பிரபல சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனான வெலே சுதாவுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
ஜனாதிபதி தீர்மானிக்கும் திகதி மற்றும் நேரத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிர் பிரியும் வரை வெலே சுதாவை தூக்கிலிடுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
7.05 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடன் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாக
கணப்பட்டதையடுத்தே கம்பொல விதானகே சமந்த குமார என்ற வெலே சுதாவுக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்றின் 2 ஆம் இலக்க அறையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மேல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன இந்த தீர்ப்பினை அறிவித்தார்.
2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி கல்கிசை வித்தியாலய மாவத்தையில் வைத்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் வெலே சுதாவும் அவரது நண்பர் ஒருவரும் 7.05 சுத்தமான ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு எதிராக சட்ட மா அதிபரால் மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் வெலே சுதாவுக்கும் அவரது நண்பருக்கும் எதிராக மனுதாரரான சட்ட மா அதிபரால் இரு குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. போதைப் பொருள் பாவனை மற்றும் போதைப் பொருள் விற்பனை ஆகியனவே அந்த குற்றச் சாட்டுக்களாகும்.
மேல் நீதிமன்றில் 5166/10 என்ற இலக்கத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்த இந்த வழக்கில், விளக்கமறியலில் இருந்த போது வெலிக்கடை சிறைக் கலவரத்தில் வெலே சுதாவின் நண்பர் உயிரிழந்த நிலையில், வெலே சுதாவுக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்தன.
எனினும் வெலே சுதா பிணையில் இருந்த போது நாட்டை விட்டு தப்பிச் சென்று சர்வதேச போதைப் பொருள் வலையமைப்புடன் தொடர்புபட்டு செயற்பட்டு வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பமாகின.
அதன்படி கடந்த நாட்களில் இது தொடர்பிலான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று நேற்று தீர்ப்பளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று கொழும்பு மேல் நீதிமன்றின் தீர்ப்பு அறிவிக்கப்பட இருந்த இரண்டாம் இலக்க அறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
மன்றினுள் நுழையும் அனைவரும் விஷேட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், ஆயுதம் தரித்த பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் அந்த அறையை சூழ பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு மேலதிகமாக புலனாய்வுப் பிரிவினரும் மன்றை சூழ காணப்பட்டனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுவரை தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த வெலே சுதா நேற்று காலை 9.30 மணியளவில் விஷேட பாதுகாப்புக்கு மத்தியில் மன்றுக்கு அழைத்து வரப்பட்டார்.
இந் நிலையில் நீதிவான் பிரீத்தி பத்மன் சுரசேன வழக்கு விசாரணைகளை ஆரம்பித்து, நான்கு வழக்குகளை ஒத்தி வைத்த பின்னர் வெலே சுதா தொடர்பிலான தீர்ப்பு வழங்கும் வழக்கை இறுதியாக விசாரணைக்கு எடுத்தார்.
இதன்போது வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் சிரேஷ்ட சட்ட வாதி சுஹர்ஷி ஹேரத் ஆஜராகியிருந்த நிலையில் வெலே சுதா சார்பில் அவரது சட்டத்தரணிகளான சுரங்க பண்டார, மதுசங்கதியகஹ ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
இதன்போது வெலே சுதாவை குற்றவாளியாக அறிவிக்கும் தீர்ப்பை முதலில் நீதிவான் வாசித்தார். அந்த தீர்ப்பில் முறைப்பாட்டாளர் தரப்பில் கம்பொல விதானகமகே சமந்த குமாரவுக்கு எதிராக இரு குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.
7.05 கிராம் ஹெரோயினை உடன் வைத்திருந்தமை மற்றும் ஹெரோயின் விற்பனை ஆகியனவே அந்த குற்றச் சாட்டுக்களாகும்.
இவ்விரு குற்றச் சாட்டுக்களில் இருந்தும் தான் நிரபராதி என பிரதிவாதி குறிப்பிட்ட நிலையிலேயே விசாரணைகள் ஆரம்பமாகின.
இதனை நிரூபிப்பதற்காக முறைப்பாட்டாளர் தரப்பால் 6 சாட்சியங்கள் இந்த மன்றில் சமர்பிக்கப்பட்டு அவை விசாரணையும் செய்யப்பட்டன.
அதே நேரம் பிரதிவாதியும் சாட்சியமளித்த நிலையில் அவரை அரச சட்டவாதி குறுக்கு கேள்விகளைத் தொடுத்து நெறிப்படுத்தினார். இந்த சாட்சியங்கள் அனைத்தையும் இந்த நீதிமன்றம் ஒப்பீடு செய்து பார்த்தது.
அதன்படி கம்பொல விதானகமகே சமந்த குமாரவின் சொத்துக்கள் தொடர்பில் அரச சட்ட வாதியினால் முன்வைக்கப்பட்ட வாதத்தை இந்த மன்று ஏற்றுக்கொள்வதாக இல்லை.
எனினும் பொலிஸ் பரிசோதகர் ரணவீரவின் சாட்சியத்தை இந்த மன்று ஏற்றுக்கொள்கின்றது.
அதேபோல் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகரின் சாட்சியத்தை மன்று விஷேடமாக கருதுகின்றது. அவரது சாட்சியத்தை மன்று சந்தேகங்கள் எதுவுமின்றி அப்படியே ஏற்றுக்கொள்கின்றது.
அத்துடன் அதனை உறுதிப்படுத்தும் விதமாக உதவி இரசாயன பகுப்பாய்வாளரினால் வழங்கப்பட்ட சாட்சியம், கைப்பற்றப்பட்ட ஹெரோயின் சீல் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் இந்த மன்று ஏற்றுக்கொள்கின்றது.
அதன்படி மன்றுக்கு முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் பிரகாரம் 7.05 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடன் வைத்திருந்தமை மற்றும் விற்பனை தொடர்பிலான குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் கம்பொல விதானகே சமந்த குமாரவை இந்த நீதிமன்றம் குற்றவளியாக அறிவிக்கின்றது. என்று நீதிவான் பிரீத்தி பத்மன் சுரசேன அறிவித்தார்.
அதனையடுத்து தண்டனை விபரங்களை அறிவிக்க முன்னர் இரு தரப்பு சட்டத்தரணிகளுக்கும் ஏதேனும் கருத்துக்களை முன்வைக்க் விரும்பினால் முன்வைக்குமாறு நீதிபதி கோரினார்.
அரச சட்டத்தரணி
அதன்படி முதலில் எழுந்த, அரசின் சிரேஷ்ட சட்ட வாதி பிரஹர்ஷா ஹேரத்,
2008.12.04 அன்று 7.05 கிராம் ஹெரோயின் உடன் கைது செய்யப்பட்ட இந்த பிரதிவாதிக்கு எதிரான சாட்சியங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் 85/5 பிரிவின் கீழ் இவருக்கு ஆயுள் தண்டனையோ அல்லது மரண தண்டனையோ வழங்கப்படலாம்.
இவருக்கான தண்டனை வழங்கப்படும் போது அது போதைப் பொருள் பாவனையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
இந்த குற்றவாளி இலங்கைக்கு வெளியே சர்வதேச ரீதியாக போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு நாட்டுக்குள் போதைப் பொருளை கடத்தியவர் என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
அது தொடர்பிலும் தக்வல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
எனவே சர்வதேச ரீதியாக போதைப் பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய ஒருவருக்கு தண்டனை வழங்கும் போது அந்த தண்டனையானது தேசிய, சர்வதேச மட்டங்களை கருத்தில்கொள்ளப்படல் வேண்டும்.
தேசிய ஒளதடங்கள் அதிகாரசபையின் 2014 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின் பிரகாரம் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் போதைப் பொருள் காரணமாக பாதிக்கப்பட்டு மீட்கப்பட முடியாத நிலையில் உள்ளனர்.
2008 ஆம் ஆண்டின் பின்னர் நட்டில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் இவரது பங்களிப்பு அதிகமாகும். இந் நிலையில் இவருக்கு வழங்கப்படும் தண்டனை போதைப் பொருள் பாவனை, விற்பனை தொடர்பில் சமூகத்துக்கு ஒரு செய்தியை கூற வேண்டும்.
சர்வதேச ரீதியாக இலங்கையை போதைப் பொருள் கடத்தல் மத்திய நிலையமாக பயன்படுத்தும், பயன்படுத்த எத்தனிக்கும் நபர்களுக்கு ஒரு செய்தியை இவருக்கு வழங்கும் தண்டனை சொல்ல வேண்டும் என தனது தண்டனை தொடர்பிலான கருத்தை அவர் குறிப்பிட்டார்.
வெலே சுதாவின் சட்டத்தரணி
இதனையடுத்து எழுந்த வெலே சுதாவின் சட்டத்தரணி பண்டார, எந்த கருத்தினையும் கூற விரும்பவில்லை என கூறிஅமர்ந்தார்.
இதனையடுத்து தண்டனை தொடர்பிலான தீர்ப்பை நீதிவான் அறிவிக்க ஆரம்பித்தார்.
”7.05 கிராம் போதைப் பொருள் பாவனை தொடர்பிலும் விற்பனை தொடர்பிலும் குற்றவாளியாக காணப்பட்டுள்ள இந்த நபருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை குறித்து அரச சட்டவாதி தமது கருத்தினை தெரிவித்தார்.
பிரதிவாதியின் சட்டத்தரணி எதிராகவோ ஆதரவாகவோ எவ்வித கருத்தினையும் முன்வைக்கவில்லை.
இந் நிலையில் ஹெரோயின் பாவனையால், விற்பனையால் தனி நபருக்கு, குடும்பத்துக்கு, ஒரு ஊருக்கு, ஒரு பிரதேசத்துக்கு, ஒரு சமூகத்துக்கு ஏன் நாட்டுக்கே ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து நான் அவதானம் செலுத்துகின்றேன். இது தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள பல தீர்ப்புக்கள் மீது நான் அவதானம் செலுத்துகின்றேன்.
எனவே குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனை ஏனையோருக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும். அதன்படி குற்றவியல் தண்டனை சட்டக் கோவையின் 280 ஆவது அத்தியாயத்தின் பிரகாரம் குற்றவாளிக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கின்றேன்.
என கூறிய நீதிபதி சுரசேன, குற்றவாளியான வெலே சுதாவை நோக்கி, ‘ உமக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்பதற்கு ஏதேனும் விஷேட காரணங்கள் உள்ளனவா?’ என வினவினார்.
இதன்போது குற்றவாளிக்கூண்டில் இருந்தவாறு வெலே சுதா நீதிபதியை நோக்கி பேசினார்.
”என்னை கைது செய்யும் போது நான் கல்கிசை பகுதிக்கு ஒரு வழக்கிற்கு ஆஜராகவே சென்றிருந்தேன். பொலிஸார் என்னை வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளவே கூட்டிச் சென்றனர். இந்த குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. நான் நிரபராதி. அவ்வளவுதான். என்றார்.
இதனைத் தொடர்ந்து மன்றில் அனைவரும் எழுந்து நிற்க, மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. கதிரையில் இருந்து எழுந்து நின்ற நீதிபதி சுரசேன தீர்ப்பை வாசித்தார்.
இலங்கை ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி குறிக்கும் திகதி மற்றும் நேரத்தில், குற்றவாளியாக காணப்பட்டுள்ள கம்பொல விதானகமகே சமந்த குமாரவை வெலிக்கடை சிறைச்சாலையில் உயிர் பிரியும் வரை தூக்கிலிடுமாறு இந்த மன்று உத்தரவிடுகின்றது. என தீர்ப்பறிவித்து பேனையை உடைத்தார்.
இந் நிலையில் இதுவரை புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்த வெலே சுதா நேற்று பிற்பகல் வைத்திய பரிசோதனைகளுக்கு பின்னர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வெலிக்கடை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.