பிரான்ஸ் நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஐஸ்கட்டி மழை பெய்து வருவதால் அந்நாட்டின் சாலைகளில் 50செமி வரை பனி உறைந்து காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து தடைபட்டு சுமார் 15000 வாகனங்கள் ஆங்காங்கே நகர முடியாமல் தவித்து வருகின்றன.
பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று திடீரென அதிகளவில் ஐஸ் கட்டி மழை பெய்தது.
இதனால் சுற்றுலாப்பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஆங்காங்கே தடைபட்டு நின்றதால் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக ஆங்காங்கே தற்காலிக முகாம்களை பிரான்ஸ் அதிகாரிகள் அமைத்து கொடுத்து வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டின் சவாய் என்ற பகுதியில் உள்ள விமான நிலையம் கனமழை காரணமாக மூடப்பட்டது. ஐஸ்கட்டி மழை காரணமாக பொதுமக்கள் தங்கள் வாகனங்களை கவனமாக ஓட்டிச் செல்லுமாறும், முடிந்த அளவிற்கு பயணத்தை தவிர்குமாறும் பிரான்ஸ் உள்துறை மந்திரி பெர்னார்டு கசேநெவ் அறிவுரை கூறியுள்ளார்.
சாம்பெரி விமான நிலையத்தில் பிரிட்டிஷ் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் இரண்டாயிரம் பேர் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்லமுடியாமல் தவித்தனர்.