இலங்கையில் 9 வயதான சிறுமியொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தேறி ஓரிரு தினங்களில், மற்றுமொரு சிறுமியின் சடலம் வவுனியா பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா – கணேசபுரம் பகுதியிலிருந்து 16 வயதான சிறுமியின் சடலம் நேற்றிரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தனியார் கல்வி நிறுவனமொன்றிற்கு சென்று மீண்டும் வீடு திரும்பாத நிலையில், குறித்த சிறுமியை தேடும் நடவடிக்கைகளை உறவினர்கள் ஆரம்பித்துள்ளனர்.
எனினும், சிறுமியை கண்டுபிடிக்க முடியாத நிலையில், உறவினர்கள் நெளுக்குளம் போலீசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதையடுத்து, பிரதேச மக்களின் உதவியுடன், போலீசார் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறுமியின் வீட்டிற்கு அண்மித்த பகுதியிலிருந்து, அவரது பாதணி மற்றும் புத்தகங்களை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.
இதையடுத்து, தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் வவுனியா பொது மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
நேற்றிரவு சம்பவ இடத்திற்கு போலீசாருக்கு மேலதிகமாக, ராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, பெற்றோரை இழந்த சிறுமி, அவரது உறவினர் ஒருவரின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் மற்றும் வவுனியா போலீசார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.