சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையோ, அவரது குடும்பத்தினரையோ அல்லது போரை வென்றெடுத்த படையினரையோ, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல தான் அனுமதிக்கமாட்டேன் என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஐதேக தலைமையகத்தில், இன்று காலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
‘அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தால், அவரை அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல போவதாக வெளிநாட்டில் உள்ள, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய புலம்பெயர் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
(உலகத் தமிழர் அமைப்பின் பேச்சாளர் என்கின்ற சுரேன் சுரேந்திரா என்பவர்தான் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்றப்படுவார் என அல்சீரியா தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கும் கூறியவர். இந்த நேரத்தில்….. இந்த பேச்சானது மகிந்தவின் தேர்தல் பிரசாரத்துக்கு ஊக்குவிக்கும் ஒரு நிலைப்பாடாகும். சுரேன் சுரேந்திரா என்பவர் யார்? அவர் யாருடைய ஆள் (மகிந்தவின்) என்பதை தமிழர்கள் சரியாக இந்த நேரத்தில் புரிந்து கொள்ளவேண்டும். )
நான் அதிபரான பின்னரும், அனைத்துலக அளவில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த சவாலுக்கு எதிராகவும், குரல் கொடுப்பேன்.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், மகிந்த ராஜபக்ச, அவரது குடும்பத்தினர், பாதுகாப்புச் செயலர், அல்லது நாட்டை மீட்ட முப்படையினர் உட்பட அனைவரையும், விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பாதுகாப்பேன் என்று உறுதியளிக்கின்றேன்.
எனது கையில் ஆட்சி ஒப்படைக்கப்பட்டால், நிச்சயமாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவேன்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதன் மூலம் பொறுப்புக்கூறலை வெளிப்படுத்த முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், கரு ஜெயசூரிய, ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், ராஜித சேனாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அலைபேசியூடாக மாவீரர் தின செய்தி அனுப்பிய இருவர் கைது
மாவீரர் தினத்தையொட்டிய நிகழ்வுகள் ரகசிமாக நடக்கின்றதா என்பதை அவதானிக்கும் வகையில் கிழக்கில் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகள் உஷார் படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அலைபேசியூடாக மாவீரர் தினச் செய்திகளை பரிமாறியதாகக் கூறப்படும் இருவரை நேற்று வியாழக்கிழமை கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாவீரர்களாகிய நீங்கள் புதைக்கப்பட்டவர்கள் அல்ல விதைக்கப்பட்டவர்கள், என்றோ ஒரு நாள் நீங்கள் வீறுகொண்டெழுவீர்கள்’ என்ற குறுஞ்செய்தியை பரிமாறிக்கொண்டதாகக் கூறப்படும் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.