அது கடந்த 5 ஆம் திகதி புதன்கிழமை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த வெள்ளவத்தை பொலிஸ் நிலையம் சற்று வேலைப் பளு தணிந்த நிலையில் இயங்கிக் கொண்டிருந்தது. திடீரென அங்கு ஒரு தம்பதியினர் பிரசன்னமாகின்றனர். எதையோ பறிகொடுத்த நிலைமை அவர்களது முகங்களில் தெரிகிறது.
“சேர் எனது மகளைக் காணவில்லை. யாரோ கடத்தி விட்டார்கள்.சேர் நீங்கள் தான் எப்படியேனும் எனது மகளை மீட்டுத்தர வேண்டும்” என அழுதவாறு முறைப்பாட்டை சுருக்கமாக கண்ணீருடன் கலந்து சொல்லி முடிப்பதற்குள் பொலிஸார் உஷார் ஆகின்றனர்.
உசா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 17 வயதான யுவதி. வெள்ளவத்தை ரஞ்சன் விஜயரத்னபுர பகுதியைச் சேர்ந்தவர். அம்மா, அப்பா, அக்கா, அத்தான் ஆகியோருடன் ஒரே வீட்டில் பிரச்சினைகள் இன்றி சந்தோஷமாக வாழ் நாளை கழித்து வந்தவள். இவளைத்தான் இப்போது காணவில்லை என பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தைப் பிரதேசத்தில் மனிதப் படுகொலை, கடத்தல், கப்பம் கோரல், கொள்ளை போன்ற பாரிய குற்றச் செயல்கள் அண்மைக் காலமாக கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த முறைப்பாடானது மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
வெள்ளவத்தை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லர் நிலைமையின் பார தூரத்தை உணர்ந்து உடன் களத்தில் இறங்குகிறார்.
அதன்படி மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க, கொழும்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி மத்துரட்ட, கொழும்பு தெற்கிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரேமலால் ரனகல ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் கொழும்பு பிரிவு 2ற்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டி சொய்ஸா பிரிவு 3ற்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் ரொஸான் டயஸ் ஆகியோரின் ஆலோசனைக்கமைய விசேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
அதேசமயம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஸான் டி சில்வாவின் மேற்பார்வையில் அந்தப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஜயரத்னவின் ஆலோசனையின் கீழ் மற்றொரு குழுவும் விசாரணைகளை ஆரம்பித்தது.
அதன்படி உசா எவ்வாறு கடத்தப்பட்டார்? எப்போது யாரால் கடத்தப்பட்டார்? என்பதை அறிய பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகின.
முறைப்பாட்டாளர்கள் தெரிவித்ததற்கமைய உசா முறைப்பாடு பதியப்பட்ட தினமான 5ஆம் திகதி இரவு 7 மணிக்கும் 8 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு விசாரணைக்குழுவினர் வருகின்றனர்.
உசாவின் அம்மாவும் அப்பாவும் அச்சமயம் வீட்டில் இருக்கவில்லை என்பதையும் அப்போது வீட்டில் இருந்த உசாவின் அக்கா மற்றும் அத்தான் ஆகியோர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தின் ஊடாக அறிய முடிகின்றது.
பொலிஸாருக்கு உசாவின் அக்கா அத்தான் வழங்கிய தகவலில் வீட்டில் அம்மாவும் அப்பாவும் இருக்கவில்லை. உசாவுடன் சேர்த்து நாங்கள் மூவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது வீட்டில் இருந்து உசா பெரியம்மா வீட்டிற்கு (100M தூரத்தில்) சென்றார்.
சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த அம்மாவும் அப்பாவும் வந்தனர். தங்கை எங்கே என அம்மா வினவ அவள் பெரியம்மா வீட்டிற்கு சென்று விட்டதாக நாம் பதிலளித்தோம்.
சிறிது நேரம் வரை காத்திருந்து பெரியம்மா வீட்டிலும் தங்கை இல்லை என்பதை விசாரித்து அறிந்த போது அதிர்ந்து போய் தேட ஆரம்பித்தோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை கருத்தில் கொண்ட விசாரணை பொலிஸ் குழு தலைமை பொலிஸ் பரிசோதகர் உதய குமார வுட்லரின் ஆலோசனைகளையும் அனுமதிகளையும் பெற்று விசாரணைகளை துரிதப்படுத்தியது.
உசாவை தேடி வெள்ளவத்தை பொலிஸார் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்த நிலையில் பொலிஸாருக்கு மிக முக்கியமான தகவல் ஒன்று பரிமாற்றப்பட்டது.
அதாவது உசாவின் அத்தான் பொலிஸாரை தொடர்பு கொண்டு சேர் யாரோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு 20 இலட்சம் ரூபா கப்பம் கேட்கின்றனர். மகளை அவர் தான் கடத்தி வைத்துள்ளாராம் என கூறி முடிப்பதற்கும் கடத்தல்காரர் தொடர்பில் தடயம் ஒன்று கிடைத்ததால் விசாரணைக்குழு உஷாரானது.
இந்த அழைப்பு ஏற்படுத்தப்பட்டு சிறிது நேரத்தில் தனது அம்மாவை தனது தொலைபேசியில் தொடர்பு கொண்ட உசா “அம்மா எனக்கு பயமாக இருக்கின்றது.
யாரோ இங்கு என்னை கடத்தி வந்து மலசலகூடமொன்றில் அடைத்து வைத்துள்ளனர். ஒன்றும் செய்ய முடியவில்லை. தாக்குகின்றனர். பயமாக உள்ளது. என்னை எப்படியேனும் காப்பாற்றுங்கள்” என தெரிவித்ததால் உசாவின் அம்மா பதற்றமானார்.
இதன் பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட கடத்தல்காரர் எனக்கூறப்படும் நபர் உசாவின் அத்தானை மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீண்டும் நாளை காலை தொடர்பு கொள்கிறேன். பணத்தை தயார் செய்யுங்கள் எனக்கூறியுள்ளார்.
இந்த எல்லா விடயங்களையும் பெற்றுக்கொண்ட விசாரணைக் குழுவினர் உசாவை மீட்கும் திட்டத்தினை ஆரம்பித்தனர். அதன்படி வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி நாகஹவத்த தலைமையிலான 7 பேர் கொண்ட குழு திட்டமொன்றை வகுத்தது.
கடத்தல்காரர் கேட்கும் 20 இலட்சம் ரூபாவினை போலியாக தயார் செய்து அதனை வழங்கி கப்பக்காரரை /காரர்களை கைது செய்வதே அந்த திட்டம். இந்நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை தினமாக இருந்த போதும் கப்பக்காரரிடமிருந்து அழைப்பு வரத்தவறவில்லை.
“சொல்வதை கவனமாக கேட்டுக்கொள். 20 இலட்சம் ரூபாவுடன் மத்துகம வீதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு வா” என உசாவின் அத்தானுக்கு கப்பக்காரர் இடத்தை அறிவிக்கவே அந்த தகவல் பொலிஸாருக்கு பரிமாற்றப்பட்டது.
அதன்படி வேன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பெற்றுக்கொண்ட பொலிஸார் மத்துகம நகரை நோக்கிய கப்பக்காரர்களை கைது செய்யும் படலத்தை ஆரம்பித்தனர்.
பொலிஸ் பரிசோதகர் நாகஹவத்த தலைமையில் நான்கு பேர் வரையில் வேனில் பயணிக்க உப பொலிஸ் பரிசோதகர் விக்ரம ஆரிய தலைமையிலான மேலும் மூவர் மோட்டார் சைக்கிள்களில் பயணத்தை ஆரம்பித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸாரும் வேனில் பயணித்தோரும் உசாவின் அத்தானுக்கு பிரத்தியேகமாக தொலைபேசியில் ஆலோசனைகளை வழங்கிய வண்ணமே மத்துகமயை நோக்கி சென்றனர்.
மத்துகம நகருக்குள் நுழைவதற்கு முன்னதாகவே உள்ள கப்பக்காரர் குறிப்பிட்ட பெற்றோல் நிரப்பும் நிலையத்தை உசாவின் அத்தான் அடைந்த போதும் கப்பக்காரர் வரவில்லை.
தொலைபேசி வழியாக ஒவ்வொரு இடமாக மாறி மாறி கப்பக்காரர் உசாவின் அத்தானை அலையவிட்டனர். கூடவே சேர்ந்து அழக்கழிக்கப்பட்ட பொலிஸாரும் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தனர்.
ஒருவாறு இறுதியாக உசாவின் அத்தானின் கையிலிருந்த போலியாக தயார் செய்யப்பட்ட 20 இலட்சம் ரூபா பார்சலை பெற கப்பக்காரர் முனைந்த போது பொலிஸார் வேனில் பின் தொடர்வதை அவதானித்து தப்பிச்செல்ல முற்பட்டனர்.
இந்நிலையில் பொலிஸார் துரிதமாக செயற்பட்டதில் வேனில் இருந்தும் மோட்டார் சைக்கிளிலிருந்தும் பாய்ந்த அவர்கள் சந்தேக நபரை துரத்தி மடக்கிப்பிடித்தனர்.
சந்தேக நபரின் கைகளுக்கு விலங்கிட்ட பொலிஸார் உசா தொடர்பில் அவரிடம் உடன் விசாரித்தனர். இதனையடுத்து மத்துகம நகரிலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் உள்ள ஒரு இடத்திலிருந்து உசாவும் பொலிஸாரால் மீட்கப்பட்டு வெள்ளவத்தை பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்டார்.
பொலிஸ் நிலையம் அழைத்து வந்த அவ்விருவரையும் பொலிஸார் வெவ்வேறாக வைத்து நடந்தவற்றை வினவிய போது அவர்களே ஒரு கணம் அதிர்ந்து போயினர்.
ஆம். இது ஒரு கடத்தல் என்பதை விட கடத்தல் நாடகம் என்று அறிந்து கொண்ட பொலிஸார் உசாவும் கப்பம் கோரிய நிஷாந்தவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சேர்ந்தே இதனை செய்துள்ளதை அறிந்து கொண்டுள்ளனர்.
நிஷாந்தனுக்கு 23 வயது. அனுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த இவர் தொழில் நிமித்தம் கொழும்பு வந்து சென்றுள்ளவர். தொலைபேசியில் மிஸ்கோல் ஒன்று ஊடாக அவருக்கு அறிமுகமானவரே 17 வயதான உசா.
இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையிலேயே நிஷாந்தவும் உசாவும் சேர்ந்து உசாவின் பெற்றோரிடம் 20 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ள இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி உள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
தனது பெற்றோரிடம் இருந்து பணம் பறிக்க உசா நிஷாந்தவிற்கு துணை போயுள்ளதாக சுட்டிக்காட்டும் விசாரணைக் குழுவினர் நீதிமன்றில் சந்தேக நபரான நிஷாந்தவை ஆஜர்படுத்தும் போது சமர்ப்பிக்கவுள்ள Bஅறிக்கையில் அது தொடர்பில் தெரியப்படுத்த உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.
நிஷாந்த இந்த கப்பம் கோரலை உசாவுடன் இணைந்து தனியாக செய்திருக்க முடியாது என குறிப்பிடும் பொலிஸார் நிஷாந்தவுக்கு உதவியாக எவரேனும் செயற்பட்டிருக்க வேண்டும் என நம்புகின்றனர்.
அது தொடர்பிலும் விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ள வெள்ளவத்தை பொலிஸார் இந்த சம்பவத்துடன் வேறு எவருக்கேனும் தொடர்பு இருப்பின் அவர்களை கைது செய்ய எதிர்பார்த்துள்ளனர்.
பெற்றோரின் இரத்தத்தை சூடேற்றி அவர்களை பதறவைக்கும் வகையில் முன் எடுக்கப்பட்டிருந்த இந்த கடத்தல் சம்பவம் அல்லது நாடகம் வெள்ளவத்தை பொலிஸாரின் சூட்சுமமான நகர்வுகளூடாக முறியடிக்கப்பட்டது.
இலங்கை முழுவதும் உள்ள 433 பொலிஸ் நிலையங்களுக்கும் உசா காணாமல் போனது முதல் அவரைத் தேடும் பணியினை வெள்ளவத்தை பொலிஸார் அறிவித்தல் ஒன்றினூடாக விடுத்திருந்தனர்.
எவ்வாறாயினும் மிக விரைவாக செயற்பட்ட பொலிஸார் இது விடயத்தில் உடன் நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியதே. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர், உதய குமார வுட்லர், பொலிஸ் பரிசோதகர் நாகஹவத்த தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்துள்ளது.