மும்பை: பாலிவுட்டில் கடந்த 5 ஆண்டுகளாக ‘எலியும்-பூனையுமாக’ இருந்த நடிகர்கள் சல்மான்கானும், ஷாருக்கானும் இன்று ஒருவரையொருவர் கட்டித்தழுவி இருதரப்பு ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தனர்.
சல்மான்கானின் தங்கையான அர்பிதாகானுக்கும் டெல்லியை சேர்ந்த பிரபல தொழிலதிபருக்கும் நாளை (18-ம் தேதி) ஐதராபாத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.
இந்த திருமணத்தையொட்டி, மணமகளுக்கு மருதாணி இடும் நலங்குச்சடங்குகள் மும்பையில் உள்ள சல்மான்கானின் வீட்டில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த சடங்கில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர்.
யாரும் எதிர்பாராத வகையில் வாசலில் வந்து நின்ற ஒரு சொகுசுக்காரில் இருந்து இறங்கி உள்ளே சென்ற அந்த பாலிவுட் பிரபலத்தை பார்த்த சிலர், அதிர்ச்சியில் தங்கள் கையை கிள்ளிப்பார்த்துக்கொண்டனர்.
ஆம், சுமார் ஐந்தாண்டு காலமாக ஒன்றன்பின் ஒன்றாக உருவான ஏராளமான அபிப்ராய பேதங்களால் ‘எலியும்-பூனையுமாக’ இருந்த சல்மான்கானும், ஷாருக்கானும் இந்த திருமணத்தையொட்டி சந்திப்பார்கள் என்று அவர்களில் யாரும் நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள்.
நேராக, உரிமையுடன் வீட்டினுள் சென்ற ஷாருக்கான், மணமகளின் அருகே நின்றிருந்த சல்மான்கானை கட்டித்தழுவி நலம் விசாரித்தார். பின்னர் சல்மான்கானும், ஷாருக்கானும் மணமகள் அர்பிதாவின் தலையில் முத்தமிட்டு வாழ்த்தினர்.
இந்த காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் ‘இன்ஸ்ட்டாகிராமில்’ வெளியானதையடுத்து, இருதரப்பு ரசிகர்களும் ஆனந்த வெள்ளத்தில் மிதந்துக்கொண்டிருக்கின்றனர்.