இருபது-20 உலக கிண்ணத் தொடரின் சூப்பர் 10 சுற்றில் இலங்கை – நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கை அணி வரலாற்று சாதனையுடன் 90 பந்துகள் மீதமிருக்க 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
5ஆவது இருபது-20 உலக கிண்ணத் தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்றது. இதில் தற்போது சூப்பர்–10 சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சூப்பர்–10 சுற்றில் ஆடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
குழு 1இல் இலங்கை, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளும், குழு 2இல் இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் அணிகளும் இடம் வகிக்கின்றன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
இந்த நிலையில், சிட்டகொங்கில் இன்று குழு 1இல் இடம்பெற்றுள்ள இலங்கையும் நெதர்லாந்து அணிகளும் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய கத்துகுட்டி அணியான நெதர்லாந்தை எதிர்பார்த்ததை போலவே இலங்கை ஆரம்பித்தில் இருந்தே தனது அபார பந்து வீச்சின் மூலம் நிலைகுலையசெய்தது.
நெதர்லாந்து அணியில் கூப்பர்(16ஓட்டங்கள்) தவிர, யாருமே ஒற்றை இலக்க ஓட்டத்தை தாண்டவில்லை. இதனால் அந்த அணி 10.3 ஓவரில் 39 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. உலக கிண்ண வரலாற்றிலேயே ஒரு அணி எடுக்கும் குறைந்த ஓட்டங்கள் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை பந்து வீச்சில் மெத்யூஸ், மெண்டிஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். மாலிங்க 2 விக்கெட்டும், குலசேகர 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 40 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 5 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 40 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
இலங்கை அணியில் குசேல் பெரோரா 14 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். டில்ஷான் 14, ஜயவர்தன 11 ஓட்டங்களுடனும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர். ஆட்டநாயகன் விருது மெத்யூஸ்க்கு வழங்கப்பட்டது.