இந்தியாவின் பிரதமராக கடந்த 2014ஆம் ஆண்டு பதவியேற்ற மோடி அந்த ஆண்டு தீபாவளியை காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.
பின்னர், 2015ஆம் ஆண்டு தீபாவளியை பஞ்சாபில் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்களுடனும் கடந்த ஆண்டு தீபாவளியை இமாசலப் பிரதேச எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடனும் கொண்டாடினார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ராணுவத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடிவரும் பிரதமர் மோடி, இந்த ஆண்டு தீபாவளியை 2ஆவது முறையாக காஷ்மீரில் கொண்டாடியுள்ளார்.
காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ள குரூஸ் முகாமிற்குச் சென்ற அவர், ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து இனிப்புகளை வழங்கினார்.
அப்போது அவர்களிடம் பேசிய மோடி, “இந்த ஆண்டு தீபாவளியை நான் எனது குடும்பத்துடன் கொண்டாட விரும்பினேன்.
அதனால்தான் இராணுவ வீரர்களிடையே கொண்டாடிக்கொண்டிருக்கிறேன். நான் ராணுவ வீரர்களை எனது குடும்பமாக கருதுகிறேன்” என்றார்.
ராணுவ வீரர்கள் தொடர்ந்து யோகா செய்வதால் அவர்கள் மன அமைதியுடன் வாழ்வதற்கு அது உதவுவதாகக் கூறிய மோடி, ராணுவ வீரர்கள் கடமை முடிந்த பிறகு ஆயுதப் படைகளை விட்டு வெளியேறிய பின்னர் சிறந்த யோகா பயிற்றுநர்கள் ஆக முடியும் என்றும் கூறினார்.
மேலும், பார்வையாளர் புத்தகத்தில், “உங்களுக்குப் பிரியமானவர்களை பிரிந்து தாய்நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறீர்கள்.
இது உங்கள் தியாகத்தின் உயர்வைக் காட்டுகிறது. எல்லையில் உள்ள வீரர்கள் அனைவரும் வீரம் மற்றும் அர்ப்பணிப்பின் சின்னம்” என எழுதியிருக்கிறார்.