கணவனை இழந்த பெண் விதவை. மனைவியை இழந்த ஆண் காலப்போக்கில் புது மாப்பிள்ளை”. இதுவே என்றுமே நம் சமுதாய கட்டமைப்புக்குள் ஊறிப் போன சம்பிரதாய மரபு. மனைவியை இழந்த பின் வயதான தாத்தாவும் இளம் பெண்ணை மறுமணம் செய்து கொள்ளலாம்.
ஆனால், கணவனை இழந்து பிள்ளைகளுடன் தத்தளிக்கும் பெண்களுக்கு ஏது மறுவாழ்வு?
ஒரு பெண் கணவனை இழந்த நாள் முதலே அவளின் ஆடை அணிகலன்களின் பொலிவும் குறைந்து விடும். காரணம் கணவனை இழந்தவளை நோக்கிய ஊராரின் பார்வை தவறாக அமைந்து விடக் கூடாது என்ற எண்ணம்.
அதுவும் போதிய படிப்பறிவு இல்லாமல், குடும்பத்தின் சகல தேவைகளையும் கணவனே பார்த்து வந்த நிலையில் ஒரு கிணற்று தவளையைப் போல் வாழ்ந்த பெண்களின் நிலைமை இன்னும் பரிதாபமே.
இவ் இழப்பானது யாரோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலவே இருக்கும். இனி என்ன செய்வது? எங்கு செல்வது? எதுவுமே புரியாது. ஆனால், பிள்ளைகளுக்காகவேனும் வாழ வேண்டிய நிர்ப்பந்தம்.
ஏனெனில், கணவருடன் வாழ்ந்த வாழ்வின் ஆதாரம் பிள்ளைகளே. அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டுமென்ற நிலை வரும் போது தான் சாயம் போன தன் வாழ்க்கையோடு போராடுகின்றார்கள்.
உருகும் மெழுகுவர்த்தியாய் இருந்து பிள்ளைகள் வாழ்வில் ஒளியூட்டுகின்றார் கள். ஆனால் யாருக்காக வாழ வேண்மென நினைத்தார்களோ அந்த பிள்ளைகள் தம் கண் முன்னே அழிந்து போவதை கண்டவுடன் அவர்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பயனற்றதாய் போகின்றது.
பிடிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு கிராமத்தில் வசிக்கும் பாடசாலை மாணவியே லக் ஷனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளின் தந்தை பண்டார (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எட்டு வருடங்களுக்கு முன் திடீரென இறந்து விட, தாய் பியந்தியே குடும்ப பாரத்தை சுமந்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டாள்.
பியந்தி படிப்பறிவும் பெரிதாய் இல்லாமல், கிராமம், கணவன், பிள்ளைகள் என்ற குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்தவள். கணவன் இறந்த பின் அவளுக்கு உதவிக்கு என்று யாரும் இருக்கவில்லை.
மூன்று பிள்ளைகளுடன் நிர்க்கதியாக நின்றாள். எனினும் அவள் தன் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. தன்னுடைய வாழ்வில் கிடைத்த ஏமாற்றத்துக்காக தன் பிள்ளைகளின் வாழ்க்கை வீணாகி விடக் கூடாது என்று போராடினாள்.
தனக்கு தெரிந்த இனிப்பு பண்டங்களை தயாரித்து கடைகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்த்தெடுத்தாள்.
இன்று லக் ஷனியின் மூத்த சகோதரி தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்குச் சென்றிருக்கிறாள். இளைய சகோதரி ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கின்றாள்.
குறைந்த வருமானத்தில் வாழும் குடும்பமாக இருந்த போதிலும் லக் ஷனியிடம் ஒரு கையடக்க தொலைபேசியும் இருந்தது. ஆனால் அந்த கையடக்க தொலைபேசி தான் அந்த குடும்பத்தின் நிம்மதியை கெடுத்த தொல்லைபேசியாக மாறியது.
லக் ஷனிக்கு அந்த கையடக்க தொலைபேசியுடன் உறவு கொண்டாட அமித என்ற காதலனும் இருந்தான். லக் ஷனியும் அமிதவும் அடிக்கடி சந்திக்காத போதும் இருவருக்குமிடையில் குறுந்தகவல்கள், தொலைபேசி அழைப்புகள் என்பன அவர்களின் காதல் உறவை வளர்த்தன.
அமித என்பவன் கல்விப் பொதுத்தராதர சாதாரணப் பரீட்சை எழுதி விட்டு ஊரில் இருக்கும் இளைஞர்களுடன் வீணாகப் பொழுதை கழிக்கும் ஒரு இளைஞன்.
நாள் முழுவதும் அடுப்பங்கரையில் வெந்து, நொந்து இனிப்பு பண்டங்களை தயாரிக்கும் தாய் பியந்திக்கு மகளின் காதல் விவகாரம் தெரிய வர வழமையாக எல்லா தாய்மாரும் கண்டிப்பதை போல் பியந்தியும் கண்டித்தாள்.
“நீ படித்து முடிந்தவுடன் என்ன செய்தாலும் பரவாயில்லையம்மா. அதுவும் கல்விப் பொதுத்தராதர சாதாரணப் பரீட்சையில் நல்ல படியாக சித்தியடைவதை பார் எனக்கு ஒவ்வொரு நாளும் இப்படி கஷ்டப்பட உடம்பில் சக்தி இல்லை” என்று மகளுக்கு புரியும் விதமாக எடுத்துக் கூறினாள்.
எனினும் தாய் பியந்தியின் அறிவுரைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் பயனற்றதாகவே இருந்தது. அவள் அதன் பின்பும் அமிதவுடனான காதலை தொலைபேசி ஊடாக தொடர்ந்த வண்ணமே இருந்தாள்.
யாருடைய அறிவுரையையும் அவள் காதில் வாங்கிக் கொள்ளும் நிலையில் இருக்க வில்லை. மனம் பிடிவாதமாய் அவன் மட்டுமே வேண்டும் என்பதை அழுத்தமாக உணர்த்தியது.
அதற்கு அவள் வயதும் ஒரு காரணம். காதல் என்ற போதையில் கல்வி என்னும் அரிய செல்வத்தையும் தவற விட்டாள்.
கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சை நெருங்கி கொண்டிருந்த போதும் அதற்காக பெரிதாய் அவளை தயார் படுத்திக் கொள்ளவும் இல்லை. அதுவே பியந்திக்கு பெரும் மனக் கஷ்டத்தை ஏற்படுத்தியது. இத்தனை வருடம் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் வீணாகப் போகின்றதே என்று உள்ளுக்குள் குமுறினாள்.
எது எவ்வாறாயினும் அவளின் பரீட்சையும் நெருங்கியது. கடந்த 15ஆம் திகதி திங்கட்கிழமை பரீட்சைக்காக சென்றதுடன், மறக்காமல் கையடக்க தொலைபேசியையும் கையோடு எடுத்து சென்றாள்.
அன்றைய தினம் பரீட்சை முடிந்தவுடன் அமிதவும் லக்ஷனியும் சந்திப்பதற்கு திட்டமிட்டிருந்தார்கள். இதை எப்படியோ தாய் பியந்தி அறிந்துக் கொண்டு பரீட்சை முடிந்தவுடன் பரீட்சை மண்டபத்துக்குள் நுழைந்தாள்.
எனினும், இருவரும் தாயின் வருகை பற்றி அறிந்திருக்க வில்லை. பியந்தி ஒரு ஓரமாக நின்று தன் மகள் லக் ஷனியின் நடவடிக்கைகளை அவதானித்தாள்.
பரீட்சை முடிந்தவுடனே பரீட்சை நிலையத்திலிருந்து வெளியில் வந்த லக் ஷனி விரைவாக தன் காதலனான அமிதவை சந்திக்க சென்றிருக்கிறாள்.
இருவரும் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கும் போதே தாய் பியந்தி இருவரின் முன்னும் தோன்ற இருவரும் பயத்தில் செய்வதறியாது தவித்தனர்.
இருவரையும் தகாத வார்த்தைகளினால் திட்டித் தீர்ந்தாள். அமித தான் காதலிக்கும் பெண்ணின் தாய், ஒரு காலத்தில் தனக்கு மாமியாராக வரப்போகின்றவள் என்றெல்லாம் பார்ப்பதை விட வயதில் பெரியவர் என்ற மதிப்பும், மரியாதையும் கூட இல்லாமல் அவனும் பதிலுக்கு பியந்தியை திட்டியிருக்கிறான்.
சிறு வயதிலேயே கணவனை இழந்து அடுப்பங்கரை வாழ்வோடு போராடி கடை கடையாய் ஏறி இறங்கி, ஏச்சு பேச்சுகளை வாங்கி வியாபாரம் செய்து கண்ணுக்கு அழகாய் எந்தக் குறையும் இல்லாமல் மூன்று பெண் குழந்தைகளை வளர்த்தெடுத்தவளுக்கு இன்று எவனோ ஒருவன் தெருவில் வைத்து தகாத வார்த்தைகளால் தூற்றுகின்றான்.
மகளும் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாள். உண்மையில் அவள் ஒரு பாவப்பட்ட பரிதாபத்துக்குரிய தாய் தான். தொடர்ந்து அங்கு நிற்பதை விரும்பாத பியந்தி மிகுந்த ஆவேசத்துடன் லக் ஷனியின் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
வந்த வேகத்தில் தனக்கிருந்த ஒட்டுமொத்த கோபத்தையும் லக் ஷனியின் மீது காட்டியதுடன் மன வேதனையில் அழுது புலம்பினாள்” எனக்கென்றால் முடியாது கஷ்டப்பட்டு உங்களை வளர்த்து ஆளாக்கியதற்கு எந்தப் பயனும் இல்லை.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இனிமேலும் எனக்கு வாழ விரும்பமில்லை நான் செத்துப் போனவுடன் நீ நினைப்பது போல் விரும்பியவாறு வாழலாம். நான் தானே உனக்கு தடையாக இருக்கின்றேன்” என்று அழுது புலம்பினாள்.
தனது கணவனை பிரிந்து வாழ்ந்த எட்டு வருட வாழ்க்கையில் குழந்தைகளுக்காகவென்று வெளிக் காட்டாமல் தனது ஆழ் மனதில் புதைத்து வைத்த ஆசைகளினதும், ஏமாற்றங்களினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடாகவே அந்த புலம்பல் அமைந்திருந்தது.
எனினும், தாயின் அந்தக் கண்ணீரைப் பார்த்த பின்பும் பிடிவாதக் கார மகளுக்கு அவள் காதலனும், காதலுமே பெரிதாய் தெரிந்தது.
அன்று நடந்த சம்பவங்களை நினைத்தால் இனி எந்தக் காலத்திலும் எங்களுடைய காதலை தொடர தாய் அனுமதிக்க மாட்டாள், எங்களை சேர்த்து வைக்கவும் மாட்டாள் பிறகு நான் எப்படி அவன் இன்றிய வாழ்க்கையை வாழ்வது” என்று முட்டாள்தனமான எண்ணங்களை உருவாக்கி கொண்டாள்.
அதற்கான தீர்வு தன்னைத் தானே மாய்த்துக் கொள்வது தான் என்று தவறான முடிவினை எடுத்து அதற்கான வழியையும் திட்டமிட்டாள்.
அதன் படி அவளின் தாய் பியந்தி தனது நோய்க்கு தினமும் உபயோகப்படுத்தும் மருந்து வில்லைகள் எல்லாவற்றையும் லக் ஷனி உட்கொண்டாள்.
சிறிது நேரத்தில் உடல் செயலிழந்த நிலையை அடைய ஆரம்பிக்க வீட்டிலிருந்து வெளியில் செல்ல முயற்சித்தாள். எனினும் அவளால் செல்ல இயலாமல் வீட்டுக்குள் மயங்கி விழுந்தாள்.
வெளியில் ஒரு வேலையாய் சென்று வீட்டுக்குள் வந்த பியந்தி தன் மகள் மருந்துகளை உட்கொண்டு மூச்சுப் பேச்சின்றி கிடப்பதை கண்டதும் பெற்ற மனம் பதற ஆரம்பித்தது. பெரும் சத்தத்துடன் அயலவர்களை உதவிக்கு அழைத்தாள்.
உடனடியாக வந்த அயலவர்கள் பியந்தியிடம் “நீ பயப்படாத நாங்க மகளை வைத்தியசாலைக்கு அழைத்து செல்கின்றோம் நீ சின்னவளுடன் வீட்டில் இரு” என ஆறுதல்படுத்தி விட்டு லக்ஷனியை வாகனத்தில் ஏற்றி அருகில் இருந்த வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
சம்பவம் நடைபெறும் போது மாலை 6.30 மணி இருக்கும். “லக் ஷனியை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு அயலவர்கள் கிராமத்துக்கு வரும் போது இரவு 7.00 மணியை தாண்டியிருக்கும்” லக் ஷனியை வைத்தியசாலையில் அனுமதித்ததையும், அவள் உடல் நிலை பற்றியும் கூற பியந்தியின் வீட்டுக்கு சென்ற அயலவர்களுக்கு வீடு இருந்த சூழ்நிலை சந்தேகத்துக்கிடமாக இருந்தது.
அந்த வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதையே உணர்த்தியது. அவர்களின் சந்தேகத்துக்கு ஏற்றாற் போல் வீட்டில் மின் விளக்குகள் யாவும் எரிந்த நிலையில் வைத்தியசாலைக்கு போகும் போது இருந்த பியந்தியையும் அவளின் சிறிய மகள் திஸ்மினியையும் காணவில்லை.
எனவே பதற்றத் துடன் பெயர் சொல்லி அழைத்தவாறே வீட்டை சுற்றி தேடினார்கள். எங்கே இவர் கள்? எனினும் எல்லா இடங்களிலும் தேடியவர்கள் வீட்டின் பின் பக்கம் இருந்த கிணற்றில் சென்று பார்க்கவில்லை.
சிறிது நேரத்தின் பின் திடீரென சந்தேகம் ஏற்பட தான் எதற்கும் பார்ப்போம் என்று அயலவர் ஒருவர் கிணற்றை எட்டி பார்த்திருக்கின்றார். அங்கு சதா நெருப்போடு போராடி வெந்து எழும்பும் அந்த தாயும் கள்ள கபடமற்ற அந்த சிறிய குழந்தையும் நீரில் மிதந்தவாறு காணப்பட்டார்கள்.
சம்பவத்தை கண்ட அயலவர்கள் பொலிஸ் அவசர அழைப்பு (119) பிரிவுக்கு தொடர்பு கொண்டு சம்பவத்தை தெரிவிக்க அந்த நேரமே பிடிகல பொலிஸார் அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வரும் போது இரவு 8.00 மணி இருக்கும்.
வந்தவர்கள் அந்த நேரமே கிராமத்தவர்களுடன் இணைந்து இருவரின் சடலங்களையும் கிணற்றிலிருந்து எடுக்க முயற்சி செய்ததுடன், மரண விசாரணையையும் மேற்கொண்டனர்.
அயலவர்கள் இருவர் கிணற்றுக்குள் இறங்கி சடலங்களை எடுக்க உதவி செய்துள்ளனர். பின் தாயினதும் மகளினதும் சடலங்களை வெளியில் எடுத்து எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிந்தவுடன் பியந்தியின் சகோதரி இறுதி சடங்குகளுக்காக பிரேதங்களை பொறுப்பேற்றுக் கொண்டாள்.
மரணித்து போன பியந்திக்கு 40வயது இருக்கும். அதே போல் அவளது கடைசி மகளுக்கு 10வயது இருக்கும். வாழ வேண்டிய வயதில் இவர்கள் சாவை அரவணைத் துக் கொண்டார்கள்.
ஆசையாக வளர்த்த மகள் தன்னை பெற்ற தாய்க்கு கடைசியில் தேடிக் கொடுத்த மிகப் பெரிய கௌரவம் இது தான்.
இது எல்லா பிள்ளைகளுக்கும் சிறந்த படிப்பினையாக அமைகின்றது உங்கள் உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும் மதிப்பு கொடுக்கும் நீங் கள் உங்களுக்காகவே வாழும் பெற்றவர்களின் ஆசைகளையும் சற்று எண்ணிப் பாருங்கள்.
பிள்ளைகளுக்காகவே கஷ்டப்பட்டு மனம் வெறுத்துப்போன நிலையில் தான் வாழ விரும்பாமல் பியந்தி தன் வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்ததுடன், கடைசி மகளையும் கையோடு அழைத்து கொண்டு இறுதி பயணத்தை நோக்கிச் சென்றுவிட்டாள்.
காதலன் இல்லாமல் வாழ்வு இல்லை என்று அவனுக்காக பெற்ற தாய் சகோதரிகளை விட்டு இறுதி யாத்திரை செல்ல முடிவெடுத்து மருந்து வில்லைகளை ஒரு தொகையாக அருந்திய லக் ஷனி ஒருவாறு உயிர் பிழைத்தாள்.
இனி அவள் உயிர் வாழ்ந்து தான் என்ன பயன்? மரண தண்டனையை விட மிகப் பெரிய தண்டனையையும், வலியையும் அவளது தாயும், சகோதரியும் கொடுத்து விட்டார்கள்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் போதே தன் தாயினதும், சகோதரியினதும் இறுதி சடங்குகளுக்காக சென்று வந்திருக்கிறாள் லக் ஷனி.
அதேவேளை, முற்றாக குணமடைந்து வீட்டுக்கு சென்றவளுக்கு வீட்டில் அள்ளி அணைத்து முத்தமிட, பார்த்து பார்த்து எல்லாம் செய்ய, தவறு செய்யும் போது தட்டிக் கேட்க தாயும் இல்லை.
ஆசையாய் சண்டை போட்டுக் கொள்ள தங்கையும் இல்லை….. இனி அவர்கள் வீட்டுக்கு வரப்போவதும் இல்லை இறுதியில் தனி மைப்படுத்தப்பட்டது அவள் தான்.