மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிப்பதற்காக கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு மந்திரவாதி வரவழைக்கப்பட்டதற்கு, அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதையடுத்து மலேசிய பிரதமர் அலுவலகம், “மந்திரவாதியை நாம் ஏர்போர்ட்டுக்கு அனுப்பவில்லை” என அறிவித்துள்ளது.
மலேசியன் விமானம் எங்கே போனது என்பது இன்னமும் அறியப்படாத நிலையில், மந்திரவாதிகள் குழு ஒன்று கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு (விமானம் புறப்பட்ட இடம்) வந்து சேர்ந்தது.
பிரதம மந்திரவாதி இப்ராஹிம் மாத் ஸாயின் (இவருக்கு டாடுக் மகாகுரு என்ற பட்டம் உள்ளது), தமது சிஷ்யர்களுடன் அங்கு வந்தார். விமானத்தை கண்டுபிடிக்கும் மந்திர சடங்குக்காக, இரண்டு முழு தேங்காய்கள், ‘ஸாம்-ஸாம்’ மந்திர தண்ணீர், மந்திரக் கோல், மந்திர ஜமுக்காளம் ஆகியவற்றை மந்திரவாதி கொண்டுவந்தார்.
விமான நிலையத்தில் மந்திர ஜமுக்காளத்தை விரித்து, அதில் மந்திரவாதியும், சிஷ்யர்களும் ஏறி அமர்ந்தனர். மந்திரம் சொல்லும்போது, இவர்கள் ஏறி அமர்ந்துள்ள மந்திர ஜமுக்காளம் ஒரு படகாக மாறி, கடலில் சென்று விமானம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் என மந்திரவாதி தெரிவித்தார்.|
(ஆனால் மந்திர ஜமுக்காளம் பறக்கவும் இல்லை, மிதக்கவும் இல்லை, இருந்த இடத்தை விட்டு அசையவும் இல்லை) இதனால் வேறு வழியில் விமானத்தை கண்டுபிடிக்க ஆலோசனை செய்துவிட்டு வருவதாக கூறிய மந்திரவாதி, தேங்காய் சகிதம் புறப்பட்டு போய் விட்டார்.
இந்த மந்திரவாதியை மலேசிய அரசே ஏற்பாடு செய்தது என்ற தகவல் மலேசிய மீடியாக்களில் வெளியானது. அதையடுத்து, இந்த மந்திர சடங்குக்கு மலேசிய இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த மார்க்க அறிஞர்கள் தங்களுடைய கடும் கண்டனங்களை வெளியிட்டனர்.
எதிர்க்கட்சி தலைவர்கள், “இதனை தேசிய அவமானமாக கருத வேண்டும். இவர்களை அழைத்து வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றனர்.
இவர்களை தாம் ஏற்பாடு செய்ததாக வெளியான செய்தியை மறுத்துள்ள பிரதமர் அலுவலக அமைச்சகம், “இஸ்லாமிற்கு புறம்பான இத்தகைய செயல்களில் எமக்கு நம்பிக்கை இல்லை. இந்த விவகாரத்தை சீரியசாக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்கப் போகிறோம்” என அறிவித்துள்ளது.
மலேசிய அரசுத் துறை மார்க்க தலைவர்கள், “இது இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானது. இது குறித்து பத்வா (ஆழ்ந்த மார்க்க அறிவுடன் தெரிவிக்கப்படும் கருத்து) வெளியிடப்படும், இதனை மந்திரவாதி ஏற்க மறுத்தால் அவரும் சிஷ்யர்களும் கைது செய்யப்படுவார்கள்” என்று கூறியுள்ளனர்.
மந்திரவாதி ‘டாடுக் மகாகுரு’ இப்ராஹிம் மாத் ஸாயின் இதுகுறித்து இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.