளதால் அவ்விரு துறைகளும் தற்போது பாரிய சவால்களை எதிர்க்கொண்டுள்ளது.
வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை தொடர்பில் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கருத்து அப்போது விமர்சிக்கப்பட்டது தற்போது அது உண்மையாகியுள்ளது.
2021ஆம் ஆண்டு மாத்திரம் இறக்குமதி சேவைக்காக 21 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.எரிபொருள் கொள்வனவு மற்றும் இறக்குமதிக்கு மாத்திரம் 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டுள்ளதால் மருந்து,எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குமாறு அமைச்சரவையில் பலமுறை எடுத்துரைத்துள்ளேன்.
நெருக்கடியான சூழ்நிலையில் அப்பிள் பழ இறக்குமதியை தவிர்த்து அந்த நிதியை அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து பொருள் இறக்குமதிக்கு செலவிடுமாறும் குறிப்பிட்டேன்.அப்பிள் பழத்தை இறக்குமதி செய்ய நிதி ஒதுக்கியதால் இன்று எரிபொருளுமில்லை, மருந்துமில்லை.
எரிபொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்காத காரணத்தினால் தற்போது எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் கப்பல்கள் கடலில் நங்கூரமிட்டுள்ளன அக்கப்பல்களுக்கு டொலர் செலுத்தினால் எரிபொருளை தடையிறக்க முடியும்.
தேவையான எரிபொருள் களஞ்சியப்படுத்திக் கொள்ளும் வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடியான நிலைமையில் எரிபொருளை விநியோகத்தை மட்டுப்படுத்தாமலிருந்தால் வசதி படைத்தவர்கள் தங்களின் வீடுகளில் உள்ள தாங்கிகளிலும் எரிபொருளை சேமித்துக்கொள்வார்கள்.
அவ்வாறு நிகழ்ந்தால் சாதாரன நடுத்தர மக்களே பாதிக்கப்படுவார்கள்.முச்சக்கர வண்டி சாரதிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் இவ்வாறான விடயங்களை கருத்திற்கொண்டே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இறக்குமதி துறையில் எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர் ஒதுக்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.இருப்பினும் அது நடைமுறையில் சாத்தியப்படவில்லை.
தற்போதைய நிலைமையில் எரிபொருள் கொள்வனவிற்கு கடன் வழங்க முடியாது என இருபிரதான அரச வங்கிகளும் குறிப்பிட்டுள்ளன.
எரிபொருள் இறக்குமதி மீதான வரியை தற்காலிகமாக நீக்குமாறு நிதியமைச்சிடம் இருமுறை உத்தியோகப்பூர்வமாக வலியுறுத்தினேன் அதற்கும் சாதகமான தீர்வு கிடைக்கவில்லை.
எரிபொருள் விலையேற்றம் குறித்து அரசாங்க தரப்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை.
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலைமையில் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படாத நிலைமையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒருநாளைக்கு மாத்திரம் 536 மில்லியன் நட்டத்தை எதிர்க்கொள்கிறது.
எரிபொருள் மீதான வரி அறவிடல் ஊடாக நிதியமைச்சு ஒருநாளைக்கு 331 மில்லியன் வருமானத்தை பெற்றுக்கொள்கிறது.நெருக்கடியான சூழ்நிலைமையில் நிதியமைச்சு வரி அறவிடலை தற்காலிகமாக நீக்கிக்கொண்டால் பெற்றோலிய கூட்டுத்தாபனம் நிலைமையை ஒப்பீட்டளவில் முகாமைத்துவம் செய்யும் என்றார்.