மன்னார் மாவட்டத்தின் பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய கிராமங்கள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
வெளி மாவட்டத்திலிருந்து கட்டிட வேலைக்காக மன்னார் பட்டித்தோட்டப் பகுதிக்கு வந்திருந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை கடந்த 8 ஆம் திகதி இனங்காணப்பட்டதையடுத்து குறித்த பகுதியிலுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து அவருடன் பணியாற்றிய ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. இவர்கள் கட்டத் தொழிலாளியுடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ள நிலையில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தற்போது தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந் நிலையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.