விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள் அரசுடமையாக்கப்படுவதே சட்டமாகும். ஆனால் நாம் அதனைச் செய்யவில்லை. நகைகளை சொந்தக்காரர்களிடமே வழங்குகின்றோம். ஏனென்றால் வடபகுதி தமிழ் மக்கள் நகைகளை சேகரிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை நாமறிவோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ தெரிவித்தார்.
நீங்கள் தங்கத்தின் மீது வைத்த நேசத்தை போன்று தாய் நாட்டையும் நேசியுங்கள். அதற்கான சூழலை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
புலிகளின் வங்கிகளில் வடபகுதி மக்கள் அடகு வைத்த தங்க நகைகளை மீண்டும் சொந்தக்காரர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளின் உரிமையாளர்கள் 1960 பேருக்கு அவை கையளிக்கப்பட்டன.
இங்கு ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,
முப்பது வருட கால யுத்தத்தில் பெரும் கஷ்டங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்த நீங்கள் இன்று இன்று அலரிமாளிகையில் கூடியிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.
துரதிஷ்டவசமாக 30 வருட காரணமாக பயங்கரவாதம் உங்களை ஆட்டிப் படைத்தது.
அன்று பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். சுமுகமான தீர்வுகளுக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால் எதுவுமே பலனளிக்கவில்லை. அனைத்தும் தோல்வி கண்டன.
இறுதியில் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடினோம். யுத்தத்தை நிறுத்தினோம். பயங்கரவாதத்தை இல்லாதொழித்தோம்.
பயங்கரவாதத்திற்கு எதிராகவே போராடினோமே தவிர நாம் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை. நீங்கள் இந்த நிகழ்வுக்கு யாழ்.தேவி ரயில் மூலம் தான் வந்தீர்கள். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு புகையிரதத்தில் வருவோம் என நீங்கள் அன்று நினைத்துக் பார்த்திருக்க மாட்டீர்கள்.
யுத்தம் முடிந்து 4–-5 வருடங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் வடக்கில் பாடசாலைகளை நிர்மாணித்தோம். வைத்தியசாலைகளை புனர்நிர்மாணம் செய்தோம். உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தினோம். மின்சாரத்தை வழங்கினோம்.
இவ்வாறு யுத்தத்தால் உங்களிடமிருந்து பறிக்கப்பட்ட அனைத்தையும் படிப்படியாக வழங்கி வருகின்றோம். எதிர்வரும் காலங்களில் அனைத்தையும்் முழுமையாக வழங்குவோம்.
அன்று கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட காணிகளில் இன்று மீண்டும் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. தென்பகுதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை விட அதிகளவிலான நிதியை வடக்கின் அபிவிருத்திக்காக ஒதுக்கினோம்.
நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் சம அளவில் அபிவிருத்திகள் இடம்பெற வேண்டுமென்பதை எமது நோக்கமாகும். பாடசாலைகள் அபிவிருத்தி செய்தோம். வடக்கில் மட்டும் 96 மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் உங்கள் பிள்ளைகளின் கல்வி அபிவிருத்திக்காக எதிர்காலத்திற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டில் மட்டுமல்ல அவர்கள் வெளிநாடுகளிலும் கல்வித் துறையில் தடம் பதிக்க வேண்டும்.
உங்கள் பிள்ளைகள் மட்டுமல்ல அப்பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் சிறப்பான எதிர்காலம் அமைய வேண்டுமென்பதை எமது இலக்காகும். யுத்தம் இருந்தால் மக்களுக்கு நிம்மதியிருக்காது. சமாதானமிருக்காது.
நாட்டில் அமைதி நிலை வேண்டும். யுத்தம் இல்லாத நாட்டில் மக்கள் சமாதானமாக வாழ வேண்டும். இராணுவம் இன்று உங்கள் நண்பர்களாக இருக்கின்றனர். அவர்கள் இல்லாவிட்டால் இன்றைய அபிவிருத்திகள் இடம் பெற்றிருக்காது.
யுத்தம் முடிந்த வேளையில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு 14 வருடங்கள் போகும் என வெளிநாட்டு நிபுணர்கள் தெரிவித்தார்கள். அதனை நான் ஏற்கவில்லை. எமது இராணுவத்தினரிடம் இந்த பொறுப்பை கையளித்தேன். அவர்கள் குறுகிய காலத்திற்குள் கண்ணி வெடிகளை அகற்றினார்கள்.
எனவே துரிதமாக அபிவிருத்திகளை மேற்கொள்ள முடிந்தது. புலிகளின் வங்கிகள் சட்டத்திற்கு விரோதமானது. அங்கு மக்கள் அடகு வைத்த நகைகளை யுத்தத்தின் போது படையினர் மீட்டெடுத்தனர்.
உண்மையில் இவ்வாறு மீட்கப்பட்ட சலுகைகளை அரசுடமையாக்கியிருக்க வேண்டும். அது தான் சட்டம். ஆனால் நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து இந்த நகைகளை சேர்த்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.
எனவே தான் எத்தனை வருடங்களாகினாலும் பரவாயில்லை. நகைகளை உரிமையாளர்களை தேடிக் கண்டுப்பிடித்து அவர்களிடம் கையளிக்குமாறு அறிவுறுத்தல்களை வழங்கினேன்.
அதற்கமைய உங்களுடைய தங்கம் உங்களுக்கே கிடைத்துள்ளது.
சில ஊடகங்கள் பத்திரிகைகள் இந்த தங்கத்தை விஹாரைகளில் புணர்நிர்மானத்திற்காக சேறு பூசிய செய்திகளை வெளியிட்டன. நீங்கள் தங்கத்தின் மீது வைத்த நேசத்தைப் போன்று தாய் நாட்டையும் நேசியுங்கள். அதற்கான ஒற்றுமையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக் ஷ இராணுவத் தளபதி தயா ரத்னாயக மற்றும் மட்டக்களப்பு சுதந்திரக்கட்சி அமைப்பாளர்கள் அருண்தம்பி முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வீடியோவை முழுமையாக பார்வையிடுங்கள்