இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ராதா படையணியின் முக்கியஸ்தரும் புலிகளின் விமானிகளில் ஒருவர் என கருதப்படுபவருமான தேவியன் எனப்படும் விடுதலைப் புலிகளின் பெயரில் அறியப்படும் பிரதானி இலங்கைக்கு மீண்டும் வந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் அவரை கைது செய்ய விஷேட நடவடிக்கைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புலிகளின் முன்னாள் நிதிப் பொறுப்பாளர் உட்பட நால்வர் கைது..!!
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பிரதேசத்தில் 21-01-2010 அன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (TMVP) கட்சி உறுப்பினர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்தர் உட்பட நான்கு பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்யதுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை இவர்களை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தன்னாமுனை களப்பு பகுதியில் 23-01-2010அன்று கழுத்து வெட்டப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினரான அரவிந்தன் என்பவரது சடலம் மீட்கப்பட்டதுடன் அது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் தன்னாமுனையினை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதிப்பொறுப்பாளராக முன்னர் செயற்பட்டவர் உட்பட மேலும் இருவரை பொலிஸார் கைது செய்தனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதிப்பொறுப்பாளராக முன்னர் செயற்பட்டுவந்த வசந்தகுமார் என்பவர் கழுத்தினை அறுத்து கொலை செய்தது தொடர்பிலான தகவல்கள் தெரியவந்தது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சி உறுப்பினருக்கும், வசந்தகுமாருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பினை தொடர்ந்து குறித்த நபரை தனியாக அழைத்து அவரை தாக்குதவதற்காக மூன்று இளைஞர்களுக்கு வசந்தகுமார் என்பவர் மதுவாங்கிக் கொடுத்துள்ளார்.
ஆதனைத்தொடர்ந்து தொலைபேசியில் தன்னாமுனை ஆற்றங்கரைக்கு அரவிந்தன் அழைக்கப்பட்டுள்ளார். அங்கு வைத்து ஏனைய மூன்று இளைஞர்களும் அரவிந்தனை தாக்கியபோது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அரவிந்தனை வசந்தகுமார் என்பவர் வெட்டியமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் சனிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.