சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாது லா எல்லைக்கு நேற்று சென்ற பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சீன வீரர்களுக்கு நமஸ்தே என இந்தியில் வணக்கம் சொல்ல கற்றுக்கொடுத்தார்.
சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாது லா எல்லைக்கு நேற்று சென்ற பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சீன வீரர்களுக்கு நமஸ்தே என இந்தியில் வணக்கம் சொல்ல கற்றுக்கொடுத்தார்.
பாதுகாப்பு துறை மந்திரியாக சமீபத்தில் பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் எல்லையோர பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பு மற்றும் தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிப்பது குறித்து ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன்படி, சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநிலம் சென்ற அவர் ராணுவ உயரதிகாரிகள், அம்மாநில முதல்வர் மற்றும் கவர்னருடன் ஆலோசனைகள் நடத்தினார். மேலும், சியாச்சின் உச்சியில் உள்ள ராணுவ முகாமுக்குச் சென்று அங்குள்ள வீரர்களிடம் கலந்துரையாடினார்.
இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாது லா பகுதிக்கு நிர்மலா சீதாராமன் நேற்று பயணம் மேற்கொண்டார்.
சீன எல்லைக்கு மிக அருகில் இருக்கும் இப்பகுதிக்கு முதன் முறையாக அவர் வருகை தந்துள்ளார். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ – திபெத் எல்லைப்பாதுகாப்பு படை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து, அங்குள்ள இந்திய – சீன எல்லைக்கு சென்ற அவர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சீன ராணுவ வீரர்களிடையே உரையாடினார்.
அப்போது, ஒவ்வொரு வீரர்களும் அவருக்கு சீன மொழியில் வணக்கம் தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் நமஸ்தே என கூறுமாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அதற்கு அர்த்தம் புரியாமல் விழித்த சீன வீரர்களிடம், நமஸ்தேவுக்கான அர்த்தத்தை கூறினார். இதனையடுத்து, சீன வீரர்கள் சிரித்துக்கொண்டே நமஸ்தே என கூறினர்.