முகாம் மக்களுக்கு முகாம் காணிகளை பிரித்துக்கொடுக்கும் இராணுவம்!
வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு முகாம் அமைந்துள்ள காணிகளை பிரித்து கொடுக்கும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக வலி வடக்கு மீள் குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் குற்றம் சாட்டியுள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாம் மற்றும் மதவடி முகாம் ஆகியவற்றில் வசிக்கும் மக்களுக்கு முகாம் அமைந்துள்ள காணிகளையே பிரித்துக்கொடுக்கும் முயற்சியில் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் ஒருவர் இராணுவத்தினருடன் சேர்ந்து ஈடுபட்டுள்ளார்.
சபாபதிப்பிள்ளை முகாம் அமைந்துள்ள காணி 120 பரப்பளவை கொண்ட தனியார்களுக்கு சொந்தமான காணி ஆகும். மதவடி முகாம் அமைந்துள்ள காணி 40 பரப்பளவை கொண்ட தனியார்களுக்கு சொந்தமான காணி ஆகும்.
அக் காணி உரிமையாளர்களில் பலர் வெளிநாடுகளிலும் சிலர் உள் நாட்டிலும் வசிக்கின்றார்கள். அவர்களின் சம்மதம் இன்றியே முகாம் மக்களுக்கு அக் காணிகளை பிரித்துக்கொடுக்க முயற்சிகளை தனியார் நிலஅளவையாளர்கள் மூலம் மேற்கொள்கின்றார்கள்.
நேற்று முன்தினம் சபாபதிப்பிள்ளை முகாம் அமைந்துள்ள காணியை அளவீடு செய்வதற்கு வந்திருந்த போது காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து திரும்பி சென்று இருந்தார்கள்.
நேற்றைய தினம் காலை மதவடி முகாம் அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மதவடி முகாம் அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் பலர் வெளிநாடுகளில் வசிப்பதனால் எதிர்ப்பின்றி அவர்கள் நிலஅளவை பணியை மேற்கொண்டனர்.
முகாமில் உள்ள மக்களோ தாம் தமது சொந்த இடங்களுக்கு செல்லவே விரும்புகின்றனர். ஆனால் இராணுவத்தினர் அவர்களை சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்காது முகாம் காணிகளையே பிரித்துக்கொடும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.