எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்கிற கடுமையான சமிக்ஞையையும் அது மக்களுக்கு தெரிவித்தது.
அதற்குப் பதிலடி கொடுக்கம் விதமாக கருணா சில வீடுகளில் அதிகாலை சோதனைகளை நடத்தி சந்தேகத்துக்கு இடமான எல்.ரீ.ரீ.ஈ புலனாய்வு செயற்பாட்டாளர்கள் சிலரைக் கைது செய்தார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களை மட்டக்களப்பிலிருந்து விரட்டும்படியான பிரச்சாரம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. தனது கடுமையான பிராந்திய மனப்போக்கு காரணமாக யாழ்ப்பாணத் தமிழர்கள் அனைவரையும் முக்கியமான எதிரிகளாக கருணா கருதினார்.
2004 ஏப்ரல் 2ல் தேர்தல் நடைபெற்று 22 ரி.என்.ஏ அங்கத்தவர்களுடன் ஒரு புதிய பாராளுமன்றம் தெரிவானது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட புலி எதிர் புலி மோதல் கிழ்கில் வெகு விரைவில் இடம்பெறப் போகிறது என்பது இப்போது வெளிப்படையாகத் தெரிந்தது.
கிழக்கின் அடிவானத்தில் அந்த தாக்குதல் நாள் எப்போது உதயமாகப் போகிறது? என்பது பலகோடி பெறுமதியான ஒரு கேள்வியாக இருந்தது. அந்த நாள் தேர்தல் முடிவடைந்து சரியாக ஒரு வாரத்தின் பின் ஏப்ரல் 9 ந்திகதி வந்தது.
எல்.ரீ.ரீ.ஈ தாக்குதலை ஆரம்பிக்க 2004 ஏப்ரல் 9ந் திகதியை தெரிவு செய்தது எதனால் என்றால் அன்றைய தினம் பெரிய வெள்ளி தினமாக இருந்தபடியால்தான் என்று சிலர் நினைத்திருக்கலாம்.
பெரிய வெள்ளி தினத்தில் ஒரு தாக்குதலை தொடுத்து கிறீஸ்தவர்களி;ன் உணர்வுகளை பாதிக்கத்தக்க செயலை எல்.ரீ.ரீ.ஈ செய்வதற்கான சாத்தியக்கூறு அசாத்தியமான ஒன்று. மேலும் எல்.ரீ.ரீ.ஈ வெளிப்படையாகவே இதை நிராகரித்தது.
எல்.ரீ.ரீ.ஈயி;ன் நடவடிக்கை பல முனைகளிலும் இருந்தும் ஆரம்பிக்கப்பட்டது, மற்றும் ஏப்ரல் 9 அதிகாலை 1.30 மணிக்கு ஆரம்பமானது. கருணா தனது 600 அங்கத்தவர்களை 30 அணிகளாக வெருகல் ஆற்றின் தென் பகுதியின் பல்வேறு இடங்களிலும் நிறுத்தினார்.
புலிகளின் படையணி ஒன்று கடல்வழியாக வந்து வெருகல் முகத்துவாரத்தின் தென்பகுதியில் இறங்கி உள்நோக்கி நகர்ந்தது. அதே நேரத்தில் ஒரு புலிகள் குழுவினர் தாங்கள் சரணடையப் போவதாகச் சொல்லிக் கொண்டு அவர்கள் முன் வந்தார்கள்.
இதில் கருணாவிடமிருந்து முன்னர் கட்சி மாறிய சில மூத்த அங்கத்தவர்களும் உட்பட்டிருந்தார்கள். கருணாவின் சில அங்கத்தவர்கள் இந்த மூத்த உறுப்பினர்களிடம் பயிற்சி பெற்றிருந்தார்கள் மற்றும் அவர்கள் தங்கள் முன்னாள் குருமார்கள் மற்றும் அண்ணாக்களை கண்டதும் அவர்களை வரவேற்றார்கள்.
ஆனால் எல்.ரீ.ரீ.ஈ ஆட்கள் சந்தேகத்துக்கு இடம் வைக்காமல் கருணா ஆட்கள் மீது திடீரென துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு படகுத்துறையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் மேலும் புலிகள் அங்கு வர ஆரம்பித்தார்கள் கடற்பக்கமிருந்தும் புலிகள் உள்நோக்கி வரத்தொடங்கினார்கள்.
வெருகல் ஆறு
அதன்பின் யுத்தம் ஆரம்பமானது. கிழக்குப் பிராந்திய அங்கத்தவர்கள் பெரும்பாலும் தங்கள் பதின்ம வயதுகளிலேயே இருந்தார்கள், எல்.ரீ.ரீ.ஈயுடன் போட்டியிடுவதற்கு அவர்கள் பொருத்தமற்றவர்களாக இருந்தார்கள்.
கருணாவின் வசமிருந்த வெருகல் ஆற்றின் வழியே நிறுத்தப்பட்டிருந்த குறைந்தது எட்டு 120 மி;மீ துப்பாக்கிகள் கமாண்டோ வகை தாக்குதல் மூலமாக கைப்பற்றப் பட்டன.
பின்னர் எல்.ரீ.ரீ.ஈயினர், கருணாவின் கோட்டைகளை நோக்கிப் பாயத்தக்க விதமாக துப்பாக்கிகளை நிறுத்தி ஒரு நிலையான ஆட்டிலறி தளத்தை தக்க வைத்துக் கொண்டார்கள்.
கருணாவின் கட்டளைக் கட்டுப்பாட்டு முறையும் நிலைகுலைந்து போனது. 50 படகுகளைக் கொண்ட எல்.ரீ.ரீ.ஈயின் ஒரு சிறுகப்பல்படை கதிரவெளி மற்றும் வாகரை என்பனவற்றுக்கு இடைப்பட்ட கடலோரப் பகுதியில் அமைந்துள்ள பால்சேனை என்கிற இடத்தில் வந்து தரையிறங்கியது.
அந்த வீரர்களுக்கு தலைமையேற்று வந்தவர் கருணாவின் முன்னாள் துணைத் தலைவராக இருந்த ரமேஸ். அவர்கள் பால்சேனையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அங்கிருந்து வடக்கு மற்றும் தெற்கு நோக்கி இரு அணிகளாக முன்னேறத் தெடங்கினார்கள்.
ஒரு படைப்பிரிவினர் கதிரவெளியை பிடித்ததுடன் மற்றவர்கள் வாகரைக்கு அருகில் உள்ள கண்டலடி தளத்தை கைப்பற்றினார்கள். இது கருணாவின் செயற்பாட்டு தலைமையகமாக அவரது சொந்த சகோதரரான றெஜி என்கிற சிவனேசதுரையின் பொறுப்பில் இருந்தது. வெளிப்படையாக ஆச்சரியத்துக்கு உள்ளான றெஜி காயங்களுக்கு உள்ளான பின்னர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
எல்.ரீ.ரீ.ஈ அந்த இடத்துக்குள் சிறிய படகுகள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலமாக ஆயுதங்களுடன் ஊடுருவத் தொடங்கினார்கள். ஆயுதமின்றி ஊடுருவியவர்களும் இப்போது ஆயுதங்களை சேகரித்துக்கொண்டு தாக்குதலில் இணைந்தார்கள்.
இது பிரபாகரனின் ஆட்களுக்கு பின்புறமாக இருந்து ஒரு தாக்கதலைத் தொடுக்க வசதியாக அமைந்தது. இதன்படி கருணாவின் ஆட்கள் மூன்று பக்கமும் அடைபட்டுப் போனார்கள்.
ஊடுருவல்காரர்கள் திறமையான ஐந்தாம் படையினரைப்போல செயல்பட்டு, கருணாவின் அங்கத்தவர்களின் இயக்கத்தை தடுப்பதற்காக உள்ளக வீதிகள் நெடுக நிலக்கண்ணி வெடிகளை புதைத்து வைத்தார்கள்.
கண்ணிவெடிகள் வெடித்ததினால் அநேக பொதுமக்கள் கூட கொல்லப்பட்டதுடன் பலர் காயங்களுக்கும் உள்ளானார்கள்.
வெருகலில் நடந்த சண்டை ஆரம்பத்தில் காட்டுமிராண்டித் தனமாக இருந்தது. இது ஒரு இரத்தம் சிந்தாத வெற்றி என்று எல்.ரீ.ரீ.ஈ கூறி இழப்புகளை வெளிப்படுத்தாவிட்டாலும் பலப்பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.
வெருகல் பகுதியில் சண்டயிட்டுக் கொண்டிருந்த கருணா பிரிவு குழவினரில் அநேகர் தங்கள் மேலதிகாரிகளிடமிருந்து கட்டளைகள் எதுவும் கிடைக்காததால் சரணடையத் தொடங்கினார்கள்.
எதிர்ப்பு வழங்கியதற்காக அவர்களில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இது மற்றவர்களை அச்சப்பட வைத்தது, அதன் காரணமாக அவர்கள் எதிர்ப்பேதும் காட்டாமலேயே சரணடையத் தொடங்கினார்கள்.
சிலர் சுற்றி வளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அத்தகைய படுகொலைகள் வாகரையில் கூட கருணாவின் அங்கத்தவர்கள்மீது மேற்கொள்ளப்பட்டது.
கட்டுப்பாடு
ஏப்பரல் 9 மாலையளவில் எல்.ரீ.ரீ.ஈ சிறியதும் பெரியதுமான எட்டு முகாம்கள் உட்பட வெருகல் – கதிரவெளி – வாகரை பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
கொல்லப்பட்டவர்களைத் தவிர கருணா அங்கத்தவர்களில் குறைந்தது 500 பேராவது சரணடைந்தார்கள். இவர்களில் 269 சிறுவர் போராளிகள் அந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்திடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.
ஏப்ரல் 9 இரவு நேரத்தில்; எல்.ரீ.ரீ.ஈ கட்டுப்பாட்டின் கீழிருந்த கண்டலடி மற்றும் வாகரையில் அமைந்துள்ள பிரதான தளங்களுக்கு எதிராக கருணாவால் இரண்டு எதிர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
அவையிரண்டும் முறையே றொபேட் மற்றும் ஜெம் கெலி தாத்தா ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டன. புலிகள் கனரக துப்பாக்கிகளின் உதவியினால் தாக்குதலாளிகளை திருப்பி அடித்தார்கள்.
கருணா தனது தந்திரத்தை மாற்றிக்கொண்டு அந்த இடத்தை விட்டு பின்வாங்கும்படி தனது அங்கத்தவர்களைக் கேட்டுக் கொண்டார். அவர்கள் உட்புறமாக இருந்த முகாம்களை நோக்கி செல்லும்படி கேட்கப்பட்டார்கள்.
இது தறவை – வடமுனை – குடும்பிமலை பிரதேசம் மற்றும் மேற்கு கடலோரத்தில் அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை – கரடியனாறு பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
எனினும் எல்.ரீ.ரீ.ஈ பின்தொடர்ந்து சென்று 10ம் திகதி சனிக்கிழமையளவில் வாவியின் மேற்கு கரையோரமாக அமைந்துள்ள படுவான்கரை பிரதேசத்தில் உள்ள பல பகுதிகளுக்குள்ளும் நுழைந்தார்கள்.
தொப்பிக்கல் என அழைக்கப்படும் தறவை – வடமுனை – குடும்பிமலை பகுதியில் ஆகக்குறைந்தது இரண்டு தீடீர் தாக்குதல்களாவது நடத்தப் பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் எல்.ரீ.ரீ.ஈயின் மற்றொரு அணியை சேர்ந்த அங்கத்தவர்கள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் கரையை வந்தடைந்தார்கள். அவர்கள் முதலில் காட்டுக்குள் இருந்த புகழ்பெற்ற கஞ்சிக்குடிச்சாறு தளத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.
மோதலில் ஈடுபடாமல் 350 க்கும் மேற்பட்ட கருணாவின் போராளிகள் அம்பாறையில் இருந்து மட்டக்களப்புக்கு தப்பி ஓடியதனால் எல்.ரீ.ரீ.ஈ யினர் சுலபமாக கட்டுப்பாட்டை நிறுவினார்கள்.
எஞ்சியிருந்த அங்கத்தவர்களும் சுலபமாக கட்சி மாறினார்கள். விரைவிலேயே பல்லினப் பிரதேசமாகிய அம்பாறையின் பெரும்பாலான தமிழ் பகுதிகளின் கட்டுப்பாட்டை எல்.ரீ.ரீ.ஈ தன் வசமாக்கிக் கொண்டதுடன் தெற்கிலிருந்து மேற்கத்தைய கடற்கரைக்கு பின்புறமுள்ள நிலப் பகுதியூடாக நகரவும் தொடங்கியது.
பாதுகாப்பான காப்பிடம்
கருணாவின் அரசியல் தலைமையகமான தேனகம் கரடியனாற்றிலும், மற்றும் இரணுவத் தலைமையகம் மீனகம் தறவையிலும் இருந்தன. அவரது சொந்த காட்டு மறைவிடமான மருதம் குடும்பி மலையிலும் இருந்தது.
எனவே கருணா தன்னை பலப்படுத்துவதற்காக இந்தப் பிரதேசங்களிலுள்ள மறைவிடங்களில் பதுங்கி இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
நீண்ட காலம் இழுபடும் போhராட்டம் பாரதுரமான போக்குவரத்து மற்றும் பொருட்களை ஏற்றி இறக்கும் சிரமங்களை ஏற்படுத்தும் என்பது கருணாவுக்கு தெளிவாகத் தெரிந்தது.
ஸ்ரீலங்கா ஆயுதப் படைகள் மற்றும் நோர்வே அனுசரணையாளர்கள் தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை மேலும் தடுக்கப் போவதில்லை என்றும் தோன்றியது.
எல்.ரீ.ரீ.ஈ மெதுவாக உள்ளே ஊடுருவி வருவதனால் தொடர்ச்சியான உணவு மற்றும் ஆயுத வினியோகம் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கப் போகிறது என்பதும் தெரிந்தது.
சகோதர யுத்தத்தை தொடர்ந்து நடத்துவதைப் பற்றி கருணா அணியினரிடத்தில் வலுவான எதிர்ப்பு இருந்தது. எதிரி சிங்கள இராணுவமோ அல்லது வடக்குப் புலிகளோ இல்லை, ஆனால் அவர்களுடைய சொந்த பந்தங்கள்.
கருணாவின் அங்கத்தவர்களின் பெற்றோர்களிடமிருந்து மோதலை நிறுத்தும்படி கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. எனவே கருணா யுத்தத்தை கைவிடத் தீர்மானித்தார்.
ஸ்ரீலங்காவிலும் மற்றும் வெளிநாட்டிலும் உள்ள அக்கறையுள்ள நபர்கள் இடைத் தரகர்களாக பங்கேற்றார்கள். எல்.ரீ.ரீ.ஈ கூட போரை நிறுத்துவதைத்தான் விரும்பியது, ஏனெனில் நீடித்து நடக்கும் போரின் ஆபத்துக்களை அது உணர்ந்திருந்தது.
கிழக்கு மக்கள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஆகிய இருதரப்பினரதும் நலன்களில் கொண்ட அக்கறை காரணமாக இந்த நெருக்கடியை நிறுத்துவதற்கு முயற்சி செய்த ஸ்ரீலங்கா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அநேக மக்களின் கூட்டு முயற்சியால் ஒரு உடன்பாடு ஏற்படுவது சாத்தியமாயிற்று.
இரு தரப்பையும் சேர்ந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் உயிர்கள்,கட்டாய ஆட்சேர்ப்புக்கு உள்ளான சிறுவர் போராளிகள் பத்திரமாக வீடு திரும்புதல், பாதுகாப்பு மற்றும் அமைதியான பொதுமக்களின் வாழ்க்கை, மற்றம் கிழக்கின் மீது ஏற்பட்டுள்ள ஒட்டு மொத்த தாக்கம் என்பன பற்றிய பிரச்சினைகள் இடர் நிலையிலிருந்தன.
திட்டமிட்ட ஏற்பாடுகளின்படி கருணா சில குறிப்பிட்ட உறுதிமொழிகளை வழங்கி அதை நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவையாவன
1. போராட்டத்தை நிரந்தரமாக நிறுத்துதல்,
2. தனது படைகளை விலக்கி மற்றும் அவைகளை கலைத்து அவர்களை வீட்டுக்கு அனுப்புதல்,
3. ஆயுதங்கள், படைக்கலங்கள் மற்றும் படைத் தளவாடங்கள் உட்பட இராணுவ சொத்துக்களை எல்.ரீ.ரீ.ஈ யிடம் சுமுகமாக கையளிக்கும் ஏற்பாடுகளுக்கு அனுசரணை வழங்குதல்,
4. கருணாவின் காவலில் உள்ள புலிகள் மற்றும் ஆதரவாளர்களை பாதுகாப்பாக விடுதலை செய்தல்,
5. தமிழ் ஈழ மண்ணை (வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை) விட்டு உடனடியாக வெளியேறுவதுடன் ஒருபோதும் அங்கு திரும்ப வரக்கூடாது,
6. எதிர்காலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இராணுவ அல்லது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடாது ஒதுங்கியிருத்தல்,
7. எல்.ரீ.ரீ.ஈ தொடர்பான சகல விடயங்கள் பற்றியும் மௌனம் பாலிப்பதுடன், ஊடகங்கள் தொடர்பான விளம்பரங்களை தவிர்த்துக் கொள்ளல்.
8. வெகு விரைவில் ஸ்ரீலங்காவுக்கு வெளியே ஒரு புதிய வாழ்க்கையை தேடுதல்.
இதற்குப் பதிலாக எல்.ரீ.ரீ.ஈ கீழ்கண்ட உறுதிகளை கருணாவுக்கு வழங்கியது.
1. கிழக்கை விட்டோ அல்லது ஸ்ரீலங்காவை விட்டோ கருணா வெளியேறுவதை தடை செய்யப் போவதில்லை,
2. ஸ்ரீலங்காவிலோ அல்லது வெளிநாட்டிலோ அவர் உள்ளபோது அவரை அகற்றும் முயற்சியில் இறங்குவதில்லை,
3. கருணாவால் எடுத்துக் கொள்ளப்பட்ட பணம் மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை திரும்ப ஒப்படைக்கும்படி கேட்பதில்லை,
4. கருணாவின் கட்டுப்பாட்டின் கீழிருந்த அனைத்து அங்கத்தவர்களுக்கும் தீங்கு இழைக்காததுடன் அவர்கள் ஒரு இயல்பு வாழ்க்கையை தொடர அனுமதித்தல்,
5. அந்த அங்கத்தவர்களில் விருப்பம் உள்ளவர்களை மாத்திரம் திரும்பவும் இயக்கத்தில் இணைப்பது,
6. எல்.ரீ.ரீ.ஈ தலைமைக்கு எதிராக கருணாவுடன் நின்ற மூத்த அங்கத்தவர்கள் அவைரையும் தண்டிப்பதிலிருந்து விலகி இருத்தல்,
7. கிழக்கை விட்டோ அல்லது ஸ்ரீலங்காவை விட்டோ சாத்தியமான எந்த இடத்துக்கும் செல்ல அவர்களை அனுமதிப்பது,
8. கருணாவுக்கு ஆதரவு தெரிவித்த மற்றும் கொடும்பாவிகளை எரித்தல், எல்.ரீ.ரீ.ஈ அலுவலகங்களுக்கு தீ வைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட கிழக்குப் பகுதி பொதுமக்களை பழிவாங்காமல் விலகி இருத்தல்,
வாய்மூலமான உறுதிமொழிகள் இரு தரப்பினராலும் வழங்கப்பட்டன. தனது அமைப்பை கலைத்துவிட்டு வெளியேறுவதாக கருணா ஒரு கடிதத்தை கிளிநொச்சிக்கு தொலை நகல் மூலம் அனுப்பினார்.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததும் கருணா தனது பிரிவைக் கலைத்து கிட்டத்தட்ட 3,500 முதல் 4,000 வரையான அங்கத்தவர்களை விடுவித்து,வீடு சென்று சாதாரண வாழ்க்கையை தொடரும்படி கேட்டுக்கொண்டார்.
ஆயுதங்கள்,சீருடைகள்,சயனைட் வில்லைகள், அடையாள அட்டைகள் போன்றவை அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன. எனவே 11 ந்திகதி ஞாயிறு மற்றும் 12 ந்திகதி திங்கள் ஆகிய தினங்களில் 3,500 க்கும் அதிகமான அங்கத்தவர்கள் முகாமை விட்டு வெளியேறுவதை காணக்கூடியதாக இருந்தது.
கடைசியாக செல்லவேண்டி இருந்தவர்கள் மீனகத்தில் இருந்த 400 பெண்கள் மட்டுமே. கருணா அவர்களை வரிசையாக நிறுத்தி வீட்டுக்கு செல்லும்படி கேட்டுக் கொண்டபோது, கருணா தங்கள் விசுவாசத்தை சோதிக்கிறார் என நினைத்து அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். தனது ஆபத்தான நிலையை அவர்களுக்கு விளக்கிய கருணா சில கையெறி குண்டுகளை வெடிக்க வைத்து தனது அங்கத்தவர்களை சிதறியோட வைத்தார்.
கொழும்பு
அதன் பின் கருணா தனக்கு நம்பிக்கையான 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் மற்றும் அவர்களின் சில குடும்ப நண்பர்களுடனும் சோந்து 6 வாகனங்களில் வீதி வழியாக கொழும்பின் புறநகரப் பகுதி ஒன்றுக்குப் பயணமானார்.
அவருக்குத் துணையாக முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினரும் அவரது குடும்ப நண்பருமான அலி சாகிர் மௌலானவும் உடன் சென்றார்.
புலிகளின் உட்பூசலால் ஏற்பட்ட போரை முடிவுக்கு கொண்டுவர உதவிய ஏற்பாடுகள் தவிர, அதன் காரணாக உருவான உடன்படிக்கை எல்.ரீ.ரீ.ஈ யினரால் மீறப்பட்டது, கிழக்கிலும் மற்றும் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதி உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இருந்த கருணா விசுவாசிகளை அது இலக்கு வைக்க ஆரம்பித்தது.
பாதுகாப்பு மற்றும் கருணை சம்பந்தமான உத்தரவாதங்கள் வழஙகப்பட்டதின் பேரில் எல்.ரீ.ரீ.ஈயிடம் சரணடைந்த கருணாவின் சில மூத்த உதவியாளர்கள் வன்னியில் வைத்து கொடூரமான முறையில் தடயமே இல்லாமல் அழித்தொழிக்கப் பட்டார்கள்.
ஒரு கட்டத்தில் கருணாவின் ஒரே சகோதரான றெஜி என்கிற சிவனேசதுரையும் கிழக்கில் வைத்துக் கொல்லப்பட்டார். கருணாவின் சில உயர்மட்ட உதவியாளர்கள் கொட்டாவா பகுதியில் உள்ள மறைவிடம் ஒன்றில் வைத்து கொல்லப்பட்டார்கள்.
எல்.ரீ.ரீ.ஈ யின் துரோகம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட முன்னேற்றங்கள், கருணா மற்றும் எஞ்சியிருந்த அவரது அங்கத்தவர்கள் ஆகியோரை அரச பாதுகாப்பு இயந்திரங்களிடம் தஞ்சம் கோரும் நிலைக்குத் தள்ளிவிட்டன. இந்த சுய பாதுகாப்பு நடவடிக்கைகள் அவர்களது உயிர்களைக் காப்பாற்ற உதவியது.
நாளடைவில் கருணா குழுவினர் ரி.எம்.வி.பி என்கிற மீள் குழுவாக ஒன்றிணைந்து பாதுகாப்பு படைகளுடன் தீவிரமாக இணைந்து பணியாற்றினார்கள். இறுதியாக எல்.ரீ.ரீ.ஈ தோற்கடிக்கப்பட்டது. ரி.எம்.வி.பி இப்போது ஆளும் தரப்பினரின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது. கருணா தொடர்ந்தும் ரி.எம்.வி.பி யில் அங்கம் வகிக்கவில்லை ஆனால் அவர் இப்போது பிரதி அமைச்சராகவும் ஸ்ரீ.ல.சு.க வின் உப தலைவராகவும் உள்ளார்.
(இதுதான் 14 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த புலிகள் எதிர் புலிகள் யுத்தத்தின் அப்போதைய கதை. ஊடகவியளாளர் டி.பி.எஸ் ஜெயராஜ் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை மீள்பிரசும் செய்யப்படுகிறது.)
புலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி!!) -பகுதி-1
புலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி!!) -பகுதி-2