ஐதராபாத்: ஆந்திராவை கலக்கி வந்த போலி முத்த சாமியாரை போலீசார் கைது செய்தனர். அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.
ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் கமலபுரம் என்ற நகரில் ஒரு சிறிய அய்யப்பன் கோயில் ஒன்று உள்ளது. இதன் பின்புறத்தில் அறை ஒன்றை அமைத்து சாமியார் ஒருவர் மக்களின் பிரச்னைகளுக்கு கடந்த 2 மாதங்களாக ஆறுதல் அளிப்பதாக அப்பகுதியில் தகவல் பரவியது.
அந்த சாமியார் சற்று வினோதமாக தன்னை தேடி வரும் குடும்பம் மற்றும் பொருளாதார பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கட்டி பிடித்து முத்தம் கொடுத்து ஆசி வழங்குவதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் அப்பகுதியில் முத்த சாமியார் என்றும் அழைக்கப்பட்டார். இந்நிலையில் அவரது ஆதரவாளரான கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பா ரெட்டி என்பவர் இணையத்தளத்தில் முத்த சாமியாரின் புகழ் பரப்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தார்.
இந்த காட்சிகள் அனைத்தும் உள்ளுர் தொலைகாட்சி சேனல்களிலும் ஒளிபரப்பாக தொடங்கின. இதில் அவர் ஆண்களுக்கு எலுமிச்சை பழமும், பெண்களை கட்டிபிடித்து முத்தமும் கொடுப்பது தெரிந்தது.
இதனை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார் அங்கு விரைந்து சென்று முத்த சாமியாரை கையோடு பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். படங்களை ஆன்லைனில் பதிவேற்றிய அவரது ‘பக்தர்’ சுப்பாரெட்டியையும் கைது செய்துள்ளனர்.
போலி முத்த சாமியாரை ஜனவரி 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவின் பேரில் போலி முத்த சாமியாரை மனநல மருத்துவமனையில் பரிசோதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
போலி சாமியார்களின் கவர்ச்சி வார்த்தைகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்று ஆந்திர போலீசார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.