கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஆக்ராவை சேர்ந்த ஒரு பெண், கணவனின் வாயில் வாயை வைத்து சுவாசிக்க செய்து அவரை மீண்டும் உயிர்ப்பிக்க முயன்றார். ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அந்த மனைவியின் முயற்சி வீணாய் போனது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அவாஸ் விகாஸ் 7ஆம் பிரிவில் வசிப்பவர் ரேணு சிங்கால். இவரது கணவன் ரவி சிங்கால் (47) என்பவருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரேணு சிங்கால், ரவி சிங்காலை சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.
ஆட்டோ மூலமாக மருத்துவமனைக்கு வந்த ரவி சிங்காலின் உடல்நிலை மோசமடைந்ததால், அவரைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில், ரேணு அவருக்கு வாய் வழியாக ஆக்சிஜன் அளிக்க முயன்றார். ஆனாலும், ரவி மூச்சு விடமுடியாமல் உயிரிழந்தார். இதனால் கலக்கமடைந்த ரேணு அழுது கதறிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.