ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அம்மன் கோயில் திருவிழாவில் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடைபெறும்.
இந்தாண்டு திருவிழா, கடந்த சில நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மாவிளக்கு பூஜை, அலகு குத்துதல், பொங்கல் வழிபாடுபோன்றவை நடந்தன. இதில் கலந்து கொண்ட பக்தர்கள், உருளுதண்டம் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதேபோல, ராசிபுரம் அருகே அத்திப்பலகானூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூவோடு எடுத்தல் மற்றும் சாட்டையடி திருவிழா நேற்று நடந்தது.
பக்தர்கள், தங்களின் வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்திக் கடன் செலுத்தவும் வரிசையில் நின்று கோயில் பூசாரியிடம் சாட்டையடி வாங்கினர். இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு வெளியூர்களை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர்.
கோயில் பூசாரியிடம் சாட்டையடி வாங்குவதால் பில்லி, சூனியம் நீங்கி, குழந்தை பேறு, திருமண பாக்கியம் உள்ளிட்ட வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.
இதனால், ஆண்டுதோறும் இந்த விழாவில் பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.