நடிகை குஷ்புவை ராஜ வம்சத்துப் பெண் சாயலில், பிரபல போட்டோகிராபர் வெங்கட்ராம் எடுத்து வெளியிட்டிருந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
திடீரென இப்படி ஒரு போட்டோஷூட் எதற்கு? எனிதிங் ஸ்பெஷல்? இந்தக் கேள்வியோடு குஷ்புவை அணுகினால், கலகலவெனச் சிரிக்கிறார்.
காரணம், ரொம்பவே சிம்பிள். போன வருஷம் டிசம்பரில் சென்னையைத் தாக்கின வர்தா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாச்சும் செய்யணும்னு ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிளில் பேசி, நிறைய பிளான் பண்ணினோம்.
நிதி திரட்டி மக்களுக்குக் கொடுக்கும் வகையில், வித்தியாசமான கெட்டப்ல போட்டோஷூட் பண்ணலாம்னு ஒரு யோசனை வந்துச்சு. போட்டோகிராபர் வெங்கட்ராம்கிட்ட பேசினோம். ‘சூப்பர் ஐடியா. பக்காவா பண்ணலாம்’னு சொன்னார்.
அதுக்கப்புறம், ‘நார்மலான போட்டோஷூட் மாதிரி இருக்கக் கூடாது. பார்த்தவுடனே ‘வாவ்!’னு சொல்லும்படி இருக்கணும். அதில் பாரம்பர்யமும் கலைநயமும் இருக்கணும்னு முடிவெடுத்தோம்.
எடுக்கும் போட்டோக்களை ஃப்ரேம் பண்ணி கண்காட்சி நடத்தலாம், அல்லது விற்பனை செய்து, வர்தா புயலால் பாதித்த மக்களுக்குக் கொடுக்கலாம்னு முடிவெடுத்தோம்.
நடிகை சுஹாசினியும் வெங்கட்ராமும்தான் நிறைய மெனக்கெட்டு பிளான் பண்ணினாங்க. இறுதியா, ஓவியர் ரவிவர்மாவின் ஃபேமஸ் ஓவியத்தைப் பிரதிபலிக்கிற மாதிரி போட்டோஷூட் பண்றதா முடிவாச்சு.
எனக்கும் என் ஃப்ரெண்ட்ஸ் பலருக்கும் பொருத்தமான காஸ்டியூம், அக்ஸசரீஸ் விஷயங்களை சுஹாசினி செலக்ட் பண்ணினாங்க” என்கிறார் குஷ்பு.
போட்டோஷூட் சமயத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான விஷயங்களைப் புன்னகையுடன் சொல்ல ஆரம்பித்தார். “எல்லா பிளானிங்கும் முடிவாகி, ஜனவரி மாசம் போட்டோஷூட் பண்ணினோம்.
எனக்கு மகாராஷ்டிர ராஜ வம்சத்துப் பெண் சாயலில் ஷூட் நடந்துச்சு. என் ஃப்ரெண்ட்ஸ் மற்றும் நடிகைகளான லிசி, ஜெயஶ்ரீ, கிருத்திகா சுப்ரமணியம் உள்ளிட்ட பலருக்கும் பல கெட்டப். எங்களை அந்தந்த கெட்டப் டிரஸ், அக்ஸசரீஸில் பக்காவா ரெடி பண்ணினது சுஹாசினி.
காஸ்டியூம் மட்டுமல்லாமல், ரவிவர்மா ஓவியம் மாதிரியே கையில் பழங்கள் மற்றும் வேறு பொருள்களை வெச்சுட்டு, பல மணி நேரம் போட்டோஷூட் நடந்துச்சு. சில காரணங்களால் டெக்னிக்கலான போட்டோஷூட் புராசஸை முடிக்க தாமதமாச்சு.
அதனால், நிதி திரட்ட வேறு ஒரு நிகழ்ச்சியை நடத்திட்டோம். அந்த நிகழ்ச்சிக்கு நடிகர் அமிதாப்பச்சன் சார் வந்திருந்தார்.
அதனால், ராணி கெட்டப்ல எடுத்த புகைப்படங்களை அப்படியே வெச்சுட்டோம். அந்தப் புகைப்படங்களையே சில தினங்களுக்கு முன்னாடி, வெங்கட்ராம் வெளியிட்டிருக்கிறார்” என்கிறார்.
புகைப்படத்துக்கு நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ் வருவதில் பூரித்திருக்கும் குஷ்பு, “சினிமாவில் நிறைய கெட்டப் போட்டிருக்கேன். ஆனால், இந்த போட்டோஷூட் ரொம்பவே தனித்துவமாகவும் பாரம்பர்யமாகவும் இருந்ததால், ரசிகர்கள்கிட்டே நல்லா ரீச் ஆகியிருக்கு.
இப்போ, நாங்களே புதுசா பார்த்துப் பார்த்து ரசிக்க ஆரம்பிச்சுட்டோம். எல்லா கிரெடிட்டும் கோஸ் டு ரவிவர்மா, வெங்கட்ராம் அண்டு சுஹாசினி. ‘உன் கெட்டப் ஆஸம். உன் ஆக்டிங் கரியர்லயே இதுதான் பெஸ்டு’னு பலரும் சொன்னாங்க.
‘ரவிவர்மா ஓவியத்தைப் பார்க்கிறப்போ எல்லாம் எனக்கு உங்க ஞாபகம்தான் வரும். அந்த அளவுக்கு உங்களை மாடலாவெச்சு அந்த ஓவியத்தை வரைஞ்ச மாதிரி இருக்கும்.
அதனால்தான், அந்த மாதிரி போட்டோஷூட் பண்ணினேன். ரொம்ப சந்தோஷம்’னு வெங்கட்ராம் சார் சொன்னார்” எனப் புன்னகைக்கிறார் குஷ்பு.