ஆளும் தரப்பிற்கும் சரி, எதிரணிக்கும் சரி இந்த ஜனாதிபதித் தேர்தல் உண்மையிலேயே வாழ்வா சாவா போராட்டமாகவே இருக்கும். தோற்கின்ற வேட்பாளரின் எதிர்காலம் சூனியமாகும் என்பது வாக்குரிமை கிடைக்காத சிறுவனுக்கும் தெரிந்த விடயம்.
இதற்குப் புறம்பான பின்விளைவுகளை பட்டியலிட்டு சொல்ல வேண்டியதில்லை. ஆகவே, தமது முழுமையான தந்திரோபாயங்கள், பலம், அதிகாரம் எல்லாவற்றையும் பிரயோகித்தேனும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கே இரு பிரதான வேட்பாளர்களும் பிரயத்தனப்படுகின்றனர்.
யார் எந்தக் கட்சிக்கு தாவப்போகின்றாரோ என்ற எதிர்பார்ப்புடனேயே ஒவ்வொரு பொழுதும் விடிகின்றது. ஒவ்வொரு முறை கையடக்க தொலைபேசிக்கு குறுந்தகவல் கிடைக்கப் பெறும்போதும் எந்த எம்.பி.பல்டி அடித்துவிட்டாரோ என்ற அவாவுடன்தான் மனசு அந்த தகவலை பார்க்கின்றது.
மக்களின் எதிர்பார்ப்புக்களும் நம்பிக்கைகளும் எப்போதுமே நிறைவேறும் என்று கூறிவிட முடியாது. மக்கள் – வெற்று வாக்குறுதிகளை வழங்கும் அரசியல்வாதிகளுக்கு வாக்களித்துக் கொண்டிருக்கும் வரைக்கும், தொடர்ச்சியாக பிழை செய்கின்ற எம்.பி. க்களையும் தலைவர்களையும் மீண்டும் மீண்டும் தெரிவு செய்து, அவர்கள் இன்னுமின்னும் தவறிழைப்பதற்கு வழிவகுத்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் மக்களின் விருப்பப்படியான ஆட்சி என்பது பகற்கால சொப்பனம் மட்டுமே.
நமது நிகழ்காலமும் அவ்வாறுதான் இருக்கின்றது. ஜனவரியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் எதையோ எதிர்பார்க்கின்றனர். இந்த எண்ணம் ஆளுக்காள் வேறுபடுகின்றது என்றபோதிலும் நாட்டு மக்களிடம் பொதுவானதொரு அபிலாஷை இருக்கவே செய்கின்றது.
இங்கு ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். யார் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என மக்கள் நினைக்கின்றார்கள் என்பதும் நிஜத்தில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதும் இரு முக்கிய விடயங்களாகும்.
இந்த எதிர்பார்ப்பும் முடிவுகளும் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒன்றாக இருக்கும் எனக் கூறவியலாது. ஏனென்றால் நமது அரசியல் கலாசாரம் நமக்குத் தந்திருக்கின்ற அனுபவம் அப்பேற்பட்டது.
மாற்றமடைந்த எதிர்பார்ப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் வரைக்கும் தேர்தல் பற்றி மக்களிடமிருந்த எதிர்பார்ப்பு, கடந்த 20ஆம் திகதி தேர்தல் அறிவிப்பு வெளியான பிற்பாடு சற்று மாற்றமடைந்தது.
அதிலிருந்து 26 மணித்தியாலங்களுக்குள் அதாவது 21 ஆம் திகதி பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் இந்த எதிர்பார்ப்பு என்றுமில்லாதவாறு புதியதொரு பரிணாமத்தை எடுத்துள்ளதை மறுக்க முடியாது.
புலிகளை தோற்கடித்தமை, போருக்குப் பின்னரான அபிவிருத்திகளை மேற்கொண்டமை என இன்றைய ஜனாதிபதி தனது பதவிக்காலத்தில் அசூர காரியங்களை செய்து காட்டியுள்ளார். அவரது ஆட்சிக்காலம் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
குடும்ப ஆட்சியும் இனவாதிகளின் கைகள் மேலோங்கிய நிலைமையும் பரவலாக விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்த போதும் அசைக்க முடியாத ஒரு ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக் ஷ கருதப்பட்டார்.
பிரதான எதிர்க்கட்சியின் வங்குரோத்து நிலையும் பொது வேட்பாளர் ஒருவரைக் கூட நிறுத்த முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணி இருந்தமையும் நடப்பு ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தன.
ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெற்றால் சிறுசிறு வாக்குச்சரிவுடன் அல்லது அதுவுமின்றி மஹிந்த ராஜபக் ஷவே மீண்டும் வெற்றி பெறுவார் என்பதை களநிலவரங்கள் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தன.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி உத்தேசித்திருந்த மற்றும் மக்களுக்கு தெரிவித்துக் கொண்டிருந்த பொது வேட்பாளர்களை நிறுத்தாமல் திடீரென மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டமையால் முதன்முதலாக அரசாங்கம் சவால்மிக்க தேர்தல் களமொன்றை எதிர்கொண்டுள்ளது.
சுதந்திரக் கட்சியில் 47 வருடங்களாக உறுப்பினராக இருந்துகொண்டு கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சராகவும் இருக்கின்ற ஒருவரை எதிரணிப்பக்கம் இழுத்துவந்து பொது வேட்பாளராக நிறுத்தியமை நல்லதொரு வியூகமாக கருதப்படுகின்றது.
ஆனால் கடைசி தருணத்திலேயே புலனாய்வுப் பிரிவினர் ஊடாகவோ அல்லது மைத்திரியின் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டோ மைத்திரியின் நகர்வுகளில் ஜனாதிபதி கவனம் செலுத்தியிருக்கின்றார். இருப்பினும் கடைசிவரைக்கும் இதனை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது மிகப் பெரிய கைசேதமாகும்.
இந்த திட்டம் பல மாதங்களுக்கு முன்னரே தீட்டப்பட்டிருந்ததாகவும் போக்குக் காட்டுவதற்காகவே வேறுவேறு நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டதாகவும் சில ஊர்ஜிதமற்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அது உண்மையென்றால் மைத்திரிக்கு பிரதமர் பதவியை அரசாங்கம் காட்டிக்காட்டி மறைக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே மாற்று வழிகள் குறித்து மைத்திரி சிந்தித்திருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வரலாம்.
எது எவ்வாறாயினும் எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க போன்ற பலரது மூளைகள் இந்த வியூகத்திற்கு பின்னால் நிறைய வேலை செய்திருப்பதை உய்த்தறியக் கூடியதாக இருக்கின்றது.
தேர்தல் என்ற அரசியல் நாடகத்தின் கதைக்குள் ரசிகர்கள் எதிர்பாராத ஒரு கிளைமேக்ஸ் கட்டம் போல, மைத்திரிபால சிறிசேனவின் பிரவேசம் அமைந்திருந்தது. இதனால் ஒருவித ஊக்கமருந்து கிடைத்தது போல எதிர்க்கட்சிகள் புதுத்தெம்பு பெற்றிருக்கின்றன. மறுபுறத்தில் ஆளுந்தரப்பில் பாதகமான ஒரு அதிர்வும் அடிமட்ட உறுப்பினர்களிடையே இனம்புரியாத பீதியும் ஏற்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இழுத்தெடுக்கும் முயற்சி
மைத்திரிபால சிறிசேனவும் அவருடன் வேறுசிலரும் அணிதிரண்டு களமிறங்கியது பல்வேறு எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியது மட்டுமின்றி மேலும் பலரும் ஆளும்கட்சிப்பக்கம் இருந்து அடுத்தடுத்து எதிரணிப்பக்கம் பல்டி அடிப்பார்கள் போன்று தோன்றியது.
ஆனால் ஓரிரு எம்.பி.க்களையும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் தவிர கடந்த ஒருவாரத்தில் சொல்லிக் கொள்ளும்படியான கட்சித்தாவல்கள் இடம்பெறவில்லை. இதற்கு காரணங்கள் நமக்குத் தெரிந்தவைதான்.
பொது எதிரணி தமது பக்கம் ஆட்களை வளைத்தெடுப்பதற்கு கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இவ்வணியில் இன்னும் பலர் இணைந்து கொள்ள நல்லநேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு இருக்கின்ற பிரச்சினை நிச்சயமாக மைத்திரி வெற்றி பெறுவாரா என்பதும் ஒருவேளை அவர் தோல்வியுற்றால் நம்முடைய அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற பயமும் ஆகும்.
அதேவேளை, எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்களுடனும் இரண்டும் கெட்டான் நிலையில் ஆளும் கட்சியில் சங்கமமாகி இருக்கின்ற சிறுபான்மை கட்சிகளின் உறுப்பினர்கள் சிலருடனும் ஆளுந்தரப்பு பேரம்பேசல்களை ஆரம்பித்துவிட்டது.
ஆளும் கட்சியில் இருந்து யார் யார் விலக முற்படுகின்றார்கள் என்பதை கண்காணிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. யாராவது ஒரு உறுப்பினர் எதிரணிக்கு போக முற்பட்டால் கூட உடனடியாக அவரது தொலைபேசிக்கு அழைப்பொன்று வரும் என்ற அளவுக்கு இந்த வலைப்பின்னல் பலப்படுத்தப்பட்டிருப்பதாக விடயமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இன்னும் 40 நாட்களுக்குப் பிறகு நடக்கப் போகின்ற தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பதை இப்போது அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆயினும் கட்டாற்று வெள்ளத்தில் அடிபட்டுச் செல்பவனுக்கு சிறுபுல்லும் ஒரு துடுப்புபோல தோன்றுவது மாதிரி அரசியல் சுழிக்குள் சிக்குண்டுள்ள எந்த வேட்பாளரிற்கும் வாக்குப்பலமற்ற மக்கள் பிரதிநிதிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக தென்படுகின்றனர்.
இந்நிலையில், நிலைமைகள் மிகவும் சவால்மிக்கதாக ஆகியிருப்பதால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் யாரையும் எதிர்கட்சிக்கு செல்வதற்கு விடமாட்டார் என்பதே யதார்த்தமாகும். அதனாலேயே பைல்கள் பற்றிய கதை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியும் ஏனைய எதிரணிக் கட்சிகளும் எதிர்க்கட்சியில் இருந்து யாரை இழுத்தெடுக்கலாம்? யார் அரசாங்கத்துடன் மனம் உடைந்து இருக்கின்றனர்? என்பதை ரகசியமாக வேவுபார்த்து அவர்களுடன் பேச்சு நடத்திக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறான ஒரு பெரிய பட்டியலை மைத்திரிபால கொண்டு வந்திருக்கவும் கூடும். ஆனால், வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை என்பதாலும் வாக்களிப்புக்கு அதிக நாட்கள் இருப்பதாலும் நாளை என்ன நடக்கும் என்று கூற முடியாத நிலையில் பல அரசியல்வாதிகள் இன்னும் முடிவுகளை எடுக்காமல் இருக்கின்றனர்.
வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் கட்சித்தாவல்கள் இதைவிட வேகமாக இருக்கும் என எதிர்பார்க்க முடியும். பொது வேட்பாளரும் எதிரணியும் பலம் பொருந்திய சக்தியாக ஏறுமுகத்தில் செல்லுமாயின் நிறையப்பேர் ஆளும் தரப்பில் இருந்து எதிரணிக்கு தாவுவதற்கான சாத்தியம் இருக்கின்றது.
அதேபோல், எதிரணியின் அலை ஓய்வடைந்து செல்லும் ஒரு நிலைமை ஏற்படுமாயின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்வார்கள். இப்போது மஹிந்த ராஜபக் ஷவுக்கு அல்லது மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக நிற்பதற்கு முடிவெடுத்திருக்கின்ற அரசியல் வாதிகளும் கூட டிசம்பர் மாத பிற்பகுதியில் தமது ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டு, மாற்று முடிவை எடுக்கக்கூடும் என்று ஊகிக்கப்படுகின்றது.
ஆளும் தரப்பிற்கும் சரி, எதிரணிக்கும் சரி இந்த ஜனாதிபதித் தேர்தல் உண்மையிலேயே வாழ்வா சாவா போராட்டமாகவே இருக்கும். தோற்கின்ற வேட்பாளரின் எதிர்காலம் சூனியமாகும் என்பது வாக்குரிமை கிடைக்காத சிறுவனுக்கும் தெரிந்த விடயம்.
இதற்குப் புறம்பான பின்விளைவுகளை பட்டியலிட்டு சொல்ல வேண்டியதில்லை. ஆகவே, தமது முழுமையான தந்திரோபாயங்கள், பலம், அதிகாரம் எல்லாவற்றையும் பிரயோகித்தேனும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கே இரு பிரதான வேட்பாளர்களும் பிரயத்தனப்படுகின்றனர்.
வாழ்வா சாவா போராட்டம்
ஆளும் கட்சி பல வழிகளில் மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் தமது கட்டுக்குள் வைத்துக் கொள்ளப் பார்க்கின்றது. ஒரு மக்கள் பிரதிநிதி அரசாங்கத்திடமிருந்து எதனை எதிர்பார்க்கின்றாரோ அவருக்கு எதனை கொடுத்தால் சமாளிக்க முடியுமோ அதனை கொடுத்து அவரை கட்டிப்போடுவதற்கு ஆளும் தரப்பு பின்னிற்கப் போவதில்லை.
அதேமாதிரி நிவாரணங்கள், ஊதியங்கள், கொடுப்பனவுகள் என்று அரச பொறிமுறையின் ஊடாக கொடுக்கப்படுகின்ற கிட்டத்தட்ட எல்லா வெகுமதிகளும் மக்களின் தேர்தல்கால மனப்பதிவில் நிச்சயம் செல்வாக்குச் செலுத்தப் போகின்றன.
பொது வேட்பாளர் என்பது வெளிநாட்டு சதித் திட்டம், மீண்டும் நாட்டை சுடுகாடாக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன போன்ற பரப்புரை சிங்கள மக்களைப் பொறுத்தமட்டில் அரசாங்கத்திற்கு கைகொடுக்கும். போதாக்குறைக்கு யுத்தவெற்றியும் புலிப்பயம் காட்டலும் அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரங்களுக்கு குறை நிரப்புச் செய்யும்.
ஆனால், எதிர்க்கட்சிகள் இது எதனையும் செய்ய முடியாது. கட்சி தாவுகின்ற எம்.பி.க்களுக்கு ஏதாவது சந்தோசத்தை கொடுக்க முடிந்தால் கூட, வாக்குறுதிகளாலும் கொள்கைகளாலுமே மக்களது மனங்களை நிரப்ப வேண்டியிருக்கின்றது.
எனவே பொது எதிரணி நிறைய அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டும். வெறும் கிளுகிளுப்புக்களும் சிலிர்ப்பூட்டல்களும் வாக்குப் பெட்டிகளை நிரப்பாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் நோக்குகின்ற போது, பொது எதிரணி உள்ளுக்குள் சில பலவீனங்களை கொண்டிருக்கின்றதோ என்ற சந்தேகமும் எழுகின்றது.
ரணில் பிரதமராக அறிவிக்கப்பட்டதை சிலர் விரும்பவில்லை. தாம் மைத்திரியையும் சந்திரிகாவையும் நம்பியே எதிரணிக்கு ஆதரவு வழங்க முன்வருகின்றோம்.
ஆனால் ரணில் பிரதமராகி அவரிடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்படுவதை நாம் விரும்பவில்லை என்ற தோரணையில் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். உண்மைதான் சந்திரிகா மற்றும் மைத்திரியாலேயே இந்த அலை எழுந்திருக்கின்றது. ரணிலால் இந்த அலை எழுந்தது என்றால் இதற்கு முன்னமே அது நடந்திருக்க வேண்டும்.
இருப்பினும் ஐ.தே.க.ஆதரவாளர்களை இலக்காகக் கொண்டு மைத்திரி வெளியிட்ட அறிவிப்பு ஏனைய தரப்பினரை நின்று நிதானிக்கச் செய்திருக்கின்றது.
அதேபோல் பொது வேட்பாளராக தன்னை பிரகடனப்படுத்திய மைத்திரியின் பிரகடனங்கள் தர்க்கவியல் ரீதியாக நோக்கப்படுகின்றது. அதாவது – இரண்டுமுறை நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அப்பதவியில் அமர விரும்புகின்றார் என்றால், ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாட்களுக்குள் மைத்திரி அதனை விட்டுத் தருவாரா? கொஞ்சக் காலமேனும் நிறைவேற்றதிகாரத்தை சுகிக்க மைத்திரி விரும்பமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
அத்துடன் ரணிலை அதிகாரமுள்ள பிரதமராக ஆக்கிவிட்டு பெயரளவில் (நிறைவேற்று அதிகாரமற்ற) ஜனாதிபதியாக இருப்பதற்காகவா மைத்திரிபால சிறிசேன இவ்வளவு பாடுபடுகின்றார்? போன்ற தர்க்கவியல் வினாக்களும் இதனடிப்படையில் எழுகின்றன.
இந்த நாட்டை 9 வருடங்களாக ஆட்சி செய்த மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் இன்னுமொரு தடவை மக்கள் ஆணையை வேண்டிநிற்கின்றது. மஹிந்த ராஜபக் ஷ இன்னுமொரு தடவை தமக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்கின்றார்.
மறுபுறத்தில், நெடுங்காலமாக தோல்வியே விதியென இருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஒரு சுதந்திரக் கட்சிக் காரரை பொதுவேட்பாளராக நிலை நிறுத்தியிருக்கின்றன. இந்தப் பின்னணியில் யார் எந்தப்பக்கம் பல்டி அடிப்பார்கள் என்பதை விடவும் சிறுபான்மை மக்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதே கவனிப்பிற்குரியது.
சிறுபான்மை மக்களின் நிலை
சிறுபான்மை மக்கள் பொதுவாகவும் முஸ்லிம்கள் குறிப்பாகவும் வெறுப்படைந்து போயிருக்கின்ற விடயம் – இனவாத சக்திகளின் மேலாதிக்கமாகும். கடந்த 3 வருடங்களாக பொது பலசேனாவும் அதன் தோழமை இயக்கங்களும் முஸ்லிம், கிறிஸ்தவ சமய அழிப்பு கைங்கரியங்களில் ஈடுபட்டன. அளுத்கமயிலும் பேருவளையிலும் சிறியதொரு இனச்சுத்திகரிப்பே நடந்தேறிவிட்டது.
ஆனால், கலவரத்துக்கு காரணமானவர்கள் இன்னும் பகிரங்கமாக உலவித்திரிகின்றனர். முஸ்லிம்கள் ஆறுதல் கொள்ளும் அளவுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வரலாற்றுக் கவலை முஸ்லிம் மக்கள் மத்தியில் இருக்கின்றது.
இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுவதை அரசாங்கம் தடுத்திருந்தால் சிறுபான்மை மக்களின் மனங்களில் மைத்திரிபால தாக்கம் செலுத்தியிருக்கமாட்டார் என்பதே நிதர்சனம்.
தமிழர்களைப் பொறுத்தமட்டில், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டால் கூட அவர்களது உரிமைசார் உணர்வு இன்னும் அப்படியேதான் இருக்கின்றது என்று சொல்ல வேண்டும்.
எத்தனை பரிசுகளை அவர்களுக்கு கொடுத்தாலும் கொள்கையில் இருந்து இறங்கி வரமாட்டார்கள் என்பதற்கு வட மாகாண சபையின் தேர்தல் முடிவுகள் நல்ல சான்று.
இருப்பினும், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் இந்நாட்டின் ஜனாதிபதியாக வரமுடியாது என்ற அடிப்படையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் கட்சிகள் பிரதான வேட்பாளர்களுள் இருவரில் ஒருவருக்கே ஆதரவு வழங்க வேண்டியிருக்கின்றது.
ஒருவேளை, ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டிருந்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகள் அவருக்கு ஆதரவளித்திருக்கும். முன்னைய ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தமைக்காகவும், போர் நிறுத்த உடன்படிக்கையை கொண்டு வந்தவர் என்ற நல்லெண்ணத்திலும் அந்த முடிவை த.தே.கூட்டமைப்பு எடுத்திருக்கும்.
ஆனால் மைத்திரிபால நிறுத்தப்பட்டுள்ளமையால் கடுமையான கலந்தாலோசனைகளை நடத்தி வருகின்ற பின்னணியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் முடிவை எடுக்கும் அறிகுறிகளே தென்படுகின்றன.
ஆளும் கட்சி சார்பில் இணைப்பாளர்களாக பல தமிழர்கள் நிறுத்தப்பட்டுள்ளமையால் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் குறிப்பிட்டளவான தமிழர்களின் வாக்குகள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு கிடைக்கும் சாத்தியமிருந்தாலும், இலட்சக்கணக்கான தமிழர்கள் த.தே.கூட்டமைப்பின் முடிவுக்கு அமைவாகவே வாக்களிப்பார்கள் என்பது அரசாங்கத்திற்கே தெரியும். அதனால்தான் தமிழர்களின் ஆதரவை அரசாங்கம் பெரிதாக நம்பியிருக்கவும் இல்லை.
இதேவேளை, ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் கட்சிகளில் தேசிய காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய கட்சிகள் தமது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.
சமூகத்தின் எதிர்கால நலன்கள் பற்றிய அக்கறை அல்லாமல், பைல்கள் (கோப்புகள்) பற்றிய பயமே அதிகம் எல்லோரையும் ஆட்கொண்டுள்ளது. அத்துடன் தமது அரசியல் எதிர்காலம் பற்றியும் அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். உண்மையில் பைல்கள் பற்றிய பீதியை ஜனாதிபதி கிளப்பிவிட்டது மைத்திரிபாலவுக்காக மட்டுமின்றி, அரசாங்கத்தில் உள்ள ஏனைய உறுப்பினர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்கும் என்றால் மிகையில்லை.
எல்லா எம்.பி.க்களையும் போல முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்க ளுக்கும் ஜனாதிபதியிடம் பைல்கள் இருக்கின்றன.
நல்லது கெட்டதுகள் அதில் இருக்கும். ரவூப் ஹக்கீமோ, ரிஷாத் பதியுதீனோ, அதாவுல்லாவோ ஆளும் தரப்பில் இருக்கும் வரைக்கும் எல்லாம் சுபமாகவே இருக்கும். ஆனால், ஒருவேளை தமக்கு எதிரான நிலைப்பாட்டை இவர்கள் எடுத்தால் இந்த பைல்களில் இருக்கின்ற கெட்டதுகள் வெளிக்கொணரப்படும், பெருப்பித்து காண்பிக்கப்படும்.
இதுதான் பல தசாப்தங்களாக நமது அரசியல் கலாசாரமாகவும் இருக்கின்றது. இப்படியான நிலையிலும் துணிந்து ஒரு முடிவை எடுப்பது என்றால் தமது கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். அல்லது எதிர்த்து நின்று போராடும் திராணி இருக்க வேண்டும்.
ஆனால், ஆளும் தரப்புடன் இரவில் பேச்சுவார்த்தை நடத்துபவர்களாலும், கொந்தராத்துக்களில் கொள்ளை அடிப்பவர்களாலும், அபிவிருத்தி என்ற போர்வையில் தமது கஜனாக்களை நிரப்புகின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் துணிந்து முடிவெடுப்பது என்பது இயலாத காரியம்.
எது எவ்வாறிருப்பினும் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் தொடர்ந்து கலந்தாலோசித்து வருகின்றன.
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட பின்னரே இறுதி முடிவை அறிவிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே ஹுனைஸ் பாறூக் எம்.பி.யை இழந்துவிட்ட மக்கள் காங்கிரஸ் கட்சி எந்த முடிவுக்கும் வர முடியாதவாறு தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
இனவாத இயக்கங்களின் நிலைப்பாடு சிறுபான்மை கட்சிகளின் முடிவில் நிச்சயம் தாக்கத்தை செலுத்தும். குறிப்பாக பொதுபலசேனா இணையும் பக்கத்திற்கு சிறுபான்மை மக்கள் வாக்களிக்க முன்வரமாட் டார்கள்.
இந்நிலையில் பொது பலசேனா ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருக்கின்றது. ஆனால் பொது பலசேனாவை தம்பக்கம் வைத்துக்கொண்டு சிறுபான்மை முஸ்லிம்களிடம் வாக்குக் கேட் பது மிகவும் சிக்கலான ஒரு நிலைமையாகும்.
அதுபோலவே முஸ்லிம் கட்சிகளும் அரசாங் கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் மற் றும் பிரதியமைச்சர்களும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு முஸ்லிம்களிடம் வாக்குக் கேட்க வருவார்கள்?
மைத்திரிபால அணியினருக்கு இது நல்லதொரு பிளஸ் பொயின்டாக அமையும். இதனை தமது பிரச்சாரத்தின் முக்கிய கருப்பொருளாக பொது எதிரணி பயன்படுத்தும்.
ஆனால், சம்பிக்க ரணவக்க போன்றோர் அங்கம் வகிக்கின்ற ஜாதிக ஹெல உறுமய பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதையும் மறந்து விடலாகாது. இரு பக்கங்களிலும் இனவாதத்தின் தாக்கம் சிறியதாகவும் பெரியதாகவும் இருக்கின்றது.
எனவே சிறுபான்மை மக்களின் வாக்கு தேவையானவர்கள் இனவாத சக்திகளை ஒதுக்க வேண்டியிருக்கும். அது நடைபெறாத பட்சத்தில், குறைந்த இனவாத சிந்தனையுள்ள தரப்பினர் ஆதரவளிக்கும் வேட்பாளரை ஆதரிக்கும் முடிவையே பெரும்பாலான சிறுபான்மை மக்கள் எடுப்பர்.
மக்களின் கையில் மூக்கணாங்கயிறு இருக்கின்றது. அவர்கள் ஒரு முடிவில் இருக்கின்றார்கள். தலைவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் மக்கள் அதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. உங்களது அரசியல் பற்றி அவர்களுக்கு தெரியும். இனியும் ஒருமுறை அவர்கள் ஏமாறப் போவதில்லை.
–ஏ.எல்.நிப்றாஸ்–